PUBLISHED ON : ஜூன் 21, 2013

பொதுவாக, நீரை விட குறைவான அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மிதக் கின்றன. நீரை விட அதிக அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மூழ்கின்றன.
இறந்த மனிதனது உடல் நீரில் மிதப்பது, ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஆகும். ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு, அப்பொருளின் கன அளவிற்குச் சமமாக இருக்கும். இதுவே ஆர்கிமிடிஸ் தத்துவம் ஆகும்.
பொதுவாக, மனிதனின் உடல் நீரின் அடர்த்தியை விட குறைவானதே. அதனால் உயிரோடு இருக்கும்போது நீரில் விழுந்து விட்டால் சில வினாடிகள் மிதக்கவே செய்வான். ஆனால், அவனது வாய், மூக்கு வழியாக உடலுக்குள் நீர் சென்று அவனது உடல் அடர்த்தி, நீரின் அடர்த்தியை விட அதிகரித்து விடுகிறது. எனவே, அவன் நீரில் மூழ்கி விடுகிறான்.
அம்மனிதன் ஒருவேளை இறந்து விட்டால், அவனது உடல் நீரிலேயே கிடந்து விரிவடைகிறது. உடலின் கன அளவு அதிகரிக்கும்போது, தானாகவே அவன் அடர்த்தி குறைந்து விடுகிறது. எனவே, இறந்த உடல் மேலே எழும்பி மிதக்க ஆரம்பிக்கிறது.
இதை ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவதானால், இறந்த மனிதனது உடலால் வெளியேற்றப்பட்ட நீரின் எடை, அவனது உடல் எடையை விட அதிகரித்துவிடுகிறது. ஆதலால் இறந்த மனிதனது உடல் நீரில் மிதக்கிறது.
