PUBLISHED ON : ஜூன் 27, 2020

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், இந்து மேல்நிலைப் பள்ளியில், 1998ல், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்த போது திடுக்கிட்டேன். அது, இருபாலரும் படிக்கும் பள்ளி.
அதுவரை, பெண்களுக்கான பிரத்யேக பள்ளியிலேயே படித்ததால், மாணவர்களைக் கண்டு பயந்து நடுங்கியபடி இருந்தேன். வகுப்பில் நுழையும் போதே, கைகள் படபடக்கும்; கேள்வி கேட்டால் வியர்த்து கொட்டும்.
இதைக் கண்ட வகுப்பாசிரியர் குணசேகரன், 'உன் லட்சியம் என்ன...' என்று கனிவுடன் கேட்டார். படபடப்புடன், 'பெரிய வேலைக்கு செல்ல வேண்டும்...' என்று கூறினேன்.
மென்மையாக சிரித்தவர், 'பயந்து நடுங்கினால், பிற்காலத்தில் எப்படி நேர்முகத்தேர்வுகளை எதிர்கொண்டு, பெரிய வேலைக்கு செல்ல முடியும்; உடன் படிப்பவர்களை, சகோதரர்களாக எண்ணி பழகு...' என்று, தைரியம் ஊட்டினார்.
அது நம்பிக்கையை வளர்த்தது. சகஜ நிலைக்கு வந்தேன். உறுதியுடன் படித்தேன். தொடர்ந்து பட்டம் பெற்று, மென்பொருள் நிறுவனத்தில், பணியில் சேர்ந்தேன். பணியாளர்களை தேர்வு செய்யும் மனிதவள நிர்வாக பிரிவில் உயர் பதவி வகிக்கிறேன்.
எனக்கு, 39 வயதாகிறது; ஆண்கள் மீதான பயத்தை, அன்று அந்த ஆசிரியர் போக்காமல் இருந்திருந்தால், படிப்பிற்கு முழுக்கு போட்டிருப்பேன். எனக்கு உறுதுணையாகி, உயர்வை துாண்டியவரை நன்றியுடன் போற்றுகிறேன்.
- ஓவியா, சென்னை.
