PUBLISHED ON : ஜூலை 15, 2011

இங்கிலாந்தில் ஜேக்கப் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி ரேச்சல். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியே திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு ரேச்சல் கணவன் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினாள். கணவனுக்குப் போட்டியாகவே நடக்கத் தொடங்கினாள். குடும்பம் சீரழிந்து விடுமே என்பதற்காக ஜேக்கப் விட்டுக் கொடுத்து வந்தார். மனைவி என்ன சொன்னாலும் மறுத்துப் பேசுவதில்லை.
அப்படி மறுத்துப் பேசினாலும் அவள் விடமாட்டாள். 'உனக்கென்ன தெரியும்? நீ பருத்தி பயிரிடும் விவசாயி. நானோ அலுவலகத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவள். எனக்குதான் எல்லாம் தெரியும் பேசாமல் வாயை மூடு!' என்று மரியாதை இல்லாமல் எடுத்தெறிந்து பேசுவாள்.
'எக்கேடாவது கெட்டு தொலைக்கட்டும்' என்று ஜேக்கப் வாயை மூடிக் கொண்டு இருந்து விடுவார்.
ஒருநாள் ஜேக்கப் வீட்டில் படுக்கையிலேயே படுத்துக் கொண்டிருந்தார். மாலையில் அலுவலகம் சென்று திரும்பிய மனைவி, ''ஜேக்கப்...! ஏன் படுத்துக் கொண்டாய்? உன் பருத்தி விவசாயம் என்ன ஆயிற்று? உழுது உழுது அறுவடை செய்து வந்ததால், அதன் மீது எரிச்சல் வந்து விட்டதா?'' என அலட்சியமாகக் கேட்டாள்.
''ஒரு விவசாயிக்கு விவசாயத்தின் மீது எப்போதும் எரிச்சல் வரவே வராது. எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் படுத்திருக்கிறேன்!'' என்றார்.
''மருந்துவரிடம் சென்றாயா...?''
''செல்லவில்லை...!''
''சரி...வா... போகலாம்...!''
''என்னால் எழவே முடியவில்லை...! எப்படிப் போவது...?''
''அப்படியானால் நான் மருந்துவரை அழைத்துக் கொண்டு வருகிறேன். நீ பேசாமல் படுத்திரு...'' என்று சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்கப் போனாள்.
ஜேக்கப் தன் மனைவியின் நடத்தை வியப்பாக இருந்தது. தன்மீது காட்டும் கரிசனத்தைக் கொண்டு அவள் திருந்தியிருக்கலாம் என, எண்ணிக் கொண்டார்.
மூன்றுமணி நேரத்திற்கு பின் ஒவ்வொரு மருந்துவனையாக அலைந்து ஒரு மருந்துவரைப் பிடித்து வந்தாள்.
மருந்துவர் உள்ளே நுழைந்து ஜேக்கப் படுக்கையறைக்கு வந்தார்.
''ஜேக்கப் ஜேக்கப்...!'' என்று எழுப்பினார்.
ஜேக்கப் பேசவில்லை, ''ஜேக்கப்...உனக்கு என்ன செய்கிறது? மெதுவாக எழும்பு ஜேக்கப்...!'' என்று சத்தமாகச் சொன்னார்.
அப்போதும் ஜேக்கப் எழவில்லை. மல்லாந்து படுத்திருந்த அவரைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அப்போதும் ஜேக்கப் இடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. உணர்வற்ற மரக்கட்டை போலக் கிடந்தார். மருத்துவர் மூக்கின் மீது விரல் வைத்துப் பார்த்தார். நெஞ்சின் மீது காது வைத்துப் பார்த்தார். தன் கழுத்தில் மாட்டியிருந்த ஸ்டொதாஸ்கோப்பின் மூலம் பல இடங்களிலும் வைத்து அழுத்தி அழுத்திப் பார்த்தார். ஜேக்கப் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
ரேச்சலைப் பார்த்து, 'சாரி... மேடம்! உங்கள் கணவர் உயிருடன் இல்லை. இறந்து விட்டார்!'' என்றார்.
''அப்படியா...? என்னிடம் சொல்லவே இல்லையே...! படுபாவி சொல்லாமலேயே இறந்து விட்டார். டாக்டர்! இந்த ஆள் கடைசிவரை என்னிடம் மோசமாகவே நடந்திருக்கிறார். அதற்கு இதுவே சாட்சி...! ''என்றாள்.
''மேடம்! இறந்துவிட்டார் என்பதற்காக சான்றிதழ் எழுதித் தரட்டுமா?'' என்றார் மருந்துவர்.
''பின்னே...? எழுதிக் கொடுங்கள். அதை வைத்துத்தானே இந்த மனிதனை அடக்கம் செய்ய வேண்டும்? அதன் பிறகுதானே வாரிசுரிமைச் சான்றிதழ் பெற்று அவருடைய சொத்துகளையும் வங்கிப் பணத்தையும் நான் பெற்றுக் கொள்ள முடியும்? இவர் இறந்து போய் விட்டார் என்பதை உறுதிப்படுத்தி உடனே சான்றிதழ் எழுதிக் கொடுங்கள்!'' என்று அவசரப்படுத்தினாள்.
மருத்துவர் அவரது முகவரி பதித்த ஒரு வெள்ளைத் தாளில் மருத்துவ ஆய்வின்படி ஜேக்கப் இறந்துவிட்டதாக உறுதிச் சான்றிதழ் எழுதிக் கொடுத்துவிட்டு வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
ரேச்சல் பிணத்தை எப்போது எடுப்பது யார் யாரிடமும் சொல்லுவது என்பதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அப்போது ''ரேச்சல்... ரேச்சல்'' என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.
படுக்கையில் கிடந்த ஜேக்கப் எழுந்து உட்கார்ந்து ''ரேச்சல்...! ஒரே தாகமாக இருக்கிறது.கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா...!'' என்றார்.
''தண்ணீரா? பிணம் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படியே காலைக் கையை ஆட்டாமல் படுத்திருக்க வேண்டும்!'' என்று நாற்காலியில் அமர்ந்திருந்தவள் எழுந்து வந்து அதட்டலுடன் சொன்னாள்.
''ரேச்சல்!... நான் சாகவில்லை. எனக்கு மூச்சுத் திணறல்தான். மருந்துறவர் அப்படியும் இப்படியும் புரட்டி எடுத்ததிலும் நெஞ்சை மடேர் மடேர் எனத் தட்டியதிலும் சரியாகி விட்டது. இப்போது நன்றாக இருக்கிறேன். நூறு வயதுவரை உயிரோடிப்பேன். இப்போது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா...!''
நா வறண்டதால் தண்ணீர் கேட்டுக் கெஞ்சினார்.
''ஜேக்கப்...! நீ மிகப் பெரிய முட்டாள் என்பதை இப்போது நிரூபிக்கிறாய். நீ செத்துப் போய் விட்டாய். உயிருடன் இருக்க முடியவே முடியாது. தண்ணீர் வேண்டாம். பேசாமல் படுத்துக் கொள்!''
''ரேச்சல்! என்னை நம்பு நான் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறேன்.''
''நீ செத்துவிட்டாய் என்று டாக்டரே சொல்லி விட்டார். நான் டாக்டரைத்தான் நம்புகிறேன். அவர் படித்தவர். உன்னை நம்ப மாட்டேன். நீ படிக்காதவன். முட்டாள்... பேசாமல் படுத்துக் கொள். நீ செத்துதான் ஆகவேண்டும். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உன்னை அடக்கம் செய்ய வேண்டும்!'' என்று வார்த்தையால் வதைத்தாள் ரேச்சல்.
ஜேக்கப் வாயடைத்துப் போனார்.
இவளுடன் குடும்பம் நடத்துவதை விட உயிருடன் சமாதி ஆவதே மேல்' என நினைத்து அவள் சொன்னபடியே கண்களை மூடி படுத்துக் கொண்டான்.
***
