PUBLISHED ON : அக் 05, 2012
உழவன் ஒருவன், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வெளியூருக்கு வந்தான். மாலைநேரம் வந்தது. ஒரு மரத்தில், தன் மாட்டை கட்டிவிட்டு அங்கேயே ஓய்வு எடுத்தான்.
அவனைப் போலவே வணிகன் ஒருவனும், நிறைமாதமாக இருந்த தன் மாட்டை ஓட்டிக்கொண்டு வந்தான். அந்த மரத்தில் தன் மாட்டையும் கட்டினான். சிறிது நேரத்தில், இருவரும் நண்பர்கள் ஆயினர்.
''இரண்டு மணி நேரம் விழித்திருந்து ஒருவன் மாடுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த இரண்டு மணி நேரம், இன்னொருவன் விழித்திருந்து பார்க்க வேண்டும்,'' என்றான் வணிகன்.
''நீ முதலில் விழித்திருந்து பார். பிறகு என்னை எழுப்பி விடு; நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்ற உழவன், குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.
வணிகன் விழித்திருந்தான். உழவனின் மாடு பெண் கன்றையும், வணிகனின் மாடு ஆண் கன்றையும் ஈன்றது.
இதைப்பார்த்த வணிகன், ஆண் கன்றைவிடப் பெண் கன்று அதிக விலை பெறும் என்று உணர்ந்தான். உழவனைப் பார்த்தான்; அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த வணிகன், கன்றுக் குட்டிகளை மாற்றி வைத்தான்.
பொழுது விடிந்தது.
தூக்கத்திலிருந்த உழவன் எழுந்தான். அவனைப் பார்த்து வணிகன், ''இரவு நம் இரண்டு மாடுகளும் கன்று போட்டன. உன்னை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து நானே எல்லா வேளைகளையும் செய்தேன். நாம் புறப்பட வேண்டும். உன் மாட்டையும், கன்றையும் எடுத்துக்கொள்,'' என்றான்.
என்ன நடந்திருக்கும் என்பது உழவனுக்கு புரிந்தது. 'தூங்கியவனுக்கு காளைக் கன்று தான் கிடைக்கும்' என்று சொல்லிக்கொண்டே, மாட்டையும், கன்றையும் ஓட்டிக்கொண்டு புறப்பட்டான்.
அதுக்குத்தான் தூங்காமல் விழிப்பாயிருங்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கேட்டால்தானே!
***
