
மதுரையில், ராமு தாத்தா என்பவர், கடந்தாண்டு ஜூலையில் இறந்து போனார். இவர், இறக்கும் வரை, ஏழை - எளியவர்களுக்கு, 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கினார்.
இவர், சாப்பாடு வழங்கிய காலத்தில், 'வாரமலர்' இதழில் தான், முதன் முதலாக செய்தி வெளியானது.
ராமு தாத்தா பற்றிய செய்தியை படித்த, சென்னையில் உள்ள அகில இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விற்பனையாளர் சங்க தலைவர், முகேஷ் குப்சந்தானி, 'ஏழையாக இருந்த, ராமு தாத்தாவே, 10 ரூபாய்க்கு சாப்பாடு போட்டு இருக்கும்போது, ஓரளவு வசதியாக இருக்கும் நாம் ஏன், செய்யக் கூடாது...' என்று, சிந்தித்தார்.
உடனடியாக, நல்ல அரிசி, தரமான காய்கறிகளுடன், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், தொழிலாளர்கள் நிறைந்த, சிங்கண்ண செட்டி தெருவில், 10 ரூபாய்க்கு, சாப்பாடு வழங்க துவங்கினார்.
ஒருவர், வயிறு நிறைய சாப்பிடும் அளவிற்கு, சாதம், சாம்பார், ரசம், மோர், ஒரு கூட்டு என்று, 'பார்சல்' செய்து, அந்த பை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
முதல் நாள், 100 'பார்சல்' போட்டார். எல்லாம் காலியாகி விட்டது. இரண்டு மாதங்களில், இதன் விற்பனை, நாளொன்றுக்கு, 350ல் வந்து நிற்கிறது. மதியம், 1:00 மணி முதல், சாப்பாடு தீரும் வரை கிடைக்கும்.
திங்கள், செவ்வாய் - முழு சாப்பாடு; புதன் - சாம்பார் சாதம்; வியாழன் மற்றும் வெள்ளி - முழு சாப்பாடு; சனியன்று - 'வெஜிடேபிள் ரைஸ்' என்று, வாரத்தில் ஆறு நாட்களும், விதவிதமாக கொடுக்கிறார். முழு சாப்பாட்டில், ஒரு நாள், சாம்பார்; ஒரு நாள், காரக்குழம்பு; ஒரு நாள் மோர்க்குழம்பு என்று அசத்துகிறார்.
'பல நாள், நானும் இந்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறேன் என்பதால், சமையல் கலைஞர்கள் எப்போதும் கவனத்துடன் இருப்பர். தவிர, காலை, 8:00 மணிக்கே, நானும் சமையலறைக்கு, 'விசிட்' செய்து விடுவேன். காரணம், எந்த விதத்திலும் உணவின் தரம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக!
'என் அம்மா - அப்பா மற்றும் குருநாதர் எல்லாம், 'அன்பை பகிர்ந்து கொள். அது, பல மடங்காக திரும்பி வரும்...' என்பர். என்னால் முடிந்தளவிற்கு அன்பை பகிர்ந்து கொள்ளும் செயல் தான் இது.
'என்னால் இலவசமாகவே இந்த உணவு, 'பார்சலை' கொடுக்க முடியும். ஆனால், இலவசம் என்றால், வாங்கும் மக்களிடையே அலட்சியம் வந்து விடும். உணவை வீணாக்குவர். மேலும், இலவசமாகப் பெற, சிலரது மனம் இடம் கொடுக்காது. ஆகவே, 10 ரூபாய் விலை வைத்துள்ளேன்.
'அன்றாடம், 1,000 பேர் வந்தாலும் சாப்பாடு கொடுக்க முடியும். அதற்கான சக்தியை இறைவன் தந்துள்ளான்...' என்று கூறிய முகேஷிடம், தொடர்பு கொள்வதற்கான எண்: 98400 58366.
எல். முருகராஜ்

