PUBLISHED ON : ஜன 13, 2013

தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில், தவறாமல் ஒருவர் படம் இடம் பெற்றிருக்கும்.
இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு, அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது.
ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது.
விவசாயிகள் இன்றைக்கும், தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு நினைக்கும் அந்த பெரியவர், யார் தெரியுமா? அவர்தான் பென்னிகுக்.
தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரள அரசால் பிரச்னை செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர்.
இங்கிலாந்தில், ஜனவரி 15, 1841ல் பிறந்த ஜான் பென்னிகுக், பொறியியல் மேற்படிப்பு முடித்த கையோடு, பொதுப் பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, ஆங்கில அரசால், சென்னை மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில் வாடிக்கொண்டு இருந்த தமிழக தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை கண்டுபிடித்தார். அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து, திருப்பி விடுவதற்காக கட்டப்பட்டதுதான், முல்லை பெரியாறு அணை.
கிட்டத்தட்ட 75 லட்ச ரூபாய் செலவில், 1887ல், அணை கட்டும் முயற்சி துவங்கியது.
அணையின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பெய்த பேய்மழையாலும், பெருகிவந்த வெள்ளத்தாலும் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்குமேல் பணம் ஒதுக்க முடியாது. ஆகவே, அணை கட்டும் முயற்சியை கை விட்டு, திரும்ப வருமாறு பென்னிகுக்கிற்கு உத்தரவிட்டது ஆங்கிலேயே அரசு. 'தமிழர்களின் கனவு திட்டமான அணை, கனவா கவே போக வேண்டியது தானா? இதற்காக உயிரை கொடுத்தவர்களின் ஆன்மா என்ன சொல்லும்...' என்று கவலைப்பட்ட பென்னிகுக், எப்பாடு பட்டாவது அணையை கட்டியாக வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், சொந்த ஊருக்கு சென்று, தன் சொத்துகளை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு, மீண்டும் அணை கட்டும் முயற்சியில் இறங்கினார்.
எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகள் போராடி, அணை கட்டி முடிக்கப்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து, 2,890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர் நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில், கடல் போல நீர் தேக்கி வைக்கப்பட்டது. தென் தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது. அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில், சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேயர், திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன், 999 வருடத்திற்கு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. வீணாகப் போகும் மழைநீருக்கு ஒரு கப்பத்தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது. 999 வருடத்திற்கு இந்த அணையும், தண்ணீரும், தென் தமிழக மக்களுக்கு தான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம் காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு பசுமை சமவெளியாக திகழ்கிறது. எப்போதும் முப்போகம்தான். உயிர்களுக்கும், பயிர்களுக்கும் தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க, பல லட்சம் மக்கள் ஆனந்தப்பட்டனர்.
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை பெரியாறு அணை, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள் வந்தது. தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும், மனிதநேயத்துடன், தன் சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங் கருணையினாலும், ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அழியாத பெருஞ்செல்வமாக, கம்பீரமாக எழுந்து நிற்கும் முல்லை பெரியாறு அணையை இப்போது, போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும் ஏற் பட்டுள்ளது.
இவ்வளவு பெருமை மிகுந்த பென்னிகுக்கின் புகழை போற்றி புகழும் வகையில், கூடலூர் லோயர் கேம்ப்பில் அரசால் கட்டி முடிக்கப்பட்டு, அவரது பிறந்தநாளன்று திறக்கப்பட உள்ள மணிமண்டபம், மக்களின் மனதில் என்றும் தங்கும் மண்டபமாகும் என்பதில் சந்தேகமில்லை. ***
எல். சந்திரகாந்த்
