PUBLISHED ON : ஜன 13, 2013

மனைவி வழி தவற, கணவனே காரணமாகலாமா?
என்னுடைய நண்பன் ஒருவன், தன்னுடைய புது மாடல் மொபைலில், நிறைய, 'அந்த' மாதிரி காட்சிகளை பதிவு செய்திருந்தான். ஒரு நாள் ஜாலி மூடில் இருக்கும்போது, அந்த காட்சிகளை தன் மனைவியிடம் காட்ட, முதலில் அருவருப்பாக பார்த்தவள், அவனுடைய வற்புறுத்தலின் பேரில் தினமும் பார்க்க ஆரம்பித்தாள். நாளடைவில்... அவளே, அதை ரசித்துப் பார்க்கத் துவங்கி விட்டாள். அதன் பிறகுதான் பிரச்னையே ஆரம்பமானது.
அந்த காட்சிகளை, 'டிவி'யில் பார்க்க வேண்டுமென்று, அவள் கேட்டதால், வீட்டில், டி.வி.டி., மூலம், அவளுக்கு ப்ளூ பிலிம் போட்டுக் காட்டினான். தாம்பத்ய உறவின்போது, கணவனை அவள், ப்ளூ பிலிமில் பார்த்த ஆண்களுடன் ஒப்பிட்டு கிண்டலடிக்கத் துவங்கினாள்.
முதலில், இதை விளையாட்டாக எடுத்துக் கொண்டான். தன் உறவினர்களிலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிலும் வாட்ட சாட்டமான ஆண்களைப் பார்த்து, அவள் வலியச் சென்று பேசிப் பழகுவதைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளானான். இதை, அவன் கண்டித்தபோது, அவள் அதைப் பொருட்படுத்தாமல், அவனது ஆண்மையை கேலி செய்ய ஆரம்பித்தாள். அவளை சந்தேகப்பட்டு, தினமும் அடித்துத் துன்புறுத்தினான்.
திடீரென ஒருநாள்... அவள் பக்கத்தில் வசித்த, நல்ல பர்சனாலிட்டியான இளைஞனுடன் ஊரைவிட்டே ஓடி விட்டாள். அவமானம் தாங்காமல், விஷம் குடித்தவனை சிரமப்பட்டு காப்பாற்றினோம். 'அழகான, ஒழுக்கமான மனைவியை, மோசமான உணர்ச்சிகளைத் தூண்டி, வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டோமே...' என்று, அவன் ஒவ்வொரு நாளும் அழுது புலம்புகிறான்.
நண்பர்களே... உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில்தான் உள்ளது. அதை நீங்களே பாழாக்கிக் கொள்ளாதீர்.
— ஊர் பெயர், வெளியிட விரும்பாத வாசகர்.
ரவுடிகள் ஹீரோக்களா?
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில், கொலை செய்யும் ரவுடிகளை பெண்கள் காதலிப்பது போன்ற காட்சிகள், அதிகமாக இடம் பெற்று வருகின்றன. பேன்ட், டீ சர்ட் அணிந்து, அழகுடன் உள்ள ஹீரோக்களாக காட்டிய காலம் போய், டவுசர் தெரியும் கைலியுடன், தாடியுடன் திரிபவர்கள் கதாநாயகர்களாகவும், அவர்களை பெண்கள் உருகி உருகி காதலிப்பதாகவும் காட்சிகள் இடம் பெறுவது, எந்த அளவுக்கு விபரீதமானது என்பதற்கு என் நண்பரின் மகளே சாட்சி.
நண்பரின் மகள், எங்கள் ஏரியாவில் குடி பழக்கம், கஞ்சா, அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு வரும், ஒருவனை காதலித்தாள். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், 'ரவுடிங்க தாம்பா பொண்டாட்டிய அன்பா வச்சுக்கிருவாங்க...' என்று, டயலாக் பேசி வருகிறாள்.
மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும், நண்பரை பார்க்கவே பாவமாக உள்ளது. சினிமா இயக்குனர்களே... வெற்றிப்படம் அமைய வேண்டும் என்பதற்காக, தவறான விதையை, 'கதை' என்ற பெயரில் தூவாதீர்கள். நாளை... இதே நிலை, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால்... சிந்தியுங்கள்!
— ஜி.செல்லத்துரை, மதுரை.
தாயும் ஒரு ஆசிரியைதான்!
என் நண்பன் வீட்டில் நடந்த நல்ல சம்பவம் இது. அவனது மனைவி ஹவுஸ் ஒய்ப் தான். பிளஸ் 2 வரை படித்தவர். அவர்களது மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். ஒருமுறை, அந்த நண்பன் வீட்டிற்கு சென்றபோது, அவனது மனைவி பற்றி விசாரிக்கும் போது, 'அவள் டியூஷனுக்கு சென்றிருக்கிறாள்' என்று, என் நண்பன் சொல்ல, நான் புரியாமல் விழித்தேன்.
அதை புரிந்து கொண்ட அவன், 'அவள் பிளஸ் 2 படித்திருந்தாலும், 10வது கணக்கில் எக்ஸ்பர்ட் கிடையாதுடா. ஆனால், பையன் கணக்கில் சுமார் தான். அதனால, இவள் ஒரு டீச்சர்கிட்ட பத்தாவது கணக்குக்கு டியூஷன் போகிறாள். சந்தேகங்களை தெளிவுபடுத்தி விட்டு, வீட்ல பையனுக்கு நல்லா புரியும்படி சொல்லித் தருகிறாள்.
'டியூஷனில் பையனை நல்லா கவனிப்பாங்கன்னு சொல்ல முடியாது. டியூஷனுக்கு பையன் போய்ட்டு வர்ற நேரம் மிச்சம். பையனுக்கு கொடுக்கற பீஸ் தான் அவளுக்கும் செலவாகும். அதே நேரம், ஒரு அம்மாவா, தன் பையனுக்கு அக்கறையா, பொறுமையா, புரியற வரைக்கும் சொல்லிக் கொடுக்கலாம். எப்படி என் மனைவியோட ஐடியா?' என்று முழு விவரத்தையும் விளக்கினான்.
பொதுவாக, தாய்தான் குழந்தைக்கு முதல் ஆசிரியை என்ற உண்மையை, என் நண்பனின் மனைவி, 200 சதவீதம் உறுதியாக்கி விட்டார் என்றே தோன்றியது.
— டி.சீனிவாசன், புதுப்பெருங்களத்தூர்.
