PUBLISHED ON : ஜன 13, 2013

ஜன., 14 - பொங்கல்
நவக்கிரகங்களைக் கண்டு பயப்படுபவர்கள் ஏராளமானோர். 'எனக்கு சூரிய தோஷம், மனைவிக்கு சனிதோஷம், மகனுக்கு சுக்கிர தோஷம், மகளுக்கு செவ்வாய் தோஷம்' என்று, ஆளுக்கொரு தோஷத்தை சுமந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து, கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த கிரகங்களுக்கெல்லாம் மேலானவன் இறைவன் என்பதை மறந்து விடக் கூடாது. ஏன்... ஒரு சமயம், கிரகங்களுக்கே கூட தோஷம் ஏற்பட்டது. அதைப் போக்கிய இறைவன் குடிகொண்டுள்ள தலம் சூரியனார் கோவில். அங்கே சென்று வந்தால், கிரகதோஷம் பற்றிய கவலை நீங்கும்.
காலவ முனிவருக்கு, கிரக தோஷத்தால் தொழுநோய் ஏற்பட்டது. நோய் குணமடைய வேண்டி, கிரகங்களை வழிபட்டார். நவக்கிரக தேவர்கள், அவர் முன் தோன்றி, 'முனிவரே... உங்களை நாங்கள் சோதிக்க விரும்பவில்லை. உங்களை தோஷத்திலிருந்து விடுவிக்கிறோம். நோய் நீங்கி சுகமாக வாழ்வீர்கள்...' என வரமளித்தனர். இதை அறிந்த பிரம்மா, கோபம் கொண்டார்.
'கிரகங்களே... எல்லா உயிர்களுக்கும் பாவ புண்ணிய பலன்களை மட்டும் கொடுப்பதே உங்கள் பணி. காலவ முனிவர், முற்பிறப்பில் செய்த பாவத்திற்காக, அவருக்கு தொழுநோய் வர வேண்டும் என்பது விதி. ஆனால், நீங்கள் அதைக் குணப்படுத்தி, கடவுளின் அதிகாரத்தை, உங்கள் கையில் எடுத்துக் கொண்டீர்கள். எனவே, அவர் அனுபவிக்க வேண்டிய தொழுநோயை, நீங்கள் அனுபவியுங்கள். அதுவும் பூலோகம் சென்று...' என சாபமிட்டார்.
வருத்தமடைந்த கிரகங்கள், பூலோகத்தில் வனம் ஒன்றிற்கு வந்தனர். தங்கள் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்டு சிவபெருமானை நோக்கி தவமிருந்தனர். சிவனும் அவற்றின் துன்பம் போக்கி, மக்களின் பாவ புண்ணியத்திற்கேற்ப பலன்களை அளித்து வர அறிவுறுத்தினார்.
கிரக தோஷம் என்பது முன்வினைப் பயனால் ஏற்படுகிறது. நாம் செய்யும் நன்மைக்கேற்ப நற்பலன் ஏற்படும். விதிவசத்தால் துன்பத்தைச் சந்திக்கும் நிலை வந்தால், இறைவனிடம் முறையிட்டால் போதும்; அவற்றைத் தாங்கும் சக்தியை அவன் தருவான். அதன் பின், எல்லாம் சுபமாக நடக்கும்.
சூரியனார் கோவில் கருவறையில், சூரியன் மேற்கு பார்த்தபடி, உஷா, பிரத்யுஷாதேவியருடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இவரை, சிவசூரிய பெருமான் என்பர். இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்தி, புன்முறுவலுடன் விளங்குகிறார். சிவலிங்கத்துக்கு முன்னே, நந்தி இருப்பது போல, சூரியன் முன், அவரது வாகனமான குதிரை இருக்கிறது. சூரியனின் வெப்பத்தை யாராலும் தாங்க முடியாது. ஆகவே, அவர் எதிரே <உள்ள குதிரை எரிந்து விடலாம் என்பதால், குதிரைக்கு முன் பகுதியில் குருபகவானை பிரதிஷ்டை செய்துள்ளனர். குருவைக் காணும் சூரியன், தன் <உக்கிரத்தைக் குறைத்துக் கொள்வதாக ஐதீகம்.
சூரியன் மட்டுமின்றி, மற்ற கிரக தேவர்களும் பெரிய சன்னிதிகளில் உள்ளனர். இவர்களை முறைப்படி சுற்றி வர வேண்டும். இங்குள்ள கோள் தீர்த்த விநாயகர், கிரக தோஷங்களை வேரறுக்க வல்லவர். ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறன்றும், சிவசூரிய பெருமானுக்கு மகா அபிஷேகம் நடக்கும். பொங்கல், ரத சப்தமி முக்கிய திருவிழாக்கள்.
சங்க காலத்தில், பூம்புகாரில் இருந்த உச்சிக்கிழான் கோட்டம் என்ற சூரியன் கோவில், கடல்கோளால் அழிந்து விட்டது. ஒடிசாவிலுள்ள கோனார்க் சூரியக்கோவிலும் முழுமையாக இல்லை. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார்கோவில் மட்டுமே, முழுமையான அளவில், சகல கிரகங்களுடனும் பொலிவுடன் விளங்குகிறது.
கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 30 கி.மீ., தூரத்தில் இக்கோவில் உள்ளது. இங்கு செல்பவர்கள், பிற நவக்கிரக தலங்களையும் தரிசித்து வரலாம்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உடலுக்கு நல்லது. சூரிய உதயத்திற்கு முன் எழுபவர்களே, வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.
இந்த பொங்கல் நாளிலிருந்தாவது, அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ளுங்களேன்!
***
தி. செல்லப்பா
