தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!

உடனிருப்பவர் செய்யக் கூடாத கலவரம்!


PUBLISHED ON : ஜூலை 09, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன், வீடு திரும்புகிறார்.

'என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?'

'அதெல்லாம் ஒண்ணுமில்ல...'

'எத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்துறேன்; எனக்கு தெரியாதா உங்களப் பத்தி... சும்மா சொல்லுங்க...'

'சொன்னா, பெரிசா தீர்த்து வச்சுடுவியாக்கும்... பேசாம இரு; சும்மா, நீ வேற குடையாதே...'

'யாருகிட்டயாவது பகிர்ந்துக்குங்க; மனசுலயே வச்சுக்கிட்டு பாரம் ஏத்திக்காதீங்க...'

- இப்படி, நீண்டு கொண்டு போன உரையாடலில், கடைசியாக, அலுவலக பிரச்னையை சொன்னார், கணவர்.

'அட என்னங்க நீங்க... இப்படி தான், ரெண்டு வருஷத்துக்கு முன், இதே மாதிரி ஒரு பிரச்னை வந்துச்சு; என்னமா சமாளிச்சு, வெளி வந்தீங்க. இதெல்லாம், உங்க திறமைக்கு முன் ஒண்ணுமே இல்ல; ஊதி, எறிஞ்சுடுவீங்க பாருங்க...'

காட்சி மாறுகிறது; கணவர், தன் நண்பரிடம் இப்படி சொல்கிறார்...

'என் மனைவி படிக்காதவ தான்; வெளி உலகமே தெரியாது. அவளுக்கு தெரிஞ்சதெல்லாம், குடும்பம், கடமை, அம்மா வீடு இவ்வளவு தான். ஆனா, அவ குடுத்தா பாரு தைரியம்... 'ஊதி எறிஞ்சுடுவீங்க'ன்னா... அதே மாதிரி நடந்துடுச்சு; அவ குடுத்த தைரியத்தை மட்டுமே வச்சு, போராடினேன்; இப்ப ஜெயிச்சிட்டேன்...'

'பரவாயில்லயே... என்கிட்ட சொன்னதோட நிறுத்திடாம, உன் மனைவிகிட்டே போய், இதை அப்படியே சொல்லு...' என்றார் நண்பர்.

'விமானத்துக்கு நேரமாச்சு... சென்னை, கத்திப்பாரா சந்திப்புல, பாலத்துக்கே பூட்டு போட்டுட்டாங்களாம்; ஒரே போக்குவரத்து நெரிசலாம்; விமானத்தை பிடிக்க முடியுமான்னு தெரியல...'

'இதெல்லாம் தேவையில்லாத கற்பனை... நீ போறதுக்குள்ள எல்லாம் சரியாயிடும். தைரியமாகப் போ; இல்லன்னா, நந்தம்பாக்கம் வழியா போ; விமானத்தை பிடிச்சுருவே...'

விமானத்தில் ஏறி அமர்ந்ததும், மொபைல் போனில், 'நீ சொன்னபடிதாம்பா நடந்துச்சு... சரியான நேரத்துக்கு விமான நிலையம் வந்துட்டேன்; நான் போன நேரம் எல்லாம் சரியாயிடுச்சு. நீ தைரியம் குடுக்கல்லன்னா, வழியெல்லாம் ரொம்ப பதட்டப்பட்டிருப்பேன்; ரொம்ப நன்றி...'

'தங்கச்சி பிரசவத்துல ஏதோ சிக்கலாம்; அம்மா போன் செய்து, உடனே ஊருக்கு வரச் சொல்றாங்க; ரொம்ப கவலையா இருக்கு...'

'கவலைப்படாதே... பிரசவம் நல்லபடியா நடக்கும்; தைரியமாக போயிட்டு வா; எதுக்கும் இந்த பணத்த செலவுக்கு வச்சுக்கோ; போய், போன்ல பேசு...'

இப்படியெல்லாம், நம்பிக்கையூட்டும், தைரியமூட்டும் கதாபாத்திரங்களாக நாம் மாற வேண்டுமே தவிர, 'நான் அப்பவே சொன்னேன், இந்த வேலைய விட்டு தொலைங்கன்னு; கேட்டாத்தானே... இப்ப கிடந்து, படாத பாடு படுறீங்க; என் பேச்சு எங்க எடுபடுது...' என்று, பேசுகிற மனைவியாகவோ, 'ஆமாமா... கத்திப்பாராவுல ரொம்ப பிரச்னையா இருக்கு; நீ, விமானத்தை பிடிக்கிறது சந்தேகம் தான்...' என்று சொல்கிற நண்பராகவோ, 'என்ன செய்றது... எல்லாம் விதிப்படி தான் நடக்கும்; நம்ம கையில என்ன இருக்கு. யார் தலையில, என்ன எழுதி வச்சிருக்கோ...' என்று, இருக்கிற கொஞ்ச, நஞ்ச தைரியத்தையும், உருக்குலைக்கும்படி பேசுகிற முதலாளியாகவோ, ஆகிவிடக் கூடாது.

'என்ன நம்பிக்கையில், இப்படியெல்லாம் நல்வார்த்தை சொல்லச் சொல்றீங்க... எதை நம்பி, தைரியமூட்டச் சொல்றீங்க... நாம் நல்லது சொன்னாலும், அப்படியேவா நடந்துடப் போகுது...' என்றெல்லாம், கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்கிறேன்...

எல்லா ஆயுதங்களையும் இழந்து, நிராயுதபாணிகளாக நிற்போருக்கு, நாம், நம் கைப்பொருளை இழக்காமல் அளிக்கக் கூடியதெல்லாம், தைரியம், தன்னம்பிக்கை மற்றும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மட்டும் தாம்!

நாம் சொன்னபடி நடக்காவிட்டாலும், நாம் வழங்கிய நற்சொற்கள், அவர்களுக்கு அந்நேரத்துக்கு ஆறுதலை வழங்கியிருக்குமா, இல்லையா...

நாம் சொன்னபடி நடக்காவிட்டால், 'நீ ஏன், அப்படி ஆக்கப்பூர்வமாகப் பேசுனே...' என்று சண்டைக்கா வரப்போகின்றனர்... மாறாக, நாம் சொன்னபடி நடந்து விட்டாலோ, நம்மை அவர்கள் தலையில் வைத்து கொண்டாடாத குறை தான்!

எனவே, எவ்வித இழப்பையும் நமக்கு ஏற்படுத்தாத நல்வார்த்தைகளை சொல்லி தான் வைப்போமே!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us