தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பெண் என்கிற பேரரசி!

பெண் என்கிற பேரரசி!

பெண் என்கிற பேரரசி!


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல் தளத்தின் ஜன்னலைத் திறந்தாள் கோகிலா. அது, பறவைகள் வலசை போகும் விடியற்காலை, 5:00 மணி; வெயில் காலம் என்பதால், அதிகாலையிலேயே வானம் பொன் வண்ணத்தில் மின்ன, அரை வட்டத்தில், ஒரே தாள லயத்தில், முத்திரை பதித்தது போல் பறவைகள் பறந்தது, அழகுமயமாக இருந்தது.

பறவைகள், 'ஜிவ்'வென்று ஏறி, இறங்கிப் பறந்தது, ஓர் ஓவியம் போன்று தெரிய, சிறிது நேரம் அதை ரசித்துக் கொண்டிருந்தவள், ஏதேச்சையாக தெரு முனையில் அந்த வாகனத்தைப் பார்த்தாள்.

அது, முகுந்தனுடைய ஹீரோ ஹோண்டா!

'முகுந்த் ஏன் இவ்வளவு கவலையில வர்றான்... யமுனாவுக்கு உடம்பு முடியலயோ இல்ல ஆபீசுக்கு அவ சீக்கிரமா கிளம்பி போயிட்டாளோ... கல்யாணமான இந்த மூணு மாசத்துல இவன் தனியா வந்ததில்லயே... கிரேக்க சிற்பம் போல ஆறு அடி உயரத்தில் இவனும், அம்மன் சிலை போல அழகோவியமாய் சுடிதாரில் அவளும் இணைந்து வரும் காட்சியே, அவ்வளவு அற்புதமாக இருக்குமே... இன்னைக்கு ஏன் இவன் மட்டும் தனியா வர்றான்...' என நினைத்தவாறு, வேகமாக கீழே இறங்கி வந்த கோகிலா, சேலையை இழுத்து சொருகியவாறு, வாசல் கதவை திறந்தாள்.

வண்டியை விட்டு இறங்கினான், முகுந்த்.

''வாப்பா... வா...'' என்று புன்னகையுடன் வரவேற்றாலும், அவன் முகத்தைப் பார்க்கும் போது, 'ஏதோ சரியில்ல...' என்று தோன்றியது.

தலையைக் கோதியபடி, உள்ளே வந்து சோபாவில், 'தொப்'பென்று உட்கார்ந்து, 'ஸ்ஸ்ஸ்...' என்று சத்தமாக மூச்சு விட்டான்.

''காபி தரட்டுமா கண்ணா?'' என்று கேட்டபடியே, சமையலறைக்குப் போனாள், கோகிலா.

'நிச்சயம் ஏதோ பிரச்னை தான்; முகமே சரியில்ல...' என நினைத்தவாறு, ''புது டிகாஷன்ல போட்ட காபி உனக்கு பிடிக்குமே,'' என்று அவனிடம் கொடுத்தவாறு அருகில் அமர்ந்தாள்.

பதில் சொல்லாமல் வாங்கிக் குடித்தான்.

''என்ன டிபன் செய்யட்டும்... அவல் உப்புமாவா இல்ல மோர்க் களியா...'' என்று கேட்டவாறு அவனை உற்றுப் பார்த்தாள்.

''அப்பா எங்க?'' என்றான் அடிக்குரலில்!

''ஆடிட்டிங்ன்னு புனே போயிட்டு ராத்திரி ஒரு மணிக்கு தான் வந்தாரு... தூங்கறாரு,'' என்றவள், ''ஆபீஸ்ல ஏதாவது பிரச்னையா... உன் முகம் ஏன் சோர்வா இருக்கு...'' என்று கேட்டாள்.

''ஆமாம்... பிரச்னை தான்; ஆனா, ஆபீஸ்ல இல்ல...''

''பின்னே...''

''யமுனா... அவதாம்மா... ரொம்ப திமிர் அவளுக்கு... சே...எவ்வளவு இடம் பாத்தே... கடைசியில ஒரு ராட்சசிய பாத்து எனக்கு கட்டி வச்சிட்டயே...'' என்றான் சலிப்புடன்!

இதைக் கேட்டதும், 'என்ன இப்படி சொல்றான்... யமுனா யமுனான்னு குட்டி போட்ட பூனை மாதிரி அவளையே சுற்றி வருபவன் இன்னைக்கு எதுக்கு இப்படி பேசுகிறான்...' என அதிர்ச்சியானாள்.

அவனே தொடர்ந்தான்...

''எதை எடுத்தாலும் அதிகாரம்... தான் நெனச்சது தான் நடக்கணும்ன்னு பிடிவாதம். சேச்சே... இப்படி ஆணவம் பிடிச்ச பொம்பளைய நான் பாத்ததில்ல... நீ எல்லாம் அப்பாவுக்கு விட்டுக் கொடுத்துப் போகலே... என்ன குறைஞ்சு போய்ட்டே... அவ உன் பக்கத்துல கூட வர முடியாதும்மா... நல்ல புதை குழியில மாட்டிகிட்டேன்,'' என்றான்.

'சடசட'வென்று அடர்மழை போல கொட்டித் தீர்த்த மகனை, கவலையுடன் பார்த்தாள், கோகிலா.

அவன் பிரச்னைகள் மெல்ல புரிகிற மாதிரி இருந்தது.

புன்னகையுடன் மகனின் முகத்தை ஆதரவுடன் பார்த்து, ''நீ சொல்றது சரிதான். ஆணவம், அதிகாரம் இதெல்லாம் வீட்டுக்கு உதவாது தான். சொல்லு... யமுனா எந்த விஷயத்தில எல்லாம் உன்னை அதிகாரம் செய்றா?''

''இது அதுன்னு இல்லம்மா... எல்லாத்துலயும்...'' என்றான் எரிச்சலுடன்!

''உதாரணத்தோட சொன்னாத் தானே புரியும்...''

''மாடி காலியா இருக்கு... சின்னதா ஷட்டில் விளையாட கோர்ட் போடலாம்ன்னு சொன்னேன். தினம் அரை மணி நேரம் வீட்டுலயே விளையாடலாம்ன்னு ஆசை எனக்கு...''

''அவ என்ன சொல்றா?''

''மொட்டை மாடியில தொட்டிச் செடிகள வச்சு கீரை, வெண்டைன்னு காய்கறி தோட்டம் போடப் போறாளாம்... 'ஷட்டில் எங்க வேணா போய் விளையாடலாம்; ஆர்கானிக் காய்கறி எல்லா இடத்துலயும் கிடைக்காது'ன்னு ஒத்தைக்கால்ல நிக்கறா...''

''சரி அடுத்தது?''

''பனியன் போட்டு தான் ஆகணுமாம்; வெறும் ஷர்ட் போடக் கூடாதாம். லீவு நாள்ல, 12:00 மணி வரை தூங்கக் கூடாது, எடுத்ததுக்கெல்லாம் பைக்ல போகாதே; நடந்து போற இடத்துக்கு நடந்து போ, 'டிவி'க்கு பக்கத்துல உக்காரதே, எப்பவும் மொபைல்ல பாட்டு கேட்டுகிட்டே இருக்காதேன்னு ஒரே அட்வைஸ்... எல்லாம் சம்பாதிக்கிற திமிர்.''

''பாத்தியா... நீயே பாயிண்டுக்கு வந்துட்டே,'' என்று கூறி புன்னகைத்தாள், கோகிலா.

''என்னம்மா சொல்றே...''

''ஆமாம் முகுந்த்... நீ பிறந்ததில இருந்து உனக்கு பத்து வயசு ஆகுற வரைக்கும் நான் வேலைக்குப் போகலே; அதுக்கு அப்புறம் தான் எனக்கு காலேஜ்ல லெக்சரர் வேலை கிடைச்சது. வீட்டுக்கு அந்த வருமானம் உதவியா இருந்ததுன்னாலும், ஏன்டா வேலைக்குப் போறோம்ன்னு நோகிற அளவுக்கு என் மனச நோகச் செய்தது யார் தெரியுமா?'' என்றாள் சஸ்பென்சுடன்!

புரியாமல் பார்த்தான் முகுந்த்.

''உன் அப்பா தான்; அதுவரை உன்னைப் போல உண்டான்னு சொன்னவரு, அதுக்கு பின், தலைகீழா மாறிப் போயிட்டாரு. யமுனா மாதிரி தான் நானும்... எல்லாப் பெண்களும் இப்படித்தான். 'வீடு சுத்தமா இருக்கணும்; படுக்கை சுருக்கமில்லாம இருக்கணும்; பாத்ரூம் உலர்ந்து இருக்கணும்; அலமாரி கலைஞ்சு கிடக்கக் கூடாது'ன்னு உங்கப்பாகிட்ட சொல்வேன்; அவரும் சந்தோஷமா ஒத்துழைக்கிறதோட, 'என் மனைவிக்கு சுத்தம், சுகாதாரம் ரொம்ப முக்கியம்'ன்னு எல்லார்கிட்டயும் பெருமையா சொல்வாரு.

''இதெல்லாம் நான் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி... ஆனா, நான் லெக்சரர் ஆனதும், அவர் பேச்சு, போக்கு அப்படியே மாறிப் போச்சு. 'ஈரத்துண்டு ஏன் கட்டில்ல கிடக்கு; கொடியில காயப் போடக் கூடாதா'ன்னு கேட்டா, அதுக்கொரு சண்டை; 'குழாயை ஏன் சரியா மூடல... தண்ணி வீணாப் போயிருச்சே'ன்னு சொன்னா அதுக்கு ஒரு கத்தல்; 'டிவி'யில சேனல் மாத்தினா கூட கோபம்... எதை எடுத்தாலும், 'வேலைக்குப் போற திமிர், சம்பாதிக்கிற கொழுப்பு'ன்னு சொல்லி, என் மேல அம்பு வீசுவார்; அப்படியே ஒடுங்கிப் போய் அழுவேன்,'' என்று உணர்ச்சி வசப்பட்டு விவரித்துக் கொண்டே போனாள் கோகிலா.

அம்மா கூறுவதையே கவனித்தான் முகுந்த்.

''காலேஜ்ல அரியர் பணம் கொஞ்சம் வந்துச்சு; குன்றத்தூர்ல நிலம் வாங்கலாம்ன்னு சொன்னேன்; கார் தான் வாங்கணும்ன்னு ஒத்தைக்கால்ல நின்னு, செகண்ட் ஹாண்ட்ல கார் வாங்கினாரு உங்கப்பா... பத்தே மாசம்... பார்ட் பார்ட்டா கழண்டு போச்சு. அவர்கிட்ட சொல்லாம, கார் வாங்கின அதே நாள்ல, காலேஜ் சொசைட்டியில கடன் வாங்கி, அதே குன்றத்தூர்ல நிலம் வாங்கினேன்; ரெண்டே வருஷம், போட்ட பணம், இருபது மடங்காச்சு; உங்கப்பா அசந்துட்டார். இதையெல்லாம் பெருமைக்காக சொல்லலே... வீட்டுல இருக்கிற மனைவியை விட, வெளில போய் சம்பாதிக்கிற மனைவி பொருளாதாரத்த மட்டுமில்ல, நாலு மனிதர்களோட அனுபவங்களையும், பணம், ஆரோக்கியம், காலத்தோட அருமைகளையும் தெரிஞ்சுக்கிறா.

''இல்லறம், வாழ்க்கை, பகிர்தல், உறவுன்னு அவளுக்கு வெளியுலகம் நிறைய விஷயங்களை கத்துக் கொடுத்து, அவளை தன்னம்பிக்கை கொண்டவளா ஆக்கி, மனத் தெளிவைக் கொடுக்குது. மந்திரத்துல மாங்காய் விழாது; எல்லாமே உழைப்பும், அறிவாற்றலும், நற்பண்புகளும் கொடுக்கிறதுதான்னு புரிஞ்சுக்கிறா... பிறகு அவள் பேசுறதெல்லாம் அர்த்தமுள்ளதா ஆகுது. அதை, ஆண்களால அவ்வளவு சுலபமா ஜீரணிக்க முடியுறதில்ல. ஆண் மேல தப்பு இல்லே; அவனுடை படைப்பு அப்படி! ஆனா, பெண்... அருமையா சமைக்கும் போதே, குழந்தை அழறதைக் கேட்டு, ஓடிப் போய் பால் கொடுத்து, பாட்டு பாடி, தூங்க வைப்பா... மியூச்சுவல் பண்ட் பத்தி விசாரிச்சு முதலீடு செய்வா, அலுவலக வேலைகளையும் செய்து, வீட்டுக்கு வந்து குழந்தைக்கு பாடம் சொல்லித் தந்து, தன்னை அழகா பிரசண்ட் பண்ணி, கணவனை அசர வைப்பா...''

அம்மா மூச்சு விடாமல் பேசுவதையே கவனித்தான் முகுந்த்.

''யமுனாவோட தன்னம்பிக்கையை புரிஞ்சுக்கோ... அவளோட ஆற்றலை பாராட்டி வளர்த்து விடு. அவள் சொல்றதை எளிமையா பாரு... பணம், வேலை, சம்பளம், பாஸ் புக் இதையெல்லாம் விட, பெண்ணுக்கு தன் வீடு கொடுக்கிற அங்கீகாரம் ரொம்ப முக்கியம். ஏன் உலக சரித்திரத்தை எடுத்துப் பாத்தாலே கூட, முடிவெடுக்கிற இடத்துல பெண்கள் இருக்கும்போது, போர்கள், கலவரங்கள் இருந்திருக்காது.

''யமுனா கிட்ட அதிகாரம் இருக்கட்டும்; அன்பை செலுத்துகிற, அக்கறை நிறைஞ்சிருக்கிற அதிகாரத்தை நீ, பெருந்தன்மையான மனசோட ரசிக்கப் பாரு. அப்போ அவள் உன்னை தன் ராஜாவா நினைச்சு, அன்பைக் கொட்டறாளா இல்லையான்னு பார்... இந்த அம்மாவை நம்பு,'' என்றாள்.

வியப்புடன் தாயைப் பார்த்தான் முகுந்த். மகளோ, மருமகளோ, அடுத்தவளை தன் போன்ற சக பெண்ணாகப் பார்க்கிற தேவதையாக தாயை உணர்ந்தான்.

உஷா நேயா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us