
ரஜினி படத்திலிருந்து அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை!
விஜயின், கத்தி படத்தை தயாரித்த, லைகா நிறுவனம், தற்போது, ரஜினியின், 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இதுவரை, திரையுலகில் திருட்டு வி.சி.டி.,களை ஒழிக்க, பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதும், கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், சட்ட விரோதமாக, இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது, லைகா நிறுவனம். 'காப்பி ரைட்ஸ்' முறைப்படி, அதற்கான வழக்கை, நீதிமன்றத்தில் தொடர முடியும். ரஜினியின், 2.0 படத்தில் இருந்து, இந்த நடவடிக்கை அமலுக்கு வருகிறது.
— சினிமா பொன்னையா
ஸ்ருதிஹாசனின் எல்லைக்கோடு!
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து, மாதர் சங்கங்களின் கெடுபிடிக்கு, அவ்வப்போது ஆளாகி வரும் ஸ்ருதிஹாசன், ஆங்கில புத்தகங்களின் அட்டை படங்களிலும் ஆபாச, 'போஸ்' கொடுத்து வருகிறார். ஆனால், இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் இயற்கையிலேயே கவர்ச்சியான உடலமைப்பை கொண்டிருப்பதால், சாதாரண உடையிலும், அதிக கவர்ச்சியாக தெரிகிறேன்; அதுதான், மற்றவர்களின் கண்களை உறுத்துகிறது. மற்றபடி, நான் எப்போதுமே கவர்ச்சிக்காக வைத்திருக்கும் எல்லைக்கோட்டை தாண்டியதில்லை; தாண்டவும் மாட்டேன்...' என்கிறார். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை!
— எலீசா
சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த த்ரிஷா!
சிம்புவுடன், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் ஜோடி சேர்ந்த த்ரிஷாவை, சிம்பு, மூன்று வேடங்களில் நடிக்கும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில், ஒரு சிம்புவுக்கு ஜோடியாகவும், இன்னொரு சிம்புவுக்கு அம்மாவாகவும் நடிக்க கேட்ட போது, செம டென்ஷனாகி விட்டார் த்ரிஷா. 'சிம்புவுடன் ரொமொன்ஸ் செய்யும் நான், அவருக்கு அம்மாவாக நடித்தால், என் கதாநாயகி, 'இமேஜ்' போய் விடும்; அதனால், இப்படத்தில் நடிக்க விரும்பவில்லை...' என்று தடாலடியாக மறுத்து விட்டார்.
விதி எப்படியோ மதி அப்படி!
— எலீசா
கிளைமாக்சை, 80 நாட்கள் படமாக்கும் ராஜமவுலி!
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம், பாகுபலி. 250 கோடி ரூபாயில் உருவான இப்படம், 500 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இறுதிக்காட்சி நெருங்கி விட்டது. அதற்காக, பல கோடி ரூபாயில் பிரமாண்ட, 'செட்' அமைத்துள்ள ராஜமவுலி, இறுதிக்காட்சியை மட்டும், 80 நாட்கள் படமாக்குகிறார்.
— சி.பொ.,
டி.ராஜேந்தர் பாணியில் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி!
ஆம்பள மற்றும் தனி ஒருவன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர், 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி. இவரும், தற்போது, இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் போன்று, கதாநாயகனாகியிருக்கிறார். ஆனால், அவர்களெல்லாம் தங்கள் படங்களில் நடித்து, இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்ள, இவரோ, தான் நடிக்கும், முறுக்கு மீசை படத்தை, தானே இசையமைத்து, இயக்கி, நடிக்கிறார். இப்படத்தை சுந்தர்.சி தயாரிக்கிறார். முதல் படத்திலேயே, டி.ராஜேந்தர் பாணியில், அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுள்ள ஆதி, 'இம்முயற்சியில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்...' என்று தில்லாக கூறி வருகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை
அகர்வால் நடிகைக்கு, தென்னிந்திய சினிமா மார்க்கெட் ஆட்டம் காண்பதால், பாலிவுட்டில் ஆழமாக காலூன்றி வருகிறார். அத்துடன், இதுவரை, 'இப்படி தான் நடிப்பேன்...' என்று கோடு போட்டு நடித்து வந்தவர், தற்போது, அசைவ காட்சிகளில், அத்துமீறி நடித்து வருகிறார். அம்மணியின் இந்த திடீர் பிரவேசம், பாலிவுட்டின் இளவட்ட நடிகர்களை வெகுவாக ஈர்த்து வருவதால், நடிகைக்கு சிபாரிசுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தளபதியின் பாசறைக்குள் சென்று விட்ட மாஜி நடிகையின் வாரிசு, தன்னை, புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய செல்வோரிடம் எக்குத்தப்பாக சம்பளம் கேட்பதோடு, தன் கதாநாயகி, 'ட்ராக்'கிலும், நிறைய திருத்தம் செய்யச் சொல்கிறார். முன்னணி நடிகர்கள் சொல்வது போன்று, நடிகையும் கதை திருத்தம் செய்வதால், இயக்குனர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சினி துளிகள்!
* கருடா படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார், காஜல் அகர்வால்.
* விஜய்யின், 60வது படத்தில் நடித்து வரும், கீர்த்தி சுரேஷ், தெலுங்கில், இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
* விக்ரம்பிரபு நடிக்கும், முடிசூடா மன்னன் படத்தில், அவருக்கு ஜோடியாக, நடிக்கிறார், மஞ்சிமா மோகன்.
அவ்ளோதான்!

