தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாதை மாற்றிய பரம்பொருள்!

பாதை மாற்றிய பரம்பொருள்!

பாதை மாற்றிய பரம்பொருள்!


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இறை சிந்தனையில் ஆழ்ந்துள்ள நன்மக்களின் வார்த்தைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது:

ஓர் ஊரில், கலைமகளின் திருவருளை பெற்ற இருவர், இருந்தனர். அவர்களில் ஒருவர், முடவர்; மற்றொருவர், பார்வையற்றவர். பார்வையற்றவர், முடவரை தோளில் சுமந்து போக, தோளில் இருப்பவர், வார்த்தைகளால் வழிகாட்ட, அவர்களின் பயணம் தொடர்ந்தது.

போகுமிடங்களில் எல்லாம், தங்கள் தெய்வீகப் புலமையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டி, தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். தங்களுக்கு அங்கஹீனம் இருப்பதை உணராத அளவிற்கு, எப்போதும் தெய்வ சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.

ஒரு சமயம், திருவாமாத்தூர் சிவபெருமான் ஆணையின்படி, ஈசன் பேரில், 'கலம்பகம்' எனும் நூலில் உள்ள பாடல்களை பாடினர். தகவலறிந்த அரசர், அந்நூலை அரங்கேற்றம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். தெய்வீக தன்மை பெற்ற இந்த இரட்டை புலவர்களின் திறமையை அறிந்த அறிஞர்களும், புலவர்களுமாக ஏராளமானோர் கூடினர். அரங்கேற்றம் துவங்கியது; புலவர்கள் இருவரும், மாதைநாதர் வலங்கொள்பம்பை, மேற்கரையில் கோவில்கொண்டார், புரம் சீறிய வெங்கணைக்கே...எனப் பாடினர்.

இதைக் கேட்டதும், அனைவரும் சிரித்தனர்.

காரணம், கோவில், ஆற்றின் கீழ்க்கரையில் இருந்தது. ஆனால், இரட்டைப் புலவர்களோ, ஆற்றின் மேல்கரையில், கோவில் இருப்பதாக பாடினர்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு தோன்றி, 'இவர்களா தெய்வ புலவர்கள்...' என, கேலி பேசி, ஏளனம் செய்தனர்.

இரு புலவர்களும், 'யாமும் அறியோம்; அவன் பொய் சொல்லான். இது, தெய்வத்தின் கட்டளைப்படி எழுதப்பட்டது...' என்றனர். அறிஞர்கள் அதை ஏற்கவில்லை. அரசரிடம் கூறி, அரங்கேற்றத்தை நிறுத்தி விட்டனர். 'கலம்பகம்' பாடிய கவிஞர்கள் இருவரும், இறைவனிடம் முறையிட்டு, தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்.

அன்றிரவு, மழை பொத்துக் கொண்டு ஊற்ற, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விடிந்ததும் பார்த்தால், கோவிலுக்கு இடப்புறமாக ஓடிய நதி, பாதையை மாற்றி, கோவிலுக்கு வலப்புறமாக ஓடியது.

அதன் காரணமாக, ஆற்றின் கீழ்க்கரையில் இருந்த கோவில், ஆற்றின் மேல்பக்கமாக அமைந்து விட்டது. அதாவது, இறைவன் எழுந்தருளிய கோவில், ஆற்றின் மேல்பகுதியில் அமைந்துள்ளது என, புலவர்கள் பாடியது, உண்மையாகி விட்டது.

புலவர்களின் தெய்வீக தன்மையை அனைவரும் பாராட்டினர். அப்புலவர்களோ, 'இது, சிவபெருமானின் அருள்...' என்று, எம்பெருமானின் கருணையை நினைத்து, கண்ணீர் வடித்தனர்.

திருவாமாத்தூர் எனும் அத்திருத்தலத்திலேயே வாழ்ந்து, வீடு பேற்றையும் அடைந்தனர். அமாவாசையன்று, அபிராமி பட்டருக்காக அன்னை, நிலவை வரவழைத்தாள் அல்லவா? அதுபோல, சிவபெருமான், அடியார்களுக்காக ஆற்றின் போக்கையே மாற்றி, அவர்களின் பெருமையை பறை சாற்றிய ஞான பூமி இது!

இரட்டைப் புலவர்கள் பாடிய, அக்கலம்பக நூல் இன்றுமுள்ளது. படித்து, பரம்பொருளின் கருணையை அடையலாம்.

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

விச்சுக்கேடு பொய்க்க ஆகாது என்று

இங்கு எனை வைத்தாய்

இச்சைக்கு ஆனார் எல்லாரும்

வந்து உன் தாள் சேர்ந்தார்

அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்

ஆரூர் எம் பிச்சைத்தேவா என் நான்

செய்கேன் பேசாயே!

விளக்கம்: சிவபெருமானே... பொய்மைக்கு விதையில்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காகவா, என்னை இவ்வுலகில் நிறுத்தி, அன்று நீ பிரிந்து போனாய்... உன் அன்பிற்கு உரியவர்கள் எல்லாரும், உன் திருவடிகளை அடைந்தனர். ஆனால், நானோ, என் பிறவித் துயரை எண்ணி, அச்சத்தில் ஆழ்ந்துள்ளேன். திருவாரூர் தியாகேசா... என் பிட்சாடனப் பெருமானே... நான் உய்வதற்கு இனி என் செய்வேன்... அதையாவது எனக்குக் கூறு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us