PUBLISHED ON : ஆக 02, 2020

உலகில் வாழ்ந்தோம், இறந்தோம் என, இருக்காமல், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசை, சிலருக்கு உண்டு.
அமெரிக்காவைச் சேர்ந்த, லீ ரெட்மண்ட் என்ற பெண்மணிக்கு, இப்படிப்பட்ட ஆசை மனதுக்குள் உருவாகி, அது, வெறியாக மாறி விட்டது.
இதற்காக, 1980ம் ஆண்டிலிருந்து, தன் கைவிரல் நகங்களை நீளமாக வளர்க்க துவங்கினார்; 40 ஆண்டுகளாக, நகத்தை வெட்டுவதே இல்லை. தினமும், அரை மணி நேரம், 'ஆலிவ் ஆயிலுக்'குள் நகங்களை மூழ்க வைத்து, பார்த்து பார்த்து பராமரித்து வளர்த்து வந்தார்.
அவரது நகத்தை நேராக நிமிர்த்தி அளந்தால், 28 அடி இருக்குமாம். ஆனால், அவரது, 40 ஆண்டு ஆசை, ஒரே நாளில் முடிவுக்கு வந்து விட்டது. சமீபத்தில் நடந்த கார் விபத்தில், அவரது கைககளில் கடுமையான காயம் ஏற்பட்டதால், நகங்களை வெட்டி விட்டனர், டாக்டர்கள்.
அழகான, நீளமான நகங்கள் இல்லாத, தன் விரல்களை பார்த்து பார்த்து, அழுது வருகிறார், லீ ரெட்மண்ட்.
— ஜோல்னாபையன்
