PUBLISHED ON : ஜன 08, 2012

மேற்கு வங்கம் என்றால், உடனே சிலிர்த்திடும் சிங்கமாக நினைவிற்கு வருபவர், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜிதான்; ஆனால், அங்கே இன்னொருவரும், பெண் சிங்கமாக உலாவி வருகிறார்.
இவரது பெயர் சுசிதா தாஸ். கோல்கட்டாவில் உள்ள பிரபலமான புகைப்படக் கலைஞர். மேற்கு வங்கத்தை, அவ்வப்போது அச்சுறுத்தும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை படமெடுப்பதுதான், இவரது பிரதான வேலை.
பள்ளியில் படிக்கும் போதே, புகைப்படக் கலையின் மீது ஏற்பட்ட விருப்பம் காரணமாக, முழு நேர புகைப்படக் கலைஞரானார்.
பிரபலமான புகைப்படக் கலைஞர்கள் ரகுராய், அதுல் காஸ்பர், நேஷனல் ஜியாகிராபி போட்டோகிராபர் ஸ்டீவ் மெக்கரி ஆகியோரது பயிற்சி பட்டறையில் படித்து, தன்னை பட்டை தீட்டிக் கொண்டார். அதன் பிறகு, பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு, புகைப்படக்காரராக பணியாற்றினார்.
இவர் எடுத்த புகைப்படங்கள், சர்வதேச அளவில் பல பத்திரிகைகளில் வந்துள்ளன. இதன் காரணமாக, விருதுகளும் குறைவின்றி குவிந்துள்ளன.
சுனாமி, பூகம்பம், வெள்ளம், புயல் போன்ற பேரிடர்களின் போது, மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சொல்வதற்காக, துணிந்து, தனியாக களத்தில் இறங்கி, படமெடுத்து, மக்களின் துயரங்களை, துன்பங்களை உலகிற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, பல சமயங்களில் உதவியாக இருந்துள்ளார்.
இதைவிட, இவர் பெருமையாக கருதுவது, மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளின் போது, பல ஆண் போட்டோகிராபர்களே காட்டுக்குள் போய், குண்டு மழைக்கு நடுவே படமெடுக்க தயங்கிய வேளையில், முதல் ஆளாக கேமராவைத் தூக்கிப் போய், படமெடுத்து வந்துள்ளார்.
உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ள இவர், தான் எடுத்த புகைப்படங்களை பல முறை கண்காட்சிகளாகவும் வைத்துள்ளார்.
குறைந்த செலவில், அனைவருக்கும் போட்டோகிராபி கற்றுக் கொடுக்க வேண்டும்; அதிலும் குறிப்பாக, எல்லாத் துறைகளிலும் முன்னேறி, பத்திரிகை புகைப்படத் துறையில் மட்டும் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்கு, இதில் ஆர்வத்தை ஏற்படுத்தி வளர்த்து விட வேண்டும் என்பது இவரது லட்சியம். இந்த லட்சியம் நிறைவேற, தற்போது, 'இமேஜ் ரீடிபைண்டு' என்ற புகைப்படப் பள்ளியை நடத்தி வருகிறார்.
சுசிதா தாஸ் பற்றியும், அவரது புகைப்பட பயிற்சி பள்ளி பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ள, www.suchetadas.com என்ற இணைய தளத்திற்கு போய் பார்க்கலாம்.
***
எல். முருகராஜ்
