
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடி அடங்கும் ஆன்மிகமடா!
எல்.ஆர்.ஈஸ்வரி,
'செல்லாத்தா' பாடாமல்
எந்த அம்மனுக்கும் கிடைப்பதில்லை
ஆடிக் கூழ்!
கறுப்புப் பணக்காரர்களின்
கறை கழுவும் கரங்களால்
களை கட்டுகிறது
அன்னதானம்!
ஊரைச் சுற்றி, மிரட்டி வசூலித்த,
'ப்ளக்ஸ்' போர்டுகளில்
அம்மனை விட
உயரமாய் உபயதாரர்கள்!
ஆத்தாளை அலங்கரித்து
வாசலில் வைத்து
கலை நிகழ்ச்சியாக
அரை குறை அழகிகளின்
மல... மல... மருதமல!
நோயாளிகளையும் படிப்பாளிகளையும்
நோகடிக்கும் ஒலி பெருக்கி
நள்ளிரவு வீதியுலா வந்து
தூக்கத்தைக் கெடுக்கும்
வாண வேடிக்கை!
அமைதியை நாடும்
ஆன்மிகத்தில் அனாவசிய
ஆர்ப்பாட்டங்கள் என்றால்
கருவறையில் இருப்பாளா
கருமாரி!
மின்னும் மின்விளக்கில்
அலங்கார அம்மன்
திடீரென காணாமல் போனாளே...
மின் வெட்டா
நோஸ் கட்டா!
— அ.யாழினி பர்வதம்,
சென்னை.

