தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/செய்தற்கு அரிய செயல்!

செய்தற்கு அரிய செயல்!

செய்தற்கு அரிய செயல்!


PUBLISHED ON : ஜன 04, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவுட்டோர் ஷூட்டிங்கில், தன் கேரவனுக்குள் அமர்ந்து, 'ஏசி'யின் ஜில்லிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பிரபல நடிகை ஸ்வஸ்திகா. தொடர்ந்து, ஆறு வெற்றிப் படங்களில், கதாநாயகியாக நடித்து, தமிழ்த் திரையுலகின் நம்பர், 'ஒன்' ஆகி, தற்போது இந்தித் திரையுலகிலும், காலடி எடுத்து வைத்துள்ள நடிகை ஸ்வஸ்திகா, இன்றைய தினத்தில் ஆண்களின் கனவுக்கன்னி. கேரவனின் கதவு நாசூக்காகத் தட்டப்பட,''யெஸ்... கம் இன்,'' என்றாள், உதட்டுச்சாயம் கலையாமல்.

மெல்ல உள்ளே வந்த அவளது மேனேஜர் பிரசாத், அங்கு வியாபித்திருந்த இனிய நறுமணத்தை இஷ்டமாய் சுவாசித்தபடியே, அந்த விஷயத்தைச் சொன்னார்.

அதைக் கேட்டதும், சாய்ந்து படுத்திருந்தவள், 'விருட்'டென எழுந்தமர்ந்து, ''அப்படியா...'' என்று, வியப்பை கண்களில் காட்டினாள். அவளால், அதை முழுவதுமாக நம்ப முடியவில்லை. அது, அவளை ஒரு வகையில் கோபப்படுத்தினாலும், அந்த நேரடி உண்மை, அவளது மூளை வரை ஊடுருவிச் சென்று, கொஞ்சம் யோசிக்கவும் வைத்தது. ''என்னது... பிரபல நடிகையான இந்த ஸ்வஸ்திகாவை அழகுபடுத்தணும்ன்னு சொல்லியும் கூட, இந்த ஊர், 'பியூட்டி பார்லர்' லேடி வர மறுத்துட்டாளா? ஆச்சரியமாயிருக்கே... அவ என்ன அவ்வளவு பெரிய அழகு கலை நிபுணரா?''என்று கேட்டாள்.

''அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க மேடம். படு சாதாரணமான அழகுக்கலை நிலையம் தான் அவளோடது! சென்னைல, நம்ம பங்களாவுல இருக்கற, உங்க மேக்கப் ரூமை விட சிறிசு, அவளோட பார்லர். அதே மாதிரி, நீங்க வெச்சிருக்கற அழகு சாதனங்கள்ல, பாதி கூட அங்க இல்ல.''

''அப்புறம் ஏன் அவ வர மாட்டேங்குறா... ஒரு வேள, நான் பெரிய நடிகை என்பதால், எனக்கு மேக்கப் போடறதுக்கு, பயந்துட்டு மறுக்கிறாளா?''

''ம்ஹூம்... அந்தப் பெண், அந்த தேதிக்கு வேற ஒரு திருமணத்துல மணப்பெண் அலங்காரத்துக்கு ஏற்கனவே ஒப்பந்தம் ஆயிட்டாளாம். அதனால, அதை விட்டுட்டு இங்க வர மாட்டாளாம்.''

''முட்டாள்... சுத்த விவரம் புரியாத பெண்ணாயிருக்காளே... பிரபல நடிகை ஸ்வஸ்திகாவுக்கு, ஒப்பனை போட்டு, அதை போட்டோ எடுத்து, பேனராக்கி, விளம்பரத்திற்கு பயன்படுத்தி, தன்னோட அழகு நிலையத்தை புதுப்பிக்க செய்யலாமே? அது ஏன் அவளுக்கு புரியலை. 'சப்போஸ்' அவளுடைய, ஒப்பனை ஒத்துப் போய், எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சுனா, நானே, என்னோட அடுத்த படங்களுக்கு அவளுக்காக பேசுவேன். அதன் மூலம், அவள் சினிமாக்குள்ளே நுழையலாம்; பெரிய அழகுக்கலை நிபுணராகலாம்; வாழ்க்கை பாதையே மாறிப் போகும். சாதாரண இடத்திலிருந்து பெரிய இடத்துக்கு போயிடலாம். இதெல்லாம், ஏன் அந்தப் பெண்ணோட புத்திக்கு எட்டலை?'' என்று கேட்டவளுக்கு, தன்னுடைய தரிசனம் கிடைக்காதா என்று, தன் வீட்டு வாசலில் காத்துக் கிடக்கும் ரசிகர்களும், தன்னுடைய, 'கால்ஷீட்' கிடைக்காதா என்று தன் வீட்டு ஹாலில் கோடிகளுடன் காத்துக் கிடக்கும் தயாரிப்பாளர்களும், தன்னுடன் ஒரு படத்திலாவது, ஜோடியாக நடித்து விடத் துடிக்கும் முன்னணி நடிகர்களும், அந்த வினாடியில், அவள் நினைவில் வந்து போயினர்.

''தெரியல மேடம்... நானும் தெளிவாகவே சொன்னேன். 'பிரபல நடிகை ஸ்வஸ்திகாவுக்கு அழகுக்கலை நிபுணர், சென்னைல இருந்து வந்திருந்தாங்க... ஆனா, இங்க அவுட்டோர் ஷூட்டிங் வந்த இடத்துல, அவங்களுக்கு, திடீர்ன்னு, 'வைரஸ் காய்ச்சல்' வந்துருச்சு. அவங்க திரும்ப சென்னைக்கே போயிட்டாங்க... வேற அழகுக்கலை நிபுணர் சென்னையிலிருந்து வர்ற வரைக்கும், மேடத்தால காத்திருக்க முடியாது, அவங்க இதை முடிச்சிட்டு மும்பை கிளம்பியாகணும். அங்க ஷாரூக்கான் சாரோட, ஷூட்டிங் இருக்கு. அதான், உள்ளூர்லயே அழகுக்கலை வெச்சு நடத்திட்டிருக்கற உங்களை கூப்பிடறோம்'ன்னு சொன்னேன். அந்தப் பொண்ணு மசியலை மேடம்,''என்றார்.

''சென்னைல... எனக்கு அழகு படுத்துவதற்காக, சான்ஸ் கேட்டு என் வீட்டு வாசல்ல வந்து, அழகுக்கலை படிச்ச எத்தனையோ பெண்கள் தவம் கிடக்கறாங்க... இந்த லேடி என்னடான்னா...'' சலித்துக் கொண்டாள் நடிகை ஸ்வஸ்திகா.

அப்போது, அறைக்குள் வந்த இயக்குனர் பரமேஷ், ''என்ன மேடம்... அழகுபடுத்தும் பெண் கிடைச்சாங்களா... இல்லை, சென்னைல இருந்தே வரவழைக்க ஏற்பாடு செய்யட்டுமா?'' என்றார்.

''டைரக்டர் சார்... ஒரு மணி நேரம் டைம் குடுங்க. அந்த அழகுக்கலை படித்த பெண்ணை, நேரில் வரவழைச்சு நானே பேசிப் பார்க்கறேன். ஒருவேளை என்னை நேர்ல பார்த்ததும், அந்தப் பெண் மனசு மாறினாலும் மாறுவா,'' ஸ்வஸ்திகாவின் பேச்சில் கர்வம் தொனித்தது.

''ஓ.கே., மேடம்... எதுவானாலும், கொஞ்சம் சீக்கிரமே சொல்லிடுங்க. ஹீரோவோட கால்ஷீட்டும் ரெண்டு நாளோட முடியுது. அவர் இதை முடிச்சிட்டு வெளிநாடு கிளம்பறாராம்,'' சொல்லி விட்டு நகர்ந்தார் இயக்குனர் பரமேஷ்.

''மேனேஜர்... எனக்கென்னமோ நீங்க பேசின தோரணை தான் சரியில்லன்னு தோணுது. நீங்க பிசினஸ் டாக் மாதிரி பேசியிருப்பீங்க... அதெல்லாம் சென்னைக்கு வேணா ஒத்து வரும். கிராமத்துக்காரங்க கிட்ட கொஞ்சம் வேற மாதிரிப் பேசினாத்தான் காரியம் ஆகும். அதனால, என்ன செய்றீங்க... மேடம் உங்ககிட்ட தனியா பேசுணுமாம், வரச் சொன்னாங்கன்னு சொல்லி, அந்தப் பெண்ணை என் கிட்டக் கூட்டிட்டு வாங்க,'' என்றார்.

''ஓ.கே., மேடம்,'' தலையாட்டியபடி மேனேஜர் பிரசாத் கிளம்பினார்.

''மேனேஜர்... அட்லீஸ்ட் இந்தக் காரியத்தையாவது வெற்றிகரமா முடிச்சிட்டு வாங்க. இதிலேயும் சொதப்பிட்டு வந்து, 'சாரி மேடம்... அந்தப் பொண்ணு வர மாட்டேனிடுச்சு'ன்னு வழியாதீங்க,''என்றாள்.

முகம் மாறிப் போன மேனேஜர் பிரசாத்,

''ஓ.கே., மேடம்,'' என்று கடுப்பாய் சொல்லி, அவசரமாக புறப்பட்டு சென்றார். போகும் போதே முடிவு செய்து கொண்டார். 'ஒண்ணு, அந்தப் பொண்ணைக் கூட்டி வந்தே தீரணும். இல்லாட்டி, இந்த உத்தியோகத்தைத் தூக்கியெறிஞ்சிட்டு, சொந்த ஊருக்கே போயிடவேணும். இந்த ரெண்டுல ஏதோ ஒண்ணு செஞ்சே ஆகணும். கருமம்... கருமம் என்ன பொழப்புடா இது...' என்று மனதிற்குள் புலம்பினார்.

அந்த டஞ்சன் பார்லருக்குச் சென்று, காத்திருந்து, அந்தப் பெண்ணைச் சந்தித்த மேனேஜர், அவள் கையை, காலைப் பிடித்துக் கெஞ்சி வெற்றிகரமாய் அவளைச் சம்மதிக்க வைத்து, அடுத்த அரை மணி நேரத்தில், நடிகை ஸ்வஸ்திகாவின் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

தன் எதிரில் வந்து நின்றவளை, மேலிருந்து கீழ் நோட்டமிட்ட நடிகை ஸ்வஸ்திகாவின் இதழோரம், ஒரு இளக்காரப் புன்னகை தவழ்ந்தது. ''உன் பேர் என்ன?'' என்று கேட்டாள்.

''ஜோதி,'' என்றாள் அந்தப் பெண்.

முதன் முதலாக ஒரு பிரபல நடிகையை நேரில் சந்தித்து, பேசுகிறோம் என்ற ஒரு பரவசமுமோ, குறுகுறுப்போ அந்தப் பெண்ணிடம் காணாதது ஸ்வஸ்திகாவை லேசாய் அதிர வைத்தது.

''என்னோட மேனேஜர் வந்து, மேக்கப் போடக் கூப்பிட்டதற்கு வர முடியாதுன்னுட்டியாமே,'' தன் ஷாம்பூ பிரெஷ் கூந்தலை ஸ்டைலாக ஒதுக்கித் தள்ளியவாறே கேட்டாள்.

''ஆமாங்க மேடம்... இன்னிக்கு மதியத்துக்கு மேல, எங்க ஊர் தர்மகர்த்தாவோட பொண்ணுக்குக் கல்யாணம். அவங்க ஏற்கனவே மணப்பெண் அலங்காரத்துக்கு, 'அட்வான்ஸ்' குடுத்து, ஒப்பந்தம் செய்துருக்காங்க. அதனால தான் வரமுடியாதுன்னு சொன்னேன்,''அப்பெண்ணின் பேச்சில் ஒரு பணிவும், பவ்யமும், தொழில் பக்தியும் இருந்தது.

''ஓ...'' என்று நக்கலாய் இழுத்த நடிகை ஸ்வஸ்திகா, ''அந்த மேக்கப் வேலைக்கு, அவங்க உனக்கு எவ்வளவு தருவாங்க?''

''அறுநூறு ரூபாய் தருவாங்க.''

அதைக் கேட்டு, வாய் விட்டுச் சிரித்த ஸ்வஸ்திகா, தன் மேனேஜர் பிரசாத் பக்கம் திரும்பி, ''மேனேஜர்... இவங்களுக்கு நாம முடிவு செய்த தொகையைப் பற்றி நீங்க சொல்லவே இல்லையா?'' என்று கேட்டாள்.

''இருபத்தஞ்சாயிரம்ன்னு சொன்னேன் மேடம். அதுக்கப்புறமும், இவங்க ஒத்துக்கலை.''

''ஓ.கே., இப்ப நான், அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி, 50 ஆயிரம் தர்றேன். போம்மா... போய் உன்னோட மேக்கப் கிட்டை எடுத்துக்கிட்டு, உடனே வந்து சேரு... பிரசாத் இவங்களை நம்ம காரிலேயே கூட்டிட்டு போயிட்டு, திரும்ப கூட்டிட்டு வாங்க,''என்றாள்.

''மேடம்... என்ன நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டே போறீங்க.... நான், வர்றேன்னு உங்க கிட்டே சொல்லவேயில்லையே,'' அப்பெண்ணின் பேச்சில் யதார்த்தம் இருந்தது.

'விருட்'டென்று திரும்பி, அந்த ஜோதியை வினோதமாய் பார்த்த ஸ்வஸ்திகா, ''என்ன... 50 ஆயிரம்ன்னு சொல்லியுமா வர மறுக்கறே... இன்னும் அதிகம் எதிர்பார்க்கறியா?'' என்றவளின் குரலில் கோபமும், கொஞ்சம் திமிரும் இருந்தது.

''இல்லங்க மேடம்... நீங்க ஒரு கோடி ரூபாய் குடுத்தாலும், என்னால வர முடியாது. ஏன்னா... ஒரு தடவை ஒப்பந்தம் செய்து வாக்கு குடுத்திட்டேன்னா... எக்காரணத்தைக் கொண்டும், வாக்கு தவற மாட்டேன்,'' என்றாள்.

நெற்றியைச் சுருக்கி, அவளை ஸ்வஸ்திகா ஊடுருவிப் பார்க்க,''மேடம்... நான் அதிகம் படிக்காதவ தான்... உங்க அளவுக்கு உலக ஞானமும் இல்லாதவதான். ஆனாலும், எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன், வாக்குத் தவறுவது மனுஷனுக்கு அழகல்ல. என்னைய மன்னிச்சுக்குங்க,'' என்று சொல்லி திரும்பிப் போன அந்த பியூட்டி பார்லர் பெண், இரண்டடி சென்றதும் நின்று, திரும்பி, ''மேடம்... அறுநூறு ரூபாய் என்பது சின்ன தொகை தான். ஆனா, அந்த மணப்பெண்ணோட அப்பா தர்மகர்த்தா இருக்காரே... அவர் தான் நான் இந்த பியூட்டிசியன் கோர்ஸ் படிக்க பண உதவி செஞ்சவர். அது மட்டுமல்ல, நான் படிச்சு முடிச்சதும், இந்த ஊரிலேயே ஒரு பியூட்டி பார்லர் துவங்கச் சொல்லி, என்னை ஊக்குவிச்சு, அதற்கான நிதி உதவியும் செஞ்சவர். அப்படி என்னை இந்த அழகுக்கலை துறைக்கு அறிமுகப்படுத்தியவருக்கே, நான் துரோகம் செய்யலாமா... நான் இன்னிக்கு சாப்பிடும் சாப்பாடு அவரது இரக்க குணத்தோட பிச்சை இல்லையா... ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்கறவங்க யாராயிருந்தாலும் நல்லா இருக்க மாட்டாங்க,'' சொல்லிவிட்டு, கம்பீரமாக அவள் நடந்து செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்த ஸ்வஸ்திகாவின் மனதில், நேற்றைய நிகழ்வுகள் படமாய் ஓடின.

முந்தின நாள் மாலை...

ஒரு குழப்பமான மனநிலையில், தலையில் கையை வைத்தவாறு அமர்ந்திருந்தாள் நடிகை ஸ்வஸ்திகா. ஏதோ, ஒரு குற்ற உணர்வு, அவளை உறுத்திக் கொண்டிருந்தது. டீப்பாயின் மீதிருந்த அவளது மொபைல், பல முறை அடித்து அடித்து ஓய்ந்தது.

அவளது, 'அப்நார்மல்' நிலையைப் பார்த்த மேனேஜர் பிரசாத், 'அய்ய... என்ன மேடம் நீங்க... இந்த விஷயத்துக்கு போயி நீங்க இவ்வளவு தூரம் மூடுஅவுட் ஆகிட்டீங்க. நீங்க யார்? இன்னிக்கு இண்டஸ்ட்ரீல நம்பர் ஒன் ஹீரோயின். அந்த இயக்குனர் ராம்தேவ் யாரு? இன்றைய நிலைமைல, 'அவுட் ஆப் பீல்ட்' ஆகிப் போய்க் கிடக்குற ஒரு பெயிலியர் இயக்குனர், நீங்க போய் அவருக்காக உங்க மூடைக் கெடுத்துக்கலாமா...' விசுவாசமாய் இருப்பது போல், விஷமாக பேசினார் மேனேஜர் பிரசாத்.

'இல்ல மேனேஜர்... வேற யாராவதா இருந்தாலும், ஒரே வார்த்தையில, முடியாதுன்னுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன் ஆனா, இவரு...'

'மேடம்... நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது. இயக்குனர் ராம்தேவ் உங்களை பீல்டுக்கு அறிமுகப்படுத்தியவர். அவரோட ரெண்டு வெற்றிப் படத்துல தொடர்ந்து நடிச்சதினால தான், நீங்க இன்னிக்கு இண்டஸ்ட்ரீல இந்த அளவுக்கு வளர்ந்திருக்கீங்க. இதெல்லாம் மறுக்க முடியாத உண்மை தான். ஆனா, தொடர்ந்து அஞ்சாறு படங்கள் தோல்விப் படங்களைக் குடுத்ததினால, அவர் நொடிஞ்சு போய்க் கிடக்கார். நிலைமை ரொம்பப் பரிதாபமாகி, வலியப் போய் ஒவ்வொரு தாயாரிப்பாளர் கிட்டயும் சான்ஸ் கேட்டுக் கெஞ்சிக்கிட்டிருக்கார். ஏதோ, பாவம்ன்னு நீங்க தான் மூணு மாசத்துக்கு முன்னாடி அவருக்கு கால்ஷீட் குடுத்தீங்க... அது தப்பில்லை. ஆனா, அவர் அதுக்கான, 'அட்வான்ஸ்' குடுத்தாரா... அட்லீஸ்ட்... படத்துக்கு பூஜையாவது போட்டாரா? ஒண்ணும் இல்லை. ஏன்னா பைனான்ஸ் ப்ராப்ளம், அவரால முடியாதுங்க மேடம்.

'மேடம்... உங்களோட கால்ஷீட் வேல்யூ, அப்ப இருந்ததை விட, இப்ப பல மடங்கு ஏறியிருக்கு. இப்ப, ஒரு பெரிய பேனர் ஒண்ணு உங்களைத் தேடி வந்து, அதே தேதிகளை கேட்கும்போது நீங்க கொஞ்சமும் தயங்காம அந்த தேதிகளை இவங்களுக்கு மாத்தி தரலாம், தப்பேயில்லை...' மேனேஜர் பிரசாத், தன் நன்றியைக் காட்டும் விதமாய், நன்றி மறக்கும் குணத்தை, தன் எஜமானிக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

'அதில்லை பிரசாத்... இயக்குனர் ராம்தேவ் போன் செய்து கேட்பார்... அந்த அளவுக்கு உரிமையுள்ளவர். அதான், அவர் அப்படிக் கேட்டால், என்ன சொல்றதுன்னு தெரியல...' விரல் நகங்களிலிருந்த நெய்ல் பாலீஷை நோட்டமிட்டவாறே சொன்னாள் ஸ்வஸ்திகா.

'இதிலென்ன மேடம் இருக்கு, ஒரே வார்த்தை, 'சாரி'ன்னு சொல்லிட்டுப் போனை வச்சிருங்க...'

'அது சரி... சப்போஸ் நேரிலேயே புறப்பட்டு வந்திட்டார்ன்னா...'

'கால்ஷீட் விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது... என் மேனேஜர் தான் பார்க்கிறார். அதனால, அவரைப் பாருங்கன்னு சொல்லிட்டு, நீங்க பாட்டுக்குப் போயிட்டேயிருங்க. அவர் என்கிட்ட வரட்டும், நான் உங்க கால்ஷீட்டோட கரண்ட் வேல்யூவைச் சொல்றேன். கூடவே, மொத்தப் பணத்தையும் ஒரே செக்ல செட்டில் செய்யணும்ன்னு சொல்வேன். அவ்வளவு தான், மனுஷன் ஓடியே போயிடுவார்...'

தொடர்ந்து மேனேஜர் பிரசாத் செய்த மூளைச்சலவையால், மனம் மாறிய ஸ்வஸ்திகா, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை பெரிய கம்பெனிக்கு மாத்திக் கொடுத்து, ஒரு மாபெரும் துரோகம் செய்யச் சம்மதிக்கலானாள்.

சட்டென்று நேற்றைய நினைவுகளிலிருந்து மீண்ட ஸ்வஸ்திகா, குற்ற உணர்வில் தவித்தாள். 'ச்சே... கிராமத்துல பியூட்டி பார்லர் நடத்தற ஒரு சாதாரண பெண்ணுக்கு இருக்கற நாணயமும், நன்றியுணர்வும் கூட, புகழ் பெற்ற நடிகையான எனக்கு இல்லையே...

'ஆரம்ப காலத்துல சினிமா சான்சுக்காக, நான் எத்தனை இயக்குனர்களுக்கு, துணை இயக்குனருக்கும் ஏன்... லைட்பாய்களுக்கும் கூட கும்பிடு போட்டிருக்கேன். ஒருத்தராவது பாசிட்டிவா பேசினாங்களா... எல்லாருமே வேற விதமான எதிர்பார்ப்புகளைத் தானே, கோரிக்கையா வெச்சாங்க... அந்தச் சமயத்துல, உண்மையிலேயே என் ஆர்வத்தைப் புரிஞ்சுக்கிட்டு, எந்தவித தவறான பார்வையும் இல்லாம, முன் அனுபவமே இல்லாத எனக்கு, எடுத்த எடுப்பிலேயே கதாநாயகி வாய்ப்புக் குடுத்தாரே...இயக்குனர் ராம்தேவ்! அவரை நான் மறக்கலாமா? நொடிஞ்சு போயிருக்கற அவருக்குக் கை கொடுக்காம, அவருக்குக் கொடுத்த கால்ஷீட்டை வேறொரு பெரிய கம்பெனிக்குத் தர நினைக்கிறேனே... இது முறையா? நாளைக்கு எனக்கும் இதே நிலை வரும்போது, மற்றவர்கள் என்னையும் இப்படித்தானே நடத்துவர்...'

உள்மன உறுத்தல்கள், அவளை ஒரு உன்னத மனுஷியாக்கி விட, அடுத்த நிமிடமே, ''மேனேஜர்,'' என்று உரக்க அழைத்தாள்.

ஓடி வந்த பிரசாத், ''சொல்லுங்க மேடம்,''என்றாள்

''என்னோட கால்ஷீட் இயக்குனர் ராம்தேவுக்கே இருக்கட்டும், மாற்ற வேண்டாம். அந்த பெரிய பேனர்க்கு, இப்போதைக்கு 'நோ'ன்னு சொல்லிடுங்க.''

''அய்யய்யோ மேடம்... நீங்க என்ன சொல்றீங்க... அப்படிச் செஞ்சா உங்களுக்கு பைனான்ஷியலா, ஒரு பெரிய நஷ்டம் ஏற்படும் மேடம்.''

''பண வரவுதானே குறையும். நோ பிராப்ளம்... ஆனா, நான் சொன்னதைச் செஞ்சா மனசு நிறையும்.''

மேனேஜர் வழக்கம் போல், தன் வசீகரப் பேச்சால் ஸ்வஸ்திகாவை மூளைச் சலவை செய்ய முயல, அவர் பேச்சைக் காதில் வாங்கிக்காமல்,''மேனேஜர்... இது நான் எடுத்த முடிவு; அதைப் பத்தி, நீங்க இதுக்கு மேலே எதுவும் பேச வேண்டாம்,''என்றாள்.

மேனேஜர் சென்றதும், தன் பிரத்யேக மொபைலை எடுத்து, இயக்குனர் ராம்தேவைத் தொடர்பு கொண்ட ஸ்வஸ்திகா, ''ஹலோ சார்... நான் ஸ்வஸ்திகா.''

''ஓ... ஆச்சரியம், புகழின் உச்சியிலிருக்கும் நம்பர் ஒன் ஹீரோயின், என்னை ஞாபகம் வைத்து அழைத்தது... ரியலி சர்ப்ரைசிங்,'' என்றார் இயக்குனர் ராம்தேவ் வியப்புடன்.

''சார்... எப்ப சார் நம்ம படம் பூஜை போடப் போறீங்க... உங்க இயக்கத்துல நடிக்கிறதுக்காக ஆவலோட காத்துகிட்டிருக்கேன்,'' சந்தோஷமாய்ச் சொன்னாள் ஸ்வஸ்திகா. சொல்லும் போதே இனம் புரியாத ஒரு உற்சாக உணர்வு, ஏற்பட்டது.

''அது... வந்து, கொஞ்சம்... பைனான்ஸ் பிராப்ளம்... அதான்,'' என்று இழுத்தவர், ''பட்... எனி வே... இன்னும், ஒரு மாசத்துல ஸ்டார்ட் செய்திடுவேன்.''

''சார்... உங்க படத்துக்கு, நான் வேணா பைனான்ஸ் செய்றேன் சார்.''

மறுமுனையில், சில நிமிடங்கள் அமைதி. பின், ''ஸ்வஸ்திகா நீ என்னம்மா சொல்றே?'' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் ராம்தேவ்.

''சார்... ஒண்ணுமே இல்லாம சென்னைக்கு வந்த எனக்கு, நீங்க உதவி செஞ்சதினால தான், நான் இன்னிக்கு இவ்வளவு உயரத்துல இருக்கேன்; இவ்வளவு சம்பாதிச்சிருக்கேன். இதெல்லாம் நான் சம்பாதிச்சதா இருந்தாலும், இதனுடைய முழு உரிமை உங்களுக்குத் தான்,'' என்றாள்.

''எனக்கு, என்ன பேசறதுன்னே புரியலைம்மா. இந்த பீல்டுல எல்லாருமே நன்றி கெட்டவங்கன்னு நெனச்சிட்டிருந்தேன். அந்த நினைப்பை பொய்யாக்கிட்டியேம்மா. இருண்டு போச்சு என் திரைப்பட வாழ்க்கைன்னு, என்னை நானே முடக்கிட்டுக் கிடந்தேன்ம்மா... நீ வந்து ஜோதி ஏத்திட்டியேம்மா,'' குரல் தழுதழுத்தது இயக்குனர் ராம்தேவுக்கு.

''அய்யய்ய... ஜோதி ஏத்தியது நான் இல்லை சார்... வேறொரு ஜோதி!''

''வேறொரு ஜோதியா...யாரந்த ஜோதி?''

''அது... ஒரு கிராமத்து ஜோதி சார்,'' என்றாள் ஸ்வஸ்திகா.

முகில் தினகரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us