PUBLISHED ON : மார் 28, 2021

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், 'கொரோனா' வைரசால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை, மீண்டும் முழு வீச்சில் செயல்படத் துவங்கியுள்ளது.
சுற்றுலா பயணியரை ஈர்ப்பதற்காக, புதுப்புது யோசனைகளுடன், திட்டங்களை வகுத்து வருகின்றனர், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள்.
இங்குள்ள, ஆன்டியோகுயோ என்ற பகுதியில், இரண்டு மிகப்பெரிய மலைக்குன்றுகளுக்கு இடையில், 'கேபிள்' பொருத்தி, அதில், உறுதியான துணியாலான தொட்டிலை கட்டியுள்ளனர்.
'ரோப் கார்' போன்ற இந்த தொட்டிலை, நேரக்கணக்கில் வாடகைக்கு எடுக்கலாம். பூமியிலிருந்து, 100 அடி உயரத்தில், இந்த தொட்டில் தொங்கும்.
சுற்றுலா பயணியர், இந்த தொட்டிலில் ஆடியபடியே, கீழே இருக்கும் இயற்கை அழகை, பார்த்து ரசிக்கலாம். ஒரு தொட்டிலில், ஒருவர் மட்டுமே அமர முடியும்.
கொலம்பியாவில், 'கொரோனா' பீதி குறைந்துள்ளதால், ஆகாய தொட்டிலில் ஆடுவதற்கு, சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
— ஜோல்னாபையன்
