sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 13, 2015

Google News

PUBLISHED ON : செப் 13, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது, 30; திருமணமாகி, நான்கு ஆண்டுகளாகிறது. இரு மகன்கள்; என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அவர் மீது எனக்கு ஒரே ஒரு கோபம் உள்ளது. திருமணத்திற்கு முன், அவர் ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். அதை, அவர் என்னிடம் சொல்லவில்லை; திருமணம் ஆன ஒரே வாரத்தில் நானே கண்டுபிடித்தேன். இதை அவரே சொல்லியிருந்தால், அவர் மீது சந்தேகப்பட்டு இருக்க மாட்டேன்.

அவர் அரசு பணியில் உள்ளார்; அதனால், அவர் வேலை செய்யும் இடத்திற்கே வீடு பார்த்து என்னை அழைத்து சென்றார். அப்போது, வீடு சுத்தம் செய்யும் போது, அவருடைய காதலி அவருக்கு எழுதிய காதல் கடிதம் என் கையில் கிடைத்தது. அக்கடிதத்தில், 'நான், என் கணவரை விவாகரத்து செய்துட்டு, மீண்டும் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்; என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக் கொள்வாயா? தினமும் உன் போனும், எஸ்.எம்.எஸ்.,சும் வந்தால் தான், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்...' என்று எழுதி இருந்தது.

அரசு துறையில் வேலை கிடைப்பதற்கு முன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார் என் கணவர். அங்கே தான் அவளும் வேலை பார்த்துள்ளாள். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். அவர்கள் எத்தனை ஆண்டு காதலித்தனர் என்று தெரியவில்லை. அந்த பெண்ணிற்கு அவளது வீட்டினர் வேறொரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துள்ளனர். அதன்பின்பும், இவர்கள் இருவரும் கடிதம், போன், எஸ்.எம்.எஸ்., மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, 'என்னை மன்னித்து விடு...' என்று சொல்லி, 'இதை உன்னிடம் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வாயோ என்று பயந்தேன். அதனால் தான் சொல்லவில்லை. அவள் தான் கடிதம் எழுதுவதுடன், எஸ்.எம்.எஸ்., செய்வாள்...' என்று கூறினார்.

கல்யாணத்திற்கு முன் இருவரும் காதலித்து இருக்கலாம்; ஆனால், தற்போது, அவள் வேறொருவர் மனைவி. அவள், இவரிடம் தொடர்பு கொண்டாலோ, இவர், அவளை தொடர்பு கொண்டாலோ இரண்டுமே தவறு தானே! இது ஏன் இருவருக்கும் தெரியவில்லை.

அவளால் எப்படி அவள் கணவருக்கு துரோகம் செய்ய முடிகிறது. இவரும் எனக்கு துரோகம் செய்கிறார். கேட்டால், எதையாவது சொல்லி மழுப்புகிறார்.

கல்யாணத்திற்கு பின், என் கணவரைத் தான் காதலிக்க வேண்டும்; நம்மை திருமணம் செய்பவரை ஏமாற்றாமல், முழு அன்பையும் அவரிடம் காட்ட வேண்டும் என்று நினைத்து வாழ்ந்தவள் நான்.

ஆனால், இவரோ திருமணத்திற்கு பின்பும் வேறொரு பெண்ணிடம் பேசுகிறார். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், உள்ளுக்குள், அவர் மீது பாசம் இருந்தாலும், வெளியில் கோபப்படுவதுடன் அவரை திட்டுகிறேன்.

இவருக்கு அந்த பெண்ணுடன் மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது தவறான தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை. அந்த பெண், தன் கணவனுடன் சேர்ந்து இருக்கிறாளா அல்லது தனியாக இருக்கிறாளா, அவளும் இதே ஊரில் தான் இருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. என் மாமியார் இறந்த பின், நான் கணவரின் சொந்த ஊரில் இருக்கிறேன். அவர் வாரா வாரம் வந்து என்னையும், குழந்தையையும் பார்த்து செல்வார். எனக்கு துணையாக என் அம்மா உள்ளார்.

நான்கு மாதத்திற்கு முன், இவர் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., பார்த்தேன். அதில், இருவரும் தவறான எஸ்.எம்.எஸ்., அனுப்பியுள்ளனர். படிக்கவே அசிங்கமாக உள்ளது. அவருடன் சண்டை போட்டேன். 'என்னை மன்னிச்சுடு; இதுபோல இனி செய்ய மாட்டேன்...' என்று சொன்னார். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை; என்ன செய்வது என்றும் புரியவில்லை.

அவர் மொபைலில் இருந்து, அவள் நம்பரை எடுத்து, 'இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு செத்து போ; அடுத்தவ புருஷனுக்கு ஆசைபடுறயே... நீ நல்லாயிருப்பாயா... செத்து போடி...' என்று திட்டினேன்; இவரையும் திட்டினேன். எப்படி இவரை திருத்துவது?

கேட்டால், 'நீ என்னிடம் அன்பாக பேசவில்லை...' என்கிறார்.

நான் அன்பாகத் தான் இருக்கிறேன்; ஆனால், அவரிடம் காட்டுவதில்லை. ஏனென்றால், அவர் என்னை ஏமாற்றி விட்டாரே என்று!

இவர் யாரிடம் பேசினாலும், எஸ்.எம்.எஸ்., வந்தாலும் அவளுடன் தான் பேசுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது; அவர், எனக்கு மட்டும் தான். அவர், என் அன்பை எப்போது புரிந்து கொள்வார் என்று தெரியவில்லை. வெளியில் திட்டினாலும், கோபப்பட்டாலும் மனதளவில் மிகுந்த பாசம் வைத்துள்ளேன். அதை எப்படி வெளிக்காட்டுவது என்று தெரியவில்லை. நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்வு சொல்ல வேண்டும்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்.


அன்புள்ள மகளுக்கு —

கணவருக்கு வந்த காதல் கடிதங்களை, நீ படிக்க நேர்ந்தது துரதிஷ்ட நிகழ்வே!

உன் கணவரின் மீது, உனக்கு மிதமிஞ்சிய காதல் இருந்தாலும், கணவரின் தவறை தண்டிப்பதற்காக, உன் அன்பை வெளிக்காட்டாமல் நடிக்கிறாய். உன் கணவனோ, முன்னாள் காதலியுடன் குறுந்தகவல் தொடர்வதற்கு காரணம், நீ அன்பு காட்டாதது தான் என குற்றம் சாட்டுகிறான்.

நீ, உன் கணவனிடம், காதலாய் பேசிப் பேசி தான், அவன் மனதிலிருந்து காதலி நினைவை அகற்ற வேண்டும். உன் கணவனை திருத்த வேண்டும் எனில், கணவனை கடிந்து பேசியோ, குத்தி காட்டி பேசுவதனாலோ திருத்த முடியாது. மாறாக, கடிந்து பேசுவதை காரணம் காட்டி, காதலியுடனான தொடர்பை தீவிரப்படுத்துவான்.

செக்ஸ் தவறுகள் செய்பவர்களுக்கு, பெரும்பாலும் குற்ற உணர்ச்சி இருப்பதில்லை. 'உலகில் யாரும் செய்யாததையா நாம் செய்கிறோம்...' என, மனதை சமாதானப்படுத்திக் கொள்வர். 'எங்கள் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டிருந்தால், பின்னாளில் நாங்கள் எதற்கு கள்ளக்காதலில் ஈடுபடப் போகிறோம்...' என்பர் உன் கணவரும், அவரது காதலியும்!

பெரும்பாலான ஆண்கள், மனைவிக்கு உண்மையாய் இருப்பதில்லை. ஆனால், பெரும்பாலான பெண்கள், கணவனுக்கு உண்மையாக இருக்கின்றனர். அதனால்தான், இந்தியத் திருமணங்கள் இன்னும் உலக அளவில் ஜெயித்துக் கொண்டிருக்கின்றன.

செயின் ஸ்மோக்கிங் எப்படி நுரையீரல்களை கறை படுத்துகிறதோ, அதைபோல் கைபேசியில் பேசிப் பேசி ஆண் - பெண்களின் மனதில் வக்கிரம், முறையற்ற காமம் படிந்து விடுகிறது. படியாத பெண்ணுக்கு நூறு காதல் குறுந்தகவல் அனுப்பினால், படிந்து விடுவாள் என்ற கசப்பான உண்மை இருக்கிறது.

ஒரு ராங் காலில், கள்ளக்காதல் பூத்து விடுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், கள்ளக்காதலில் ஈடுபட்டால், சமூகம் நம்மை ஒதுக்கும் என்ற நிலை மாறிவிட்டது. தவறு செய்பவர்கள் சாதனை செய்பவர்களாக மதிக்கப்படுகின்றனர்.

தாம்பத்யத்தில் அதிக ஈடுபாட்டை உன் கணவனுக்கு ஏற்படுத்த உடலால், மனதால், செயலால் ஊக்குவி. பிள்ளைகளை வளர்ப்பதில் உன் கணவனை ஈடுபடுத்து. காதலியை விட நீ எல்லா விதங்களிலும் சிறந்தவள் என்ற, 'இமேஜை' உருவாக்கு. கணவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப் போடு. 'உன்னை மன்னித்து விட்டேன்; இனி தவறுகள் செய்யாதே...' என்பதை கண்டிப்பாய் சொல்லாமல், அன்பாகச் சொல்.

கணவனின் கைபேசி எண்ணை மாற்றச் சொல்; மனைவி, மகன்கள் இருக்கும் வீடு, சொர்க்கம் என்ற பாவனையை உருவாக்கு.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us