PUBLISHED ON : ஏப் 01, 2012

ஹாலிவுட் நடிகை, ஏஞ்சலினா ஜோலியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 36 வயதானாலும், கிறங்கடிக்கும் தன் அழகாலும், நடிப்புத் திறனாலும், ஹாலிவுட்டில் இன்னும் இவர் கொடி தான் பறந்து கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் மிக்கவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சமீபத்தில், நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், இவர் அணிந்திருந்த உடை, பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. தன் வலது கால் முழுவதும் வெளியில் தெரியும் படி, ஒரு கறுப்பு நிற உடையை அணிந்திருந்தார். 'டிவி' கேமராமேன்களுக்கு, அன்று முழுவதும் நல்ல வேட்டையாகி விட்டது.
ஏஞ்சலினாவின், 'ரைட் லெக்' புகைப் படத்தை, பத்திரிகைகளில் பார்த்த அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூவ் என்ற டாக்டர், ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். 'இந்த புகைப்படத்தில் ஏஞ்சலினாவின் கால், கை, தோள் ஆகியவற்றை பார்க்கும்போது, அவர் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. கால், கை போன்ற பகுதிகளில், தசைகளையே காணவில்லை. எலும்புகள், வெளியில் தெரியும்படி துருத்திக் கொண்டிருக்கின்றன. உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால், இன்னும் சில நாட்களில் அழகான ஏஞ்சலினா, எலும்புக் கூடு ஏஞ்சலினாவாக மாறி விடுவார். உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்...' என்றார்.
சரியான நேரத்துக்கு சாப்பிடாதது, எந்த நேரமும் உலகம் சுற்றுவது, சத்தான உணவுகளை சாப்பிடாதது போன்ற ஏஞ்சலினாவின் கவனக் குறைவு தான், அவரை இந்த பேராபத்துக்கு கொண்டு வந்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கவலைப் படுகின்றனர்.
***
தி.மகிழ் அரசு
