
**கே.சுந்தர், உத்திரமேரூர்: அனுபவம், அனுபவம் என்கின்றனரே அப்படின்னா என்ன?
பெரிய கம்ப சூத்திரம் ஒன்றுமில்லை... மனிதர்கள், தாங்கள் செய்த தவறுக்கு சூட்டிக் கொண்ட பெயர் தான் அனுபவம்.
***
*ஆர்.சந்திரா, திருநகர்: முகஸ்துதி செய்பவர்களை கண்டால், கடுமையாக பேசி விடுவீரா? பல்லிளித்து கொள்வீரா?
முகஸ்துதி செய்பவரின் புரிந்து கொள்ள முடியாத முக பாவனைகளைக் கண்டு விடுவேன். ஆசாமியை ஆழம் பார்த்துக் கொள்வேன்... கலப்பையை மாற்றி, கள்ள உழவு எப்போ போடுவான் என்பதற்கான கால நேரத்தையும் கணித்து விடுவேன்!
***
*எஸ்.ஏகாம்பரம், நாகர்கோவில்: இடியே விழுந்தாலும் அலட்டிக் கொள்ளாத ஆசாமிகளை என்ன செய்வது?
இந்திய மக்கள் எல்லாரையும் அல்லவா கவனிச்சாகணும்... பெரும்பாலும், இடிகளை மக்கள் தலையில் விழ வைக்கும், ஆட்சியாளர்களின் இடியை தாங்கிக் கொண்டு, அலட்டிக்காமல் இருக்கப் பழகி விட்டனரே...
***
* எம்.ஆனந்தன், பழைய பல்லாவரம்: கணவரை இழந்த இளம் பெண்கள் அனைவரும் மறுமணம் செய்து கொள்வதை வரவேற்கிறீர்களா?
நிச்சயமாக... திருமணமாகாமலே இருக்கும் பெண்களை விட, கணவரை இழந்த பெண்களுக்கு திருமணம் அவசியம்!
***
**என்.ராமச்சந்திரன், அஸ்தினாபுரம்: பெண்களிடமிருந்து ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை என்னென்ன?
சகிப்புத்தன்மை, பொறுமை, நெஞ்சுரம், அன்பு, பாசம்... இன்னும், இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்! ஆனால், கற்றுக் கொள்ள ஆணின், 'ஈகோ' தடை போட்டு விடுமே!
***
*ஆர்.ஸ்ரீதர், பசுமலை:காதலிப்பவர் அனைவராலும் கவிதை எழுத முடியுமா?
தெரியவில்லை. தோல்வி அடைந்த அனைவரும் எழுதுவதை கேள்விப்பட்டுள்ளேன்.
***
** கே.ராஜாமணி, சென்னை: தகுதியை புறக்கணித்து, ஜாதிக்கும், பணத்திற்கும் முக்கியத்துவம் தரப்படுகிற நிலையில், இந்தியா ஒரு ஜப்பானாக மாற வாய்ப்புள்ளதா?
ஜப்பானை போல், ஒரே மொழி, ஒரே மதம் என்று இல்லாமல் இருப்பது நமக்கு ஒரு குறைதான். இந்த குறையையே, தமக்கு சாதகமாக்கி வயிறு வளர்க்கும் அரசியல் வாதிகள் கொடுக்கும் இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும், நாம் வளர்ந்து வருகிறோம் என்பதே ஆறுதல்!
***
*எஸ்.நாகஜோதி, சுந்தராபுரம்: உங்களுடைய கோபம் எப்படி இருக்கும்?
மவுனமாக! பேச்சே வெளியே வராது.
***

