
ஆர்.கனகலிங்கம், ஊத்துப்பட்டி: தேர்வு மட்டுமே மாணவர்களின் திறமையை வெளிக்காட்டுமா?
நிச்சயம் இல்லை; உருப்போடுவதில் எவர் திறமையானவர் என்பதை, வெளிச்சம் போட உதவுவது தான் தேர்வு!
என்.வி.கலா, பொள்ளாச்சி: என் கணவர் மீது அடிக்கடி சந்தேகம் கொள்கிறேன்; பிறகு வருத்தப்படுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
உங்களது நிலையில் இருத்திப் பாருங்கள் உங்கள் கணவரை, தெளிவு பிறக்கும்!
வி.நாகராஜன், அனுப்பானடி: உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், மாதம் ஓரிரு முறை முதல்வரை சந்தித்து நாட்டுப் பிரச்னைகளை கலந்து பேசி, அதை பொதுமக்களுக்கு பத்திரிகை வாயிலாக தெரிவித்தால் நலமாயிருக்குமல்லவா?
நாங்க ரெடி!
எஸ்.ஞானசவுந்தரி, விழுப்புரம்: திருமணமாகி பிள்ளை பெற்ற பின்னும், சில பெண்கள் தாலியை மறைக்க முயல்வது ஏன்?
சைக்கிளில், - ஸ்கூட்டரில் வந்து, சங்கிலி பறிக்கும் திருடர்கள் பயம்தான்!
பி.ராம்குமார், கடலூர்: வீதியில் செல்லும் பெண்களைப் பார்க்கும் பழக்கம் மட்டும் ஆண்களுக்கு விட முடியாத பழக்கமாக உள்ளதே... என்ன செய்து இப்பழக்கத்தைப் போக்கலாம்?
ஏதோ கொலை பாதகம் போலல்லவா, இப்பழக்கத்தை கருதுகிறீர்கள்... ஒரு தவறும் இல்லை; அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாதவரை!
பெ.பவுன்தாய், கம்பம்: தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோர் வைத்த பெயருக்கு முன்னால், தந்தையின் இன்ஷியலை எடுத்துவிட்டு, நடிகர் -நடிகை பெயரைச் சேர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எப்போது திருந்துவர்?
தன் வயிற்றுப் பாட்டுக்கு, தானே வழி தேடிக் கொள்ளும் நேரம் வரும் போது!
எஸ்.சேகர், இந்திராநகர்: உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, என்ன நினைப்பீர்கள்?
முகம் கொடுத்த ஓவிய வள்ளல் வாழ்க... வாழ்கவென்று!

