PUBLISHED ON : ஏப் 13, 2014

கோ.அருணாச்சலபிரபு, திருநகர்: பொய் பிறந்தது எங்கே?
'அரசியல்வாதியின் வாயிலும், அவர்கள் பேசும் மேடையிலும்!
கே.ஆரோக்கியமேரி, கேசவன்பாளையம்: சினிமாவை அதிகம் விரும்பி பார்ப்பவர்கள், வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்த வர்களா அல்லது காலத்தின் அருமையை உணராதவர்களா?
'தம்மைத் தாமே அழித்துக் கொண்டு, ஒரு சாராரை மீண்டும் மீண்டும் கறுப்புப் பணம், அதிக அளவில் சென்றடைய கருவியாக இருப்பவர்கள்!
மு.கேசவன், பொள்ளாச்சி: சைவ உணவு நல்லது என, அசைவத்தில் இருந்து மாற எண்ணி, காய்கறி விலையைக் கேட்டால், எட்டாத உயரத்தில் இருக்கிறதே... உங்கள் யோசனை என்ன?
'சீசனுக்கு ஏற்ற காய்கறிகளின் விலை மலிவாகத்தானே இருக்கும்... அவற்றை மட்டுமே வாங்குங்கள். பச்சைப் பட்டாணி பக்கம் ஏன் போகிறீர்கள். அது சரி... இப்போ மாட்டுக்கறி கூட, கிலோ, 60-70 ரூபாய் என, விற்கின்றனராமே... அது, சீப்பா?
எஸ்.மாலா, அனுப்பர்பாளையம்: இளம் விதவைப் பெண்கள் பூவும், பொட்டும் வைத்துக் கொள்ளலாமா? சடங்கு, சாஸ்திரம், சம்பிரதாயப்படி விட்டுவிடுவது நலமா?
'ஓநாய்கள் சுற்றும் உலகம் இது; கணவனை இழந்த பெண் ஒருத்தி, நீங்கள் கூறியவற்றை விட்டொழித்தால், பெரிய ஆபத்து அவளைச் சூழ்ந்து விடும்! மேலும், பூவையும், பொட்டையும் துறந்து விடுவதால் மட்டும், இறந்த கணவன் திரும்பி வந்து விடப் போகிறானா என்ன?
பி.மருதுபாண்டி, கோவை: சுடிதார் வந்த பின், இடுப்பழகை ரசிக்க முடியாமல் போய் விட்டதே...
'நாட்டின், ரொம்ப முக்கியமான பிரச்னை இது பாருங்க... அவனவன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே, அல்லாடிக் கொண்டிருக்கும் போது, இடுப்பைக் காணலே என்கிறீர்களே...
பி.அருண்குமார், நாட்டரசன்கோட்டை: கணவன் மட்டும் மனைவியை,'வாடி...போடி' என்று, அழைக்கலாமா?
'ஏன், சில மனைவியர், சாதாரண நேரத்தில், 'வாப்பா...போப்பா' என்கின்றனராம்... ஆனால், அன்புமிகும் போது, 'வாடா...போடா...' எனச் சொல்வதாக, மணமான நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். (ஆனால், அவர்கள், 'அன்புமிகும் போது' என்று சொல்வது, உதை வாங்கும் நேரமா என்பதைக் கேட்டுக் கொள்ளவில்லை!)
கே.ரங்கசாமி, வள்ளூர்: சினிமா என்பது கலையா அல்லது தொழிலா?
'இரண்டுமே இல்லை; அவை இரண்டும் புனிதம். இது, சூது... இந்த சூதில் வீழ்பவர்கள், பெரும்பாலும் அழிந்தே போகின்றனர்!
