PUBLISHED ON : நவ 16, 2014

க.பார்த்திபன், நிலக்கோட்டை: எப்போது பணக்கார நாடாவோம்?
ஏன்... இப்போதே நம்ம நாடு பணக்கார நாடுதான்! உலகில் தயாராகும், 12 வைர நகைகளில், 11 நகை, நம் நாட்டில் வெட்டி, பாலீஷ் செய்யப்பட்டு கட்டப்படுகிறது. உலக நாடுகள் இறக்குமதி செய்யும் வைரத்தில், 85 சதவீதம் இந்தியாவின் பங்கு! 10 லட்சம் தொழிலாளர்கள் வைர வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இப்போ சொல்லுங்க... நாம பணக்கார நாட்டில் வசிக்கிறோமா, இல்லையா?
மு.ஜாகிர் உசைன், அம்மாபாளையம்: செஞ்சிலுவை சங்கம் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது?
போரில் காயமடையும் வீரர்களுக்கு, மருத்துவ உதவி செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது. இதன் பெயரில் சிலுவை இருப்பதால், இஸ்லாமிய நாடுகளில் இச்சங்கத்தை, 'செவ்விளம்பிறைச் சங்கம்' என, அழைக்கின்றனர்.
பெ.மாரியப்பன், அனுப்பானடி: ஆண்களைப் போல் பெண்களும் ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கின்றனரே... என்ன காரணம்?
ஆண்களுக்கு என்ன காரணமோ... அதுவே பெண்களுக்கும் இருக்கக் கூடாதா?
எஸ்.விஜயலட்சுமி, நஞ்சுண்டாபுரம்:இல்லாமையைப் போக்க முதல் தேவை உழைப்பா, அறிவா?
அறிவுடன் கூடிய உழைப்பு! உழைக்கிறேன் பேர்வழி என்று மண்ணை வெட்டிக் கொண்டிருந்தாலோ, கருங்கல் உடைத்துக் கொண்டிருந்தாலே... இல்லாமையை போக்க முடியாது. மண்வெட்டி, கல் உடைத்து வியாபாரம் செய்வதில் அறிவைப் பயன்படுத்தினால், இல்லாமையை இல்லை என்றாக்கலாம்!
கே.செல்வகணேஷ், மயிலாப்பூர்: எத்தனை ஆண்களுக்கு கற்பனை செய்து வைத்த மாதிரி மனைவி அமைகிறாள்?
'எதிர்பார்த்தது போல இல்லப்பா...' என்ற பதிலைத்தான்,99.99 சதவீத ஆண்கள் சொல்கின்றனர். 'கற்பனை செய்தது போலவே மனைவி அமைந்து விட்டாள்' எனக் கூறும், .01 சதவீத ஆணை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. பெண்கள் இடையேயும் இந்த மனக்குறை உள்ளது என்பது அவர்கள் எனக்கு எழுதும் கடிதம் மூலம் அறிய முடிகிறது!
கி.குருமூர்த்தி, மணிமங்கலம்: திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்பவர்களுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்...
பெண் பார்க்க செல்லும் முன், புகைப்படம் வாங்கிப் பாருங்கள். சில பெண்கள், 'போட்டோவில் என் முகம் சரியாக இருக்காது' என்ற குறை கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்களை, அவர்கள் அறியாமலேயே ஏதாவது பொது இடத்தில் பாருங்கள். பிடித்திருந்தால் மட்டுமே நேரில் சென்று பாருங்கள். எடுத்த எடுப்பிலேயே நேரில் சென்று, 'பிடிக்கல' என்றோ, 'போய் கடுதாசி போடுகிறோம்...' என்றோ மனதை உடைக்கும் செயலை செய்யாதீர்கள்!
மா.வரதராஜன், புதுப்பேட்டை:நம்பிக்கை துரோகம் செய்த நண்பனை மன்னித்து, நட்பைத் தொடரலாமா?
அது தீ என்று தெரிந்து விட்டது; அதை தொட்டு உணர முயற்சிக்கலாமா?
வி.கோகிலம், பெங்களூரு: உங்களுக்கு யாரை ரொம்பவும் பிடிக்கும்?
'வணக்கம்'போட்டு போய்க் கொண்டே இருப்பவர்களை; இவர்களால் என் நேரம் வீணாவதில்லை என்பதால்!
