தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உடம்பும், மனதும்!

உடம்பும், மனதும்!

உடம்பும், மனதும்!


PUBLISHED ON : நவ 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செந்தில்நாதனுக்கு தன் மனைவியைப் பற்றி நினைக்கையில், கோபம் கோபமாக வந்தது. 'எல்லாம் அவளால தான்! இத்தனை நாள் என்னிடம் முகம் கொடுத்து பேசாத ஹெட்கிளார்க் நாராயணமூர்த்தி, 'என்ன செந்தில் சார்... 'டல்'லா இருக்கிற மாதிரி தெரியுது... ஏதாவது பிரச்சனையா'ன்னு நலம் விசாரிக்கிறார்ன்னா, இதுக்கு மூல காரணமே மனைவி தான்...' என்று நினைத்தான்.

விஷயம் இது தான்... செந்தில்நாதனின் மனைவி உமாவிற்கு, கடந்த ஒரு மாதமாக உடம்பிற்கு முடியவில்லை. ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கி, பல டெஸ்ட்டுகள் செய்தும், பூரண குணம் அடைந்தபாடில்லை.

வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் உமா தான் கவனித்து வந்தாள். இந்த இருபது நாட்களாக அவளால், எந்த வேலையும் செய்ய முடியவில்லை; படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள்.

அதனால், சமையல் வேலை முதல், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது வரை, சகலத்தையும் செந்தில்நாதனே செய்ய வேண்டிய நிர்பந்தம். வீடு, அலுவலகம் என, இரண்டு இடங்களிலும் வேலைப் பளு அதிகமானதால், உடல் சோர்வும், மருத்துவமனைக்கு அலைந்ததில் மனச்சோர்வும் ஏற்பட்டிருந்தது.

மேலும், 'முதலிலேயே மனைவி தன் உடல் நலனை கவனித்திருந்தால், நோய் இவ்வளவு முற்றியிருக்காது. வீட்டில் இருப்பவளுக்கு இதெல்லாம் சொல்லியா தர வேண்டும்?' என்பது அவன் எண்ணம்.

இந்த சமயத்தில், ஹெட்கிளார்க் நாராயணமூர்த்தியின் விசாரிப்பு, செந்தில்நாதனுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, நாராயணமூர்த்தி மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு, செந்தில்நாதனின் மனதில் வேரூன்றி இருந்தது. அதற்கு காரணம், செந்தில்நாதன், இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவுடனே செய்த முதல் காரியம், அலுவலக ஊழியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு, 'மினி டூர்' சென்று வர, ஏற்பாடு செய்தது தான்.

சிலர் சொன்ன மாத்திரத்திலேயே, டூருக்கு வர ஒத்துக் கொண்டனர்; சிலர் யோசித்து சொல்வதாக கூறினர்.

யோசித்து சொல்வதாக கூறியவர்கள் ஒவ்வொருவரையும், தனித்தனியாக சந்தித்து, 'நாம எதுக்காக உழைக்கிறோம்... வாழ்க்கைய ரசித்து அனுபவிக்கத் தானே? கை நிறைய சம்பளம் வாங்குற நாம, அதில, ஒரு சிறுதொகைய நம்ம விருப்பங்களுக்காக செலவிடுவதில் என்ன தவறு... இப்படி சின்னதா ஒரு டூர் போயிட்டு வந்தா, நம்மோட உடலும், மனசும் உற்சாகமா இருக்கும்; வேலையிலயும் கவனம் செலுத்த முடியும்...' என்று பலவாறாக எடுத்துக் கூறினான்.

அவனது பேச்சு அனைவருக்கும் திருப்தியை அளித்ததால், பெரும்பாலானோர், 'மினி டூர்' விஷயத்திற்கு ஒத்துக் கொண்டனர். இதில், பெண் ஊழியைகளும் சேர்த்தி!

ஆனால், நாராயணமூர்த்தி மட்டும் இவ்விஷயத்தில் ஒத்துப் போகவில்லை. 'நாம மட்டும் தனியா போறத விட, குடும்பத்துடன் போனா குடும்பமே குதூகலிக்கும்ல்ல...' என்றார். இதில் தான் செந்தில்நாதனுக்கும், நாராயணமூர்த்திக்கும் வாய் வார்த்தை தடித்தது.

'தினமும் நம்ம குடும்பத்தோட தான் இருக்கோம்; அவங்க கூட சேர்ந்து போறதுல என்ன ஜாலி இருக்கு... நாம மட்டும் தனியா, நண்பர்களுடன் சேர்ந்து போனா அதோட சுகமே தனி. ஒரு தடவை வந்து, 'என்ஜாய்' செய்து பாருங்க சார்...' என்றான்.

'நீங்க போறதை நான் எதிர்க்கல; ஆனா, எனக்கு இதில இஷ்டமில்ல. விட்டுருங்க...' என்று முகத்திலறைந்தார் போல் கூறினார்.

'சரியான பொண்டாட்டிதாசனாய் இருப்பார் போலிருக்கு; மனுஷனுக்கு மீசை நரைத்தாலும், ஆசை நரைக்கல...' என்று நினைத்துக் கொண்டான் செந்தில்நாதன்.

அதிலிருந்து, நாராயணமூர்த்தியுடன் பேசுவதை தவிர்த்து விட்டான்.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அவன் துவக்கி வைத்த மினிடூர், தொய்வில்லாமல் மாதாமாதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஜென்ம விரோதியாகவே தன்னுள் உருமாறி போயிருந்த நாராயணமூர்த்தி, தானாகவே வலிய வந்து பேசியது, செந்தில்நாதன் மனதில், ஒருவித அவமான உணர்வை ஏற்படுத்தியது.

'மீண்டும் நாராயணமூர்த்தி வந்து கேட்டால் என்ன சொல்வது?' சிந்தனையில் மூழ்கினான்.

செந்தில்நாதன் நினைத்தது போலவே, அவர் வந்து, ''செந்தில்... நான், உங்களோட கொஞ்சம் தனியா பேசணும்; கேன்டீன் வரைக்கும் வர முடியுமா?'' எனக் கேட்டார்.

'வேலையிருக்கு; முடியாது...' என சொல்ல நினைத்தான். ஆனால், 'இவர் மீண்டும் மீண்டும் வந்து பேசினால் என்ன செய்வது... அதனால், இப்பொழுதே இவருடன் சென்று பேசிவிட்டு, இத்துடன் அவர் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்...' என, தீர்மானித்தவனாக அவருடன் கிளம்பினான்.

கேன்டீன் சென்றவுடன், ''சொல்லுங்க சார்... என்ன விஷயம்?'' என்று அவனே பேச்சைத் துவக்கினான்.

''இல்ல செந்தில்... நான் ரெண்டு, மூணு வாரமாகவே உங்கள கவனிக்கிறேன்; ஆள் பழைய மாதிரி கலகலப்பா இல்லையே... ஏன் வீட்ல ஏதாவது பிரச்னையா?'' என்று கேட்டார் நாராயணமூர்த்தி.

'என் வீட்டில பிரச்னையென்றால் உங்களுக்கு என்ன?' என கேட்க தோன்றியது. ஆனாலும், ஆத்திரத்தை அடக்கி, ''அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்,'' என்றான்.

''செந்தில்... என்னை நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. என் அனுபவத்துல சொல்றேன்... உங்களுக்கு ஏதோ பிரச்னைன்னு மட்டும் தெரியுது. என்னை, உங்க அப்பா ஸ்தானத்துல வச்சு சொல்லுங்க. என்னால முடிஞ்சத செய்ய பாக்றேன்,'' என்றார்.

இந்தப் பேச்சு, செந்தில்நாதனின் மனதைத் தொட்டது. இனிமேலும் இவரிடம் மூடி மறைக்க முடியாது என நினைத்தவனாய், ''சொல்லக் கூடாதுன்னு இல்ல சார்... மனைவிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல, அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்றான்.

சிறிது நேரம் மனைவி உமாவின் நோய் பற்றியும், சிகிச்சை பற்றியும் பேச்சு தொடர்ந்தது.

''செந்தில்... எனக்கென்னமோ இந்த விஷயத்தில உங்க மேல தான் தப்பு இருக்கிற மாதிரி தோணுது,'' என்றார்.

இதைக் கேட்டதும், செந்தில்நாதனுக்கு திகைப்பு. ''நான் என்ன சார் தப்பு செஞ்சேன்... வீட்டில இருக்கிறவ, உடம்புக்கு முடியலன்னா ஆஸ்பத்திரிக்கு போய், என்ன ஏதுன்னு பாத்திருக்க வேண்டாமா... நான் ஆபீசுக்கு அலையிறவன். அவ என்ன சின்னப் பிள்ளையா... எல்லா விஷயத்துக்கும் அவ பின்னாடியே நானும் சேர்ந்து போயிட்டு வர,'' என்றான் சற்று கடுமையாக.

''இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க... இந்த பெண்கள் இருக்காங்களே... அவங்க நமக்கோ, பிள்ளைகளுக்கோ ஏதாவது உடம்புக்கு வந்தா, ராத்திரி, பகல்ன்னு பாக்காம கவனிப்பாங்க. அதுவே, அவங்களுக்கு ஏதாவதுன்னா, கஷாயத்தோட நின்னிடுவாங்க.

''நமக்கு வர்ற மருத்துவ செலவுகளை, ஏதாவது ஒரு செலவுல ஈடுகட்டிருவாங்க. ஆனா, அவங்களுக்கு மருத்துவம் பாக்கணும்ன்னா, இந்த மாசம் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும், அடுத்த மாசம் எல்.ஐ.சி., டியூ கட்டணும், அது இதுன்னு கணக்கு பார்த்தே நாட்களை தள்ளிப் போட்டு, உடம்பை கவனிக்காம விட்டுருவாங்க!

''இதில, உங்க வீட்ல உங்க ஒருத்தரோட வருமானம் மட்டும் தான். நீங்களும் மாசா மாசம், 'டூர்' அது இதுன்னு செலவழிக்கிறீங்க; அதனால, நீங்க வாங்குற சம்பளம் குடும்பச் செலவுக்கே சரியா போயிடும்; அதனால தான் உங்க மனைவி அப்படி நடந்திருப்பாங்க.

''அதோட வேலைக்குப் போற பொண்ணாயிருந்தா, கூட வேலை செய்யறவங்களோட, 'அட்வைஸ்' கேட்டாவது, தன் உடம்பை கவனிச்சிருப்பாங்க.

''நீங்களும் உங்க வேலையிலேயே கவனமா இருந்திட்டீங்க. அதனால, அவங்களோட உடம்புக்கு என்ன, ஏதுன்னு பாக்காமலே இருந்துட்டீங்க!

''இப்பவும் பெரிசா பிரச்னை இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். உங்களோட ஆறுதலான வார்த்தையும், அன்பான கவனிப்பும் இருந்தாலே உங்க மனைவி சீக்கிரமா தேறிடுவாங்க.

''அதுவும் இல்லாம, எப்பவுமே சுறுசுறுப்பா இருந்து பழக்கப்பட்டவங்களுக்கு, படுக்கையில சோர்ந்து படுக்கிறது பிடிக்காது. அதில இருந்து மீண்டு வெளியில வரணும்ன்னு தான் நினைப்பாங்க. அதனால, உங்க மனைவி சீக்கிரமாவே பழைய நிலைக்கு வந்திடுவாங்க; கவலைப்படாதீங்க. வேணும்ன்னா நீங்க ஒரு பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டு, வீட்டுல இருந்து மனைவியை கவனிச்சுக்குங்க; உங்க பைல்களை நான் பாத்துக்கிறேன்.

''குடும்பத்தில பிரச்னை இல்லாம இருந்தாலே, நம்ம உடம்பும், மனசும், 'பிரெஷ்' ஆயிடும். இல்லன்னா காஷ்மீர் போனாக் கூட கண்ணீர் தான் வரும். இது என்னோட அனுபவம்,'' என்றார் நாராயணமூர்த்தி.

அவரது பேச்சைக் கேட்ட செந்தில்நாதனுக்கு, சற்று ஆறுதலாய் இருந்தது. அதேநேரத்தில், 'இவ்வளவு நல்ல மனிதரைப் போய், நாம தவறாக நினைத்தோமே...' என, நினைத்தான்.

'இவர் அன்றைக்கு கூறியது போல, நம் குடும்பத்தினருடன் பணத்தையும், நேரத்தையும் செலவழிச்சிருந்தா உமாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதோ... நண்பர்களோடு மாதாமாதம் போவதை விட, ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ குடும்பத்தினருடன் டூர் போயிருக்கலாமோ...' எனத் தோன்றியது.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சக அலுவலக நண்பரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

''மாப்ள... எங்க இருக்க? இந்த மாசம் எல்லாரும் கொடைக்கானல் போலாமா... நீ வந்தா தான் பைனல் செய்ய முடியும்; சீக்கிரம் வா,'' என்றார் நண்பர்.

''மச்சான்... இந்த மாசம் நான் டூர் வரல. என் மனைவிக்கு உடம்பு சரியில்ல; அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். அவ நல்லா ஆன பிறகு பேமிலியோட டூருக்கு வர்றேன். நம்ம, 'மினி டூர்' பிளானை, 'பேமிலி டூரா' மாத்தலாமான்னு மத்தவங்களையும் கேட்டு வை,'' என்றான் தெளிந்த மனதுடன்!

எஸ்.ஆர்.சாந்தி

கல்வித்தகுதி : எம்.ஏ., பி.எட்., (தமிழ்)

பணி: மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை. சிறுகதை எழுத வேண்டும் என்பது இவரது நீண்ட கால கனவு. 'ஆறுதல் பரிசு பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி; இச்சாதனைக்கு அந்துமணி கொடுத்த ஊக்கம் தான் காரணம்...' என்கிறார். அடுத்த ஆண்டு சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற வேண்டும் என்பது இவரது லட்சியம். கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவரது, 400க்கும் மேற்பட்ட படைப்புகள், பல தமிழ் முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us