PUBLISHED ON : ஜன 04, 2015

ஆர்.ராஜாராமன், பொள்ளாச்சி: உணர்ச்சிகளை எப்போது அடக்க வேண்டும்?
கடுமையான கோபத்தில் இருக்கும் போது, அடக்க முடியாத ஆத்திரத்தில் தவிக்கும் சமயங்களில், மற்றவரின் ஆணவப் பேச்சுகளைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் உணர்வுகளைக் கொட்டி, பைத்தியக்காரனாகி விடக் கூடாது!
எ.எஸ்.ஷ்யாம் சுந்தர், கோவை: நாம் யாருக்கு மதிப்பளிக்க வேண்டும்?
ஒழுக்கம் உள்ளோருக்கு உயரிய மதிப்பளிக்க வேண்டும்; அது, பிச்சைக்கார வடிவில் இருந்தாலும் கூட!
எஸ்.ராமலட்சுமி, கம்பம்: உண்மையிலேயே துணிச்சல் அதிகம் காணப்படுவது ஆண்களிடமா, பெண்களிடமா?
வாழ்வை எதிர்கொண்டு, கடைசி வரை குடும்பத்தை வழி நடத்திச் செல்லும் துணிவு பெண்களிடம் தான் அதிகம்; இவ்விஷயத்தில் ஆண்களை கோழைகள் என்றே சொல்ல வேண்டும்!
கே.ரேணுகாதேவி, அசோக்நகர்: நம் உடலில் என்னென்ன இருக்கின்றன?
ஏழு சோப்பு கட்டிகள் செய்வதற்கான கொழுப்பு; 900 பென்சில் செய்வதற்கான கார்பன்; 2,200 தீக்குச்சிகள் செய்வதற்கான பாஸ்பரஸ்; ஒரு ஆணி செய்வதற்கான இரும்பு; 22 சதுர அடி சுவரை வெள்ளையடிப் பதற்கான சுண்ணாம்பு; உடம்பின் எடையில், 70 சதவீதம் நீரும் உள்ளன!
ஜெ.கல்பனா, ஆண்டிப்பட்டி: பணமில்லாதவர்களிடம் சகஜமாகப் பழக முடிகிறது; அதுவே, பணமுள்ளவர்களிடம் முடியவில்லையே... ஏன்?
'அவர்களுக்குச் சமமாக நம்மிடம் பணம் இல்லையே...' என்ற தாழ்வு மனப்பான்மை தான் இதற்குக் காரணம். நம்முடன் சரிசமமாக பழகுவார்களா, மதிப்பார்களா, அவமானப்படுத்தி விடுவார்களா போன்ற கேள்விகள் தோன்றி எல்லாவற்றுக்குமே, 'நெகட்டிவ்' பதிலை மனது கொடுக்க, தாழ்வு மனப்பான்மை தொற்றிக் கொள்கிறது.
பொ.கனகம், தெப்பக்குளம்: என் தோழி முன்பு போலில்லாமல் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் படபடக்கிறாள், சிடுசிடுக்கிறாளே... எதனால் இந்தமாற்றம் ஏற்பட்டிருக்கும்?
உங்கள் தோழி தன் மனசாட்சியை மறைக்கப் பார்க்கிறாள். இப்படிப் பட்டவர்களிடம் பதற்றம், கோபம், பொய் குடி கொண்டு விடும். ஒரு வேளை உங்கள் தோழி காதலில் விழுந்து இருக்கலாம்... நைசாக கண்டு பிடியுங்கள்!
எஸ்.பொன்ராம், கடலூர்: படிப்பதை எளிதில் மனதில் பதிய வைத்துக் கொள்வது எப்படி?
பள்ளிப் பாடங்களைத் தானே கேட்கிறீர்கள்? புரிந்து கொண்டு படிக்க வேண்டும்; கடனே என்று மனப்பாடம் செய்ய முயலக் கூடாது. புரியாவிட்டால், ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அப்படிச் செய்தால் படித்தது மறக்கவே மறக்காது!
ஏ.வெங்கடேஷ், கொரட்டூர்: பிறர் என்ன சொல்வார்களோ என்ற பயம், எதை செய்ய துவங்கும் போதும் என்னுள் எழுகிறதே...
முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும். இந்த எண்ணம் கொண்டவர்கள், பிறர் பயத்திலேயே எல்லாவற்றையும் இழந்து, 'அம்மா... தாயே' என, பிற்காலத்தில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவர் அல்லது தற்கொலை செய்து கொள்வர்!
