
அ.சிதம்பரம், கடலூர்: சிலர், நம்மிடம் நேரம் போவது தெரியாமல் பேசுகின்றனரே... அவர்களை, 'அவாய்டு' பண்ண, ஒரு உபாயம் தாருங்களேன்...
நைசாக கத்திரிக்கோல் போடணுமா? லேனா தமிழ்வாணன் வழியை கடைபிடியுங்கள். தன் அலுவலக மேஜையில், 'எனக்கு அதிக வேலை உள்ளது' என, எழுதி வைத்துள்ளாராம்!
எஸ்.அமிர்தலிங்கம், சென்னை: பத்திரிகை ஆசிரியரிடம் கேட்கக் கூடாத கேள்வி எது?
உங்க பத்திரிகை சர்க்குலேஷன் எவ்வளவு?
பி.இனியன், ராக்கியாபாளையம்: வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கு காரணம் அரசா, இளைஞர்களா?
'நம்மால் முடியும் தம்பி, நம்பு' என, விவரம் தெரிந்தவர்கள் எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் கேட்காத இளைஞர்கள் தான் காரணம்!
ஏ.மரியஅருள், காளப்பட்டி: நான் இன்னும் பேயைப் பார்த்ததில்லை; என்றாவது பேயை பார்க்க முடியுமா?
அனுபவப்பட்ட உதவி ஆசிரியர் ஒருவரின் பதில் இதோ... 'ஆசாமிக்கு இன்னும் கல்யாணமாகல போல இருக்கு!'
ஜி.கவுசல்யா, முகலிவாக்கம்: பெண்கள் கூந்தலை முன்னே போட்டுக் கொள்வது, முதுகு அழகை காட்டவா, முடி அழகை காண்பிக்கவா?
முன்னே போடும் அளவுக்கு இக்கால பெண்களுக்கு கூந்தல் எங்கே இருக்கு!
கே.முகைதீன் பாவா, மாங்கரை: இலக்கியவாதி என்று அறிய தேவையான ஆதாரம் என்ன?
தாடி வைத்து, காவி நிற ஜிப்பா அணிந்து, அழுக்கான ஜீன்ஸ் பேன்ட் போட்டு, தோளில், ஜோல்னா பை தொங்கவிட்டு, கலைந்த தலை முடியுடன் கண்ணாடி ஒன்றும் போட்டு இருக்க வேண்டும்!
சொ.முத்துவிஜயன், நியூசித்தாபுதூர்: 'பத்து ஆண்டுகளுக்கு, ஜனநாயகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, சாட்டையை கையில் தூக்கினால், மக்கள் திருந்துவர்...' என, கவியரசு கண்ணதாசன் கூறினாரே... சாத்தியமா?
'எமர்ஜன்சி' நிலையை, உதாரணமாக எடுத்துக் கொண்டு, கவிஞரின் கூற்றை ஒப்பிட்டுப் பாருங்கள்; விடை கிடைக்கும்!
எச்.மெய்யானம், நெய்வேலி: காதலியிடம் எதை மறைக்கலாம்; எதை மறைக்கக் கூடாது?
எதை வேண்டுமானாலும் மறையும்; மறைத்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளும்!