PUBLISHED ON : ஜூலை 17, 2016

ச.மரியஅருள்தாஸ், திண்டிவனம்: தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது?
நிறைகுடமாக இல்லாதவன், தற்பெருமைக்காரனாக இருப்பான். இது, அவன் மடையனானதற்கு அடுத்த நாள், அழிவிற்கு முந்தைய நாளில் உண்டாகிறது!
கா.வரலட்சுமி, வேடசந்தூர்: என் தோழி ஒருத்தி எப்போதும், 'லொட லொட'வென பேசுகிறாளே...
இப்படி லொட லொடக்கும் நாக்கு, எப்போதும் சிக்கலில் கொண்டு போய் சேர்த்து விடும். கால, பலம் அறிந்து, இடமறிந்து பேசப்படும் சொல்லே புகழ் தரும்; வெற்றிகளை கொடுக்கும்!
ஆ.ஜெயவேலன், அம்மாபாளையம்: நிறைய விஷயங்களை தெரிந்து வைத்துள்ளீர்கள்... இந்த ஆபீஸ் பாய் வேலையை விட்டு, வேறு நல்ல வேலையில் அமர்வது தானே...
இந்த வேலையே பிடிச்சுப் போச்சுங்க; நாலு டீ, அஞ்சு காபி வாங்கும் போது, அப்படி இப்படி என, எனக்கும் ஒரு இலவச டீ கிடைச்சுருது!
சிவ.சங்கரன், கிருஷ்ணாபுரம்: நண்பர்களுடன் பேசும் போது, சிலர், அவர்களது பெயரை அடிக்கடி சொல்லி பேசுகின்றனர். இன்னும் சிலரோ, அவ்வாறில்லாமல் பேசுகின்றனர். இதில் பிரியமான நட்புக்கு எது உகந்தது?
'எதிர்பாலினருடன் பேசும் போது, அடிக்கு ஒரு முறை அவர்களது பெயரை சொல்வது பிரியமான நட்புக்கு உதவும்...' என்கிறார், அனுபவம் அதிகம் உள்ள லென்ஸ் மாமா. ஒரே பாலினருக்கு அது உதவுமா என்பது குறித்து எதுவும் கூறவில்லை!
கு.முகைதீன்பாவா, ஆழ்வார்பேட்டை: நான் தாராளமாக செலவு செய்வதால், என்னைச் சுற்றி நண்பர்கள் அதிகமிருக்கின்றனர். அவர்களிடமிருந்து விடுபட, ஒரு வழி சொல்லுங்களேன்?
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. உங்களுக்கே விடுபட வழி தெரியும். ஆனால், உங்களை மற்றவர் உயர்த்திப் பேசி, உங்கள் புகழ் பாட வேண்டும்; உங்களிடம் காசு அதிகம் இருப்பதாக மற்றவர் நினைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. 'பிரஸ்டீஜ்' குறையாமல் இருக்க வேண்டும்; அதே நேரம் செலவும் செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்கள்!
பிரஸ்டீஜ் என்ன பிரஸ்டீஜ்... பர்சில் பணம் இல்லை என்றால், செல்லாக் காசு கூட உங்களை மதிக்காது; தூக்கி எறியுங்கள், வீண் பெருமையை!
ஜி.கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம்: தமிழ் தெரிந்தும், ஆங்கிலம் பேசும் தமிழர்களைப் பற்றி...
இவர்களை புரிந்து கொள்ள முடியவில்லை; அதேசமயம், எரிச்சலும் வருகிறது!
எம்.குமார், திருவள்ளூர்: பொறுப்பான பதவியில் இருக்கிறேன்; இருப்பினும், திரைப்படத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற தீராத மோகம். ஜோசியம் பார்த்ததில், 'குருமேடு இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால், மணிரத்னம், பாரதிராஜா போல் ஆகியிருப்பாய்...' என்று கூறி, அந்த எண்ணத்தில் சிறிது மனத் தளர்வை ஏற்படுத்தி விட்டனர். தொடர்ந்து சினிமா தொழிலுக்கு முயற்சிக்கலாமா அல்லது இருப்பதே போதுமென இருந்து விடலாமா? மனம் அலை பாய்கிறது... உங்களின் ஆலோசனை என்ன?
சினிமா ஒரு புதைக்குழி; வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுச் சுழி; சிக்கினால், அவ்வளவு தான். நீங்கள் வேலை வெட்டி இல்லாதவர் என்றால், கல்லை எறிந்து பார்க்கலாம்; விழுந்தால், மாங்காய்; இல்லையேல் நஷ்டம் இல்லை. பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள் சினிமா ஆசையை குழிதோண்டி புதைத்து விடுங்கள்!
