PUBLISHED ON : ஜன 08, 2017

ம.வேல்ராஜ், காந்திநகர்: மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?
நிதி நிலையை பொறுத்த வரை, சந்தேகம் தான். குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு, பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும், செழிப்புடன் இருப்பதென்னவோ உண்மைதான்!
சி.வத்சலா, பீளமேடு: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவது எனக்கு மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?
இக்காலப் பெண்களுக்கு, ஆண்களுடன் பழகும் எல்லை நன்றாகவே தெரியும். பொத்தி பொத்தி வளர்ப்பதால், தைரியமற்றவர்களாகிப் போய், எதிர்காலத்தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால், அவனை எதிர் கொள்ளத் தெரியாதவர்களாக, தெம்பற்றவர்களாகி விடுகின்றனர். உங்கள் பயத்தை விட்டொழியுங்கள்!
எஸ்.நாராயணன், சிதம்பரம்: 'பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தாலும், இப்போது பலன் இருப்பதில்லையே...' என, என் தந்தை புலம்புகிறார். வீரியம் குறைந்த மருந்துகளையா விற்கின்றன பூச்சி மருந்து நிறுவனங்கள்?
அப்படியில்லை சமாசாரம்... பூச்சிகள் இப்போது விஷத்தை தாங்கி, உயிர் வாழும் சக்தியைப் பெற்று விட்டன என்பதே உண்மை. 1950களில், மருந்துக்கு கட்டுப்படாத பூச்சி இனம், ஏழே ஏழு தான் இருந்தன. இன்றோ, இதன் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டன. இந்த அழகில், உலகின் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை நாம் உபயோகிக்கிறோம். பூச்சி மருந்து விஷத்தால் ஆண்டுக்கு, 15 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்... 35 ஆயிரம் பேர், 'டிக்கெட்' வாங்கி விடுகின்றனர்!
ஐ.நளினி, காளப்பட்டி: அறிவு, அடக்கம், அழகு... இம்மூன்றில் பெண்ணுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு; இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை. அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம், அடக்கம் போன்ற பண்புகள் தானாக ஒட்டிக் கொண்டு விடாதோ!
பி.ஆனந்தன், காங்கேயம்: பொது இடங்களில் பச்சிளம் குழந்தைகள், கையில் தட்டு ஏந்தி, தர்மம் கேட்கின்றனரே... தர்மம் செய்யலாமா?
அவர்களுக்கு பிச்சை போட்டால், அதர்மம் செய்தவராகி விடுவீர்கள். சோம்பேறி பெற்று போட்டு, பிச்சை எடுக்க விட்ட பிள்ளையை, அனுதாபத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்; சல்லிகாசு கூட பிச்சை இடக் கூடாது!
எஸ்.ஜமால், திண்டுக்கல்: ஆணின், 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?
இரண்டுமே, 'பெயிலியர்' ஆகக் கூடும். ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான் மனமுதிர்ச்சி ஓரளவேனும் வரும். அதன்பின், இந்த முயற்சியில் இறங்குவது நலம்!
ச.சுகுணா, புதுச்சேரி: படித்த பெண்கள் கூட, இன்னமும் மூட நம்பிக்கையிலும், வரதட்சணை கொடுமையிலும், சிக்கித் தவிக்கின்றனரே...
சிந்திக்க கற்றுத் தராத பாடத் திட்டமும், பழமைவாதிகளின் வறட்டு கவுரவமும் பெண்களுக்கு எதிராக செயல்படுவதால் தான் இக்கொடுமை தொடர்கிறது. ஆனால், ஆங்காங்கு வெளியாகும் செய்திகளை படிக்கும் போது, பெண்களை சுற்றி உள்ள விலங்குகள் உடைப்பட்டு வருவதாகவே தோன்றுகிறது!
