PUBLISHED ON : மார் 19, 2017

எம்.ஹரிஹரன், கோட்டூர்: 'ஒயிட் காலர் ஜாப்' தேடுவது, நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டும் தான் உள்ளதா அல்லது மேற்கத்திய நாடுகளிலும் இதே நிலை தானா?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சாதாரண வேலைக்கும், பெரிய பதவிகளில் உள்ளவர்களுக்கும் சம்பள வித்தியாசம் பெரிய அளவில் கிடையாது. அங்குள்ளவர்கள் பெரும்பாலும், பள்ளி இறுதிக்கு மேல் படிப்பது கிடையாது. இதனால், 'டிகிரி படித்திருக்கிறேன்... எனக்கு கலெக்டர் வேலை கிடைக்கலியே...' என்ற ஏக்கம் கிடையாது. வாழ்வின் அடிப்படை வசதி, அனைவருக்குமே கிடைத்து விடுவதால், 'ஒயிட் காலர் ஜாப்' மோகம் அதிகம் கிடையாது!
கே.ரஞ்சித்குமார், கம்பம்: சக்தி வாய்ந்த - புகழ்பெற்ற ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன்; என்னிடம், 'பிக்பாக்கெட்' அடித்து விட்டனர். 'கோவிலிலேயே இப்படியா...' என்று, மனசு வருத்தமாக இருக்கிறது!
இல்லாதவனை சென்றடைய, 'சக்தி' வழி செய்துவிட்டது என, எண்ணிக் கொள்வது மன சாந்தி அடைய வழி; 'சக்தி எல்லாமே கொடுக்கும் என, அசட்டையாக இனியும் இருக்கக் கூடாது...' என, 'சக்தி'யே உணர்த்தியதாக எண்ணி, செயல்படுவது புத்திசாலித்தனமான வழி!
எஸ்.கயல்விழி, அருப்புக்கோட்டை: 'எல்லை தாண்டிய மீனவர் கைது' -'இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது' என்றெல்லாம் செய்தி வெளியாகிறதே... ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது என்ன?
ஒவ்வொரு நாட்டுக்கும், அதன் கடற்கரையிலிருந்து, 30 கி.மீ., கடல் சொந்தம்; அதற்கு பின் உள்ள கடல் பொதுவானது. இது, சர்வதேச சட்டம்; எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைமுறை. இலங்கைக்கு சொந்தமான அந்த, ௩௦ கி.மீ., கடல் எல்லைக்குள், நம் மீனவர்கள் நுழைந்து விட்டால், கைது ஆகின்றனர். இது போலத்தான் குஜராத் மீனவர்களும், பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்.
எம்.ரவிவர்மா, பொள்ளாச்சி: உலகில் சிறந்ததாக கருதப்படுவது கேள்வி கேட்பதா அல்லது பதில் சொல்வதா?
கேள்வி கேட்பது! 'கேள்வி கேளுங்கள்' என மக்களைத் தூண்டி புரட்சிக்கு வித்திட்டார், தத்துவஞானி அரிஸ்டாட்டில். இங்கே, நம்மூர் வாத்தியார்களில் பலர், மாணவர்கள் வாயைத் திறந்தாலே பிரம்பை தூக்கி விடுகின்றனர். அன்பான ஆசிரியர்களே... மாணவர்களை கேள்வி கேட்கத் தூண்டி விட்டுத்தான் பாருங்களேன்!
ஆர்.சுதர்சன், மதுரை: ஒரு மனிதனின் ஆபத்தான காலம் எது என்று சொல்வீர்கள்?
காலண்டரில், 20ம் தேதி துவங்கி, அடுத்து கிழிக்கும், 11 நாட்களும் ஆபத்தான நாட்கள் தான். சிக்கனம் தெரியாத அத்தனை பேருக்கும், அவர்களின் வருமானம், மாதத்தில் முதல் 20 நாட்களுக்கு தானே போதுமானதாக இருக்கிறது.
