PUBLISHED ON : பிப் 11, 2018

* ப.கிருபானந்தம், கோவை:எண் கணித முறைப்படி, பெயரை மாற்றி அமைத்தால் வெற்றிகள் குவியுமாமே?
வெற்றி குவியும் என்றால், ஊர் ஊராக லாட்ஜில் ரூம் போட்டு, பெயர் மாற்றிகள் சுற்றி வருவது ஏன்? அவர்கள் தம் பெயரையும் மாற்றி, பணத்தை குவிக்க வேண்டியது தானே!
கே.தீபா, தேனி: பெண்களுக்கு எதிரான, 'செக்ஸ் வயலன்ஸ்' நம் நாட்டில் அதிகரித்து வருகிறதா?
அதுபற்றி தகவல் தெரியவில்லை; ஆனால், படித்தவர்களே, 'செக்ஸ்' வன்முறையில் அதிகம் ஈடுபடுகின்றனர் என்கிறது ஒரு சர்வே! பள்ளிக்கூடம் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காத ஆண்களில், 32 சதவீதம் பேரும், 6 முதல், 10ம் வகுப்பு வரை படித்தவர்களில், 51 சதவீதம் பேரும், 'செக்ஸ்' வன்முறையில் ஈடுபடுகின்றனராம்!
கே.மாரியப்பன், கடலுார்: நான் சுகமாக வாழ விரும்புகிறேன்; என்ன செய்ய வேண்டும்?
உழைக்க வேண்டும்; இடை விடாது உழைப்பவரால் மட்டுமே சுகத்தை அனுபவிக்கவோ, சுகமாக வாழவோ முடியும். அது வெறும் உடல் உழைப்பாக இல்லாமலிருத்தலும் வேண்டும்!
மா.சுமன், நீலகிரி: எனக்கு நேரம் போத மாட்டேன்கிறதே...
அதிகாலையிலேயே படுக்கையை சுருட்ட பழகிக் கொள்ளுங்கள். விடியலில் எழுவோருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்பதோடல்லாமல், பல வேலைகளையும் முடிக்க நேரம் கிடைக்கும்.
பா.விஜயமுருகன், சென்னை: என் குறிக்கோளை அடைய, என் பெற்றோர் உட்பட எவருமே உதவ முன் வருவதில்லை. நான் என்ன செய்ய?
உங்கள் மனோபலம் தான் உங்கள் குறிக்கோளை அடைய உதவ கூடியது. சமூகத்தில் சிறந்த மனிதர்களைப் பாருங்கள்... வெளி உதவி ஏதும் இன்றி, தம் மனோ வலிமையால் குறிக்கோளை அடைந்தவர்களாக இருப்பர். அவர் உதவுவார்; இவர் உதவுவார் என்ற மனப் பான்மையை இன்றோடு தொலையுங்கள்!
* எம்.முருகேசன், ராமேஸ்வரம்: நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு இப்போதிருந்தே என்ன செய்ய வேண்டும்?
உடல் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்; சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். மகன் - மகள் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, கண்டிப்பாக, பயனுள்ள ஒரு பொழுது போக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்; அப்போது தான் பணி ஓய்வுக்குப் பின், வாழ்க்கை கசக்காது!
ஆர்.ரங்கநாயகி, சிவகங்கை:ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் எது, 'பெஸ்ட்?'
அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவம் கை கொடுக்கும்... மற்றபடி சித்த வைத்தியம் தான், 'பெஸ்ட்' என்று ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த பலரும் சித்த வைத்தியத்தை நாடுவதை பார்க்க முடிகிறது!
எஸ்.சாமிநாதன், புதுக்கோட்டை: வெளிநாட்டு மோகம் நம் இளைஞர்களிடையே குறைந்து விட்டதா?
வாய்ப்புதான் குறைந்து விட்டது; ஆனால், இளைஞர்களிடையே கம்ப்யூட்டர் மோகமும், அமெரிக்க ஆசையும் துளி கூட மாறவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை சீராகும் என்கின்றனர்.
