PUBLISHED ON : மார் 18, 2018

* அ.சையது அலி, விருதுநகர்: வறுமையின் காரணமாக பள்ளிக் கல்வியை இழந்தவன் நான். என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா?
மூளையை உபயோகிக்காதவரால் தான் முன்னேற முடியாது. உங்கள் ஊரையே எடுத்துக் கொள்ளுங்களேன்... இன்று அங்கு, பணத்திலும், புகழிலும் பிரபலமாக இருப்பவர்கள் எத்தனை பேர் பள்ளிப்படிப்பைத் தாண்டியவர்கள் எனக் கணக்கெடுங்கள். வெகு சொற்பமே தேறுவர்! படிக்காத மேதைகளாகத் திகழ்ந்தோர் உலகில் பலர் உண்டு. அந்நிலையை அடைய அவர்கள் பயன்படுத்துவது தம் மூளையை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
அ.சிவா, திருவள்ளூர்: யாரைக் கண்டால் உங்களுக்குப் பிடிப்பதில்லை?
சிரித்துப் பேசி, பின்னால் பள்ளம் பறிக்கும் கயவர்களை, முகஸ்துதி செய்யும் குள்ளநரிகளை, உப்பு சப்பில்லாத விஷயங்களை திரும்பத் திரும்ப சொல்லி கழுத்தறுக்கும், 'லுாசு'களை, மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் மூடர்களை...
கே.தீபா, புதுச்சேரி: அழகு, அறிவு, அடக்கம்... இம்மூன்றில் பெண்ணுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு! இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை; அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம், அடக்கம் போன்ற பண்புகள் தானாக வந்து ஒட்டிக்கொண்டு விடாதோ!
* உ.முத்துராமன், உடுமலைப்பேட்டை: தேவைப்படும்போது, தம் உயிரையே போக்கிக் கொள்ளும் தீவிரவாதிகள் தோன்ற காரணகர்த்தாக்கள் யார்?
சுயநலம் பிடித்த கயவர்கள்! தம் சுயநலத்திற்காக, அப்பாவிகளைப் பிடித்து, மூளைச் சலவை செய்கின்றனர். கயவர்களின் உண்மையான உள்நோக்கம் புரியாத அப்பாவிகள், மூளைச் சலவை பெற்று, தம்மை மாய்த்துக் கொள்கின்றனர்!
எஸ்.பாலு, விருதுநகர்: காதலித்துத் தான் எல்லாரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வந்தால், ஜாதி, வரதட்சணை ஒழிந்து விடுமா?
சட்டம் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை நிர்ணயிக்கப் போகும் அதிகாரியின் பணப்பையின் மெலிவு, ஒழிந்து விடும்!
* ஆர்.ராமு, பண்ருட்டி: என் வயது, 17; இதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இனியும் கெடாமல் வாழ, 'ஐடியா' கொடுங்கள்...
சினிமா தொடர்புடையோர், அரசியல் தொடர்பும், நாட்டமும் உடையவர்கள், போதைக்கு (ம மற்றும் மா போன்ற) அடிமையானவர்கள் - இந்த, 'கேட்டகிரி' ஆசாமிகளின் அருகே அண்டவே அண்டாதீர்கள். வாழ்வில் நல்ல நிலையை அடைவீர்கள்!
