PUBLISHED ON : ஏப் 01, 2018

* ஆர்.தனபால், திண்டுக்கல்: ஒரு குடும்பத்தை குதுாகலமாக்குவது, கணவரின் வருமானமா அல்லது மனைவியின் நிர்வாகத் திறனா?
சந்தேகமில்லாமல் இரண்டாவதே! எவ்வளவு குறைந்த வருமானம் கொண்டு வந்தாலும், அதில் கூட மிச்சம் வைக்கத் தெரிந்தவர்கள் பெண்கள். 99 சதவீத பெண்களுக்கு இது, கை வந்த கலை. பெண்களின் நிர்வாகத் திறமையே, குடும்பத்தில் குதுாகலம் நிலவக் காரணம்!
டி.லலிதா, கோவை: இன்றைய இளைஞிகளின் விருப்பம் என்னவாக உள்ளது?
சிரமப்படாத, சுலபமான வேலை, கை நிறைய சம்பளம், கேள்வி கேட்காத கணவன்... இவற்றின் மீதே பல இளம் பெண்களும் நாட்டம் கொண்டுள்ளதாக உணருகிறேன்! (நகரத்து இளைஞிகளைப் பற்றிய கணிப்பு இது.)
* ஆர்.ரவி, திருவள்ளூர்: நீங்கள் விரும்புவது ஜனநாயகமா, கம்யூனிசமா அல்லது சர்வாதிகாரமா?
ஜனநாயகம்! ஆனால், நம் நாட்டில் இருப்பது போன்ற, 'அவுத்து வுட்ட' ஜனநாயகம் அல்ல... சிங்கப்பூரில் இருப்பது போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய ஜனநாயகம். நம் நாட்டு ஜனநாயகம், சட்டம் -- ஒழுங்கு கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை அல்லவா உள்ளது!
எஸ்.பிரகாசம், மதுரை: எந்த முடிவையும் என்னால் விரைந்து எடுக்க முடியவில்லையே...
பரவாயில்லை... கவலைப்படாதீர்கள். வேகமான முடிவுகள், சில நேரங்களில் தீங்கையே விளைவிக்கும்; வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை பயக்கும்!
* பி.கோபி, கடலுார்: என் நண்பன், எனக்கு துரோகம் இழைத்து விட்டான்; அவனை, பழி வாங்க துடிக்கிறது மனது. களமிறங்கி விடவா?
வேண்டாம்... அது, ஆரம்பத்தில் இனிக்கும்; சுவைக்கும்; மன நிம்மதி கிடைத்தது போன்ற பிரமை ஏற்படுத்தும். ஆனால், அதுவே பின்னாளில் கசப்பாக மாறும்; எய்தவனையே தாக்கும். எனவே, மன்னித்து, மறந்து விடுங்கள்!
எஸ்.எஸ்.வாசன், தேனி: கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து விட்டேன்; இனி, நான் செய்ய வேண்டியது என்ன?
கையில் தொழில் திறமை இல்லாதவன் தான், வெளியேறவோ, வெளியேற்றப்பட்ட பின்னரோ கவலை கொள்ள வேண்டும். உங்களிடம் உள்ள திறமை, உழைப்பு இரண்டையும் நம்பி, புதுக் கடை விரியுங்கள்; ஜமாய்க்கலாம்; நம்பிக்கையே வாழ்க்கை!
டி.ரகுநாதன், பொள்ளாச்சி: நான், சிறந்த நாவலாசிரியராக விரும்புகிறேன்; அதற்கான வழிமுறைகள் என்னென்ன?
நிறைய படிப்பதுடன், பார்க்க, கேட்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும், காட்சியையும் நுணுக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாவற்றுக்கும் மேலாக, நிறைய எழுதி எழுதி பழக வேண்டும். இந்தப் பயிற்சியைத் தான் பலரும் செய்யாமல் கோட்டை விடுகின்றனர்!
