
ஜி.கலைவாணி, மதுரை: ஆண் - பெண், யாருக்கு காதல் எளிதில் கசந்து விடுகிறது?
முதலாமவருக்குத் தான்; நிலையில்லாத மனம் படைத்தவர்கள் ஆண்கள். மலர் விட்டு மலர் தாவும் வண்டின் குணம் கொண்டவர்களும் அவர்களே... ஆனால், பிடித்த பிடியை விட மாட்டாள் பெண்!
எம்.ஆனந்தன், திருவள்ளூர்: மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கும் கணவன்மார்கள் தானே புத்திசாலிகள்?
பிழைக்கத் தெரிந்தவர்கள்; மீனாட்சி ஆட்சி நடைபெறும் வீடுகளில், மனைவியின் சொல்லை அப்படியே ஆமோதித்து நடக்கும் கணவன், குடும்ப நிம்மதியை முதலாவதாக எண்ணுபவன். எனவே, அவன் புத்திசாலியும் கூட!
ஆர்.இந்திரா, சிவகங்கை: இன்றைய மக்களின் அதிகபட்ச விருப்பமாக இருப்பது எது?
வம்புகள்; தங்களைத் தவிர, மற்றவர்கள் பற்றிய வம்புப் பேச்சுக்கள் பேசுவதையே விருப்பமான தொழிலாக கொண்டுள்ளனர்!
* அ.தினேஷ், ஊட்டி: வேலையில்லா பட்டதாரிகளுக்கு, உங்கள், 'அட்வைஸ்' என்ன?
டேபிள், - சேரில் அமர்ந்து பார்க்கும், 'ஒயிட் - காலர் ஜாப்'க்கு காத்திருந்து, வாழ்வின் முக்கிய கட்டத்தை வீணாக்கி விடாதீர்கள்... முதல் போட தேவையில்லாத எத்தனையோ தொழில் உள்ளது. அதில், ஆயிரக்கணக்கில் வருமானமும் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
சி.சுப்பையா, விருதுநகர்: கணவன் - மனைவி இருவருமே நல்ல வேலையில் இருந்து, கை நிறைய சம்பாதித்தாலும், மாதந்தோறும் பஞ்சப்பாட்டு பாடுகின்றனரே...
ஊதாரிகள், பணத்தின் அருமை தெரியாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள். இவர்களே ஒருவர் சம்பளம் தான் வருகிறது என எண்ணி, செலவு செய்யட்டும்... 'பேங்க் பேலன்ஸ்' எக்கச்சக்கமாகி விடும்; வீட்டைத் தேடி, கடன்காரன் வரும் தொல்லை நின்று விடும்; இரவில், தலையணையில் தலை சாய்த்ததும், உடனே துாக்கம் வரும்.
எம்.பத்மா, புதுச்சேரி: பச்சோந்திக்கும், மனித மனதிற்கும் ஒற்றுமை உண்டு என்பது உண்மையா?
உண்மை தான்; தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது, பச்சோந்தி; தான் பழகும் இடத்திற்கு ஒத்துப்போவது போல் குணத்தை மாற்றிக் கொள்கிறது, மனித மனம்!
* என்.ஸ்ரீதரன், சென்னை: தனி மனித சுதந்திரம் என்றால் என்ன?
இந்த செயல்கள் எல்லாம் மற்றவர்கள், நமக்கு செய்து விடக்கூடாது என்று எச்செயல்கள் பற்றியெல்லாம் எண்ணுகிறீர்களோ அவற்றை நீங்கள், அடுத்தவர்களுக்கு செய்யாதிருப்பதே தனி மனித சுதந்திரம்!

