
எஸ்.சங்கர், நெல்லை: நம் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறதே... யாரால் இதை குறைக்க முடியும்?
பேருந்து மற்றும் சரக்கு வாகன ஓட்டுனர்களால் தான்! இவர்கள் அதிகரித்தால், மக்கள் தொகை, கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது!
ஆர்.மணிகண்டன், செஞ்சி: எந்த அரசியல் கட்சித் தலைவர்களாவது உங்களுக்கு பிடிக்குமா?
எவரையும் பிடிக்காது - இப்போது! ஏனென்றால், எப்போதும் உழைப்பவன் தொண்டன்; அனுபவிப்பது, கட்சியின் தலைவனாகக் கூறி கொள்பவன்!
*கே.ரமேஷ், மதுரை: வெளிநாட்டு கலாசாரம், நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறதே... உதாரணத்திற்கு, பிறந்த நாளன்று, 'கேக்' வெட்டுகின்றனரே...
அதை விடுத்து, உளுந்து, பருப்பு, ஆமை வடை, வாழைக்காய் பஜ்ஜி வெட்டலாம் என்கிறீர்களா? வெளிநாட்டு கலாசாரம் என்றாலும், நல்லவற்றை நாம் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே!
ஆர்.ருக்மணி, சென்னை: நீங்கள் எந்த அடிப்படையில் கேள்விகளை தேர்வு செய்து, பதில் அளிக்கிறீர்கள்?
நானோ, தேநீர் வாங்கி வரும் அலுவலக உதவியாளன்... பதில் கூற, என் அறிவுக்கு எட்டும், கேள்விகளை ஏற்று, என்னால் இதற்கு பதில் சொல்ல முடியும் என்பதை முடிவு செய்து, தேர்வு செய்வேன்! ஆனால், பெண்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு, பதில் தெரியாவிட்டாலும், தேர்வு செய்து, விபரம் அறிந்தவர்களிடம் விசாரித்து எழுதுவேன்!
* எஸ்.உப்பிலி, கொரட்டூர், சென்னை: ஒருவரின் பாசம், தாயிடம் அதிகமா, தந்தையிடமா?
ஒருவருக்கு நல்லதோ, கெட்டதோ நடக்கும்போது, அவர் அறியாமல், வாயிலிருந்து சத்தமாக வரும் வார்த்தை என்ன... 'அம்மா!' தானே!
பி.கே.செல்வராஜ், நெய்வேலி: சில, தினசரி, வார, மாத இதழ்கள், தமிழகத்தை விட, வெளி மாநிலங்களுக்கு அதிக விலை வைத்துள்ளனவே... எதனால்?
அந்த பத்திரிகை கட்டுகளை தலையில் துாக்கி, பக்கத்து மாநிலங்களுக்கு செல்ல முடியுமா என்ன... எரி பொருள், சுங்க சாவடி செலவுகளும் மற்றும் அந்தந்த மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய வாகன கட்டணங்களும் உள்ளனவே!
எம்.முகமது அலி, திருச்சி: என் நண்பர்கள் இருவர்; ஒருவன், முதுகலை பட்டதாரி... அடுத்தவன், 10ம் வகுப்புடன் நின்று விட்டான்; ஆனால், சிறந்த உழைப்பாளி. இவர்களில் யாரை கெட்டிக்காரர் எனக் கூறலாம்?
இரண்டாமவர், உழைப்பாளி எனக் கூறி விட்டீர்கள்; அப்படியானால், முதலாமவர் அப்படி இல்லை என, சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்!
எப்போதும், படிப்பு சோறு போடுவதில்லை; அதனால், உழைப்பும் தேவை; உழைப்பு, 365 நாளும் சோற்றைத் தரும்!
'வாரமலர்' இதழின் ௮ மற்றும் ௯ பக்கத்தைத் திருப்பி, இந்த வார, பா.கே.ப., பகுதியை படித்துப் பாருங்கள்... இன்னும் விபரமாகப் புரியும்!