
* எஸ். செல்வம், அருப்புக்கோட்டை: நாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் மதுவை ஒழிக்க, மத்திய அரசு தான், இரும்புக் கரத்தை பயன்படுத்த வேண்டுமா?
இனி, ஒரு, 'கரும்பு கரமும்' பயன்படாது. மது பழக்கத்திற்கு ஆளாகி விட்டவர்களுக்கு, பல, 'சைடு' வழிகள் உள்ளனவே!
லெ.நா. சிவக்குமார், சென்னை: நாளிதழ்களில், முதல் பக்கங்களில், முழுப்பக்க விளம்பரம் வருவது சலிப்பு தருகிறதே...
வாசகர்களின், 'பாக்கெட்'டை காலி செய்யாமல் இருப்பதற்காக தான்! இப்படி வெளியிடா விட்டால், ஒரு பிரதியின் விலை, 20 ரூபாய் ஆகிவிடும்! புரிந்ததா உங்களுக்கு!
எஸ். ஸ்ரீநிகா, உறையூர்: தமிழக கம்யூ.,கள், யாரோ ஒருவர் முதுகில் ஏறி தான் சவாரி செய்கின்றனர். தனியாக அவர்கள் சவாரி செய்யும் காலம் வராதா?
மே.வங்கத்தில், மூக்குடை பட்டனர்; கேரளாவில், சபரிமலை ஒட்டி, முதுகில் அடி வாங்கப் போகின்றனர். தமிழகத்தில், இப்படி கட்சிகள் இருக்கின்றனவா என்பதை, அவர்களின் நாளிதழ்கள் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகிறது!
* ப.த. தங்கவேலு, பண்ருட்டி: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதி தேர்வில், 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது, நமக்கு உணர்த்துவது என்ன?
இந்த, 1 சதவீதம் பேரும், பாடம் நடத்தி, அவர்களது மாணவர்களை, இதே, 1 சதவீதத்தில் கொண்டு வந்து விடக்கூடாது என்பதே!
ரா.சா. சந்திரசேகர், சென்னை: கருணாநிதியின் மகன், மு.க.அழகிரி, என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தான், தி.மு.க., ஆசாமி என்பதை, மக்களுக்கு ஊடகங்கள் மூலம் புரிய வைத்துக் கொண்டுள்ளார்; மற்ற நேரங்களில் தன் விவசாயத்தையும், 'சேர்த்த' சொத்துகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்!
பா. வெங்கடகிருஷ்ண குமார், மதுரை: அடிப்படை பணியிலேயே உள்ளீரே... பதவி உயர்வு கிடையாதா?
பணி உயர்வு கிடைத்து விட்டால், கிடைக்காமல் போவது: 1.வாசகர்களின் தேடல். 2.அவர்கள் தரும், '5 ஸ்டார்' ஓட்டல் கவனிப்பு. 3.திடீரென, பொ.ஆ., அழைத்து, 'மெக்சிகோ போய், 15 நாள் சுற்றிப் பார்த்து, பயணக் கட்டுரை எழுது...' 4.'அட் லாஸ்ட்' என், 'அட்லசின்' அரவணைப்பு... இதெல்லாம் கிடைக்காமல் போய் விடுமே! வேண்டாம் பதவி உயர்வு!