PUBLISHED ON : ஏப் 05, 2020

* இ. நாகராஜன், சாத்துார்: நிர்பயா கொலை வழக்கில், துாக்கு தண்டனை பெற்றவர்கள், இத்தனை ஆண்டுகள் தப்பியது எப்படி?
அவர்கள் படிக்காதவர்கள்; ஆனால், அவர்களது வக்கீல்கள் படித்தவர்களாயிற்றே... நம்மூர் கோர்ட்டுகள் எல்லாம் துாக்கை உறுதி செய்த பின், ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், 'இன்டர்நேஷனல் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ்' இருப்பது, இவர்களுக்கு எப்படி தெரியும். அங்கேயும், 'அப்பீல்' செய்து, தள்ளுபடியாகி விட்டதே!
எல்லாம், வக்கீல்களின் உபயம் தானே!
கே. சுசீலா, திருவள்ளூர்: பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டால், எல்லா பொறுப்புகளையும் அவர்களிடம் கொடுத்து விடலாமா?
அந்த தவறை செய்தே விடாதீர்கள்! ஓரளவு உரிமை உங்களிடமிருந்தால் தான், இனிமையாக காலம் கழிக்க முடியும்!
* அ. சமீனா, நெய்வேலி: பெண்கள் சம்பாதித்து, தம் காலில் நிற்காத வரை, ஆணாதிக்கம் ஒழியாது என்ற கூற்று சரியா?
சரி என்பது, 90 சதவீதம் தான்; மீதி, விவாகரத்தில் முடிந்து விடுகிறதே!
ஜி. குப்புசாமி, சென்னை: நன்றி மறந்து விட்டான் நண்பன்; என்ன செய்வது?
நீங்களும் மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள்... மன நிம்மதி கிடைக்கும்!
எஸ். சுந்தரமூர்த்தி, கண்டனுார், சிவகங்கை: தங்களுக்கு எத்தனை மொழிகளில் பேசத் தெரியும்... எழுதத் தெரியும்?
இதோ உங்களுக்கு பதில் எழுதத் தெரிந்த மொழியில் மட்டுமே! லென்ஸ் மாமா உடன் இல்லை என்றால், 'இங்கிலீஷ்' பேசுபவர்களிடமிருந்து தப்பி ஓடி விடுவேன்!
ப.ல. பரமசிவம், மதுரை: தமிழகத்தில், 'தாமரை' மலர வாய்ப்புண்டா?
தினமும், 'தாமரை' மலர்ந்து, வளர்ந்து கொண்டே தானே இருக்கிறது. 'ஓஹோ' நீங்கள், பா.ஜ., பற்றி கேட்கிறீர்களோ... தமிழகம் விடிந்தால் தானே, 'தாமரை' மலரும்!
முருகு. செல்வகுமார், சென்னை: தி.மு.க.,வில் பொருளாளராக இருந்து, பொது செயலர் ஆகும், துரைமுருகன் சாதித்தது என்ன?
ஆட்சியில் இல்லாதபோதே, நிலத்தடி நீரை திருடி விற்றது வரை... ஆட்சியில் இருக்கும்போது செய்த, தில்லாலங்கடி வேலைகளை எழுத பக்கம் போதாது. அதெல்லாம் இருக்கட்டும்... முஸ்லிம்களை துாண்டி விட்டு, சென்னையில், 30 நாட்களுக்கு மேல் சாலை மறியல் நடத்தினாரே ஸ்டாலின்... அந்த முஸ்லிம்களில் ஒருவர் கூட, பொதுச் செயலர் பதவிக்கு தகுதி இல்லாதவர்களா?
