
எஸ். ராஜமோகன், விருதுநகர்: ரஜினி, கமல், விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தி.மு.க., -அ.தி.மு.க., கதி என்ன?
உருப்படாது; ஒருவேளை, பா.ஜ.,வுடன், ரஜினி கூட்டமைத்தால் மட்டுமே, வெற்றிக்கு வாய்ப்பு உண்டு!
நேர்மையானவர் ரஜினி, பா.ஜ., என்பது, மக்களுக்குத் தெரியும்... இந்த திராவிட கட்சிகளின் ஆட்சியிலிருந்து விடுபட வேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர்!
* வி. காமாட்சி, திருச்சி: நல்லறிவு மனிதனுக்கு எப்போது பிறக்கிறது?
'பர்ஸ்' காலியானவுடன்! கையில் சில்லறை இல்லாத போது தான், நல்லறிவு பிறக்கிறது!
கே. கணேசன், மறைமலைநகர்: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.அழகிரி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
தென் மாவட்டங்களில் அவருக்கு, தி.மு.க.,வில் ஆதரவு அதிகம்; எந்தக் கட்சி - தி.மு.க., தவிர, தனக்கு வலை விரிக்கும் எனக் காத்திருக்கிறார்!
என்.ஜெ. ரவிசங்கர், திருப்பூர்: வரும் சட்டசபைத் தேர்தலில், விஜயகாந்த் கட்சி தனித்து நிற்பதாக சொல்கின்றனரே... தேறுவரா?
முதலில், 2006ல் தனியாக நின்று, அவர் மட்டும் வெற்றி பெற்றார்; அவர் பெற்ற ஓட்டுக்களின் சதவீதம், 10!
கடந்த, 2011 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 2016ல், இடது சாரிகளுடன் சேர்ந்து, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை! நாட்டை ஆளும் நல் கட்சியுடன் கூட்டு சேர்ந்தால் தான் இனி, கொஞ்சமாவது வெற்றி பெறமுடியும்!
எல். முருகராஜ், மதுரை: எனக்கு முடிவில்லா இன்பம் வேண்டும் எனக் கருதுகிறேன்... என்ன செய்ய வேண்டும்?
இந்தக் காலத்தில் இருப்பதை சொல்லட்டுமா? உடம்பில் ஏதாவது இடத்தை அவ்வப்போது, சொறிந்து கொண்டிருப்பதில் தான் இன்பம் கிடைக்கிறது!
* இ. சுபாசினி, மானாமதுரை: 'தனித்து நின்றாலே, 60 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும்...' என, தமிழக தலைவர் முருகன் கூறியுள்ளாரே...
அவர் பெயரில் உள்ள கடவுள், கனவில் தோன்றியதாக நினைத்து, கூறுகிறாரோ என்னவோ!
ஆர். மகாலட்சுமி ரமேஷ், வி.சி.புரம், விருதுநகர்: நீங்கள், கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவரா? சமீபத்திய, பா.கே.ப., பகுதியில் வெளியான படத்தில், சட்டைப் பையில் கண்ணாடி இருந்தது; அதுதான் கேட்கிறேன்...
கண்ணாடி அணியும் பழக்கம் உண்டு; ஆனால், அது, 'கூலிங் கிளாஸ்!' பார்ப்பதற்கோ, படிப்பதற்கோ தேவையான கண்ணாடி அணியும் காலம் இன்னும் வரவில்லை!

