
பா - கே
சனிக்கிழமை காலை, 11:00 மணி.
கேள்வி - பதில் மற்றும் பா.கே.ப., எழுத வேண்டிய நாள். வாசகர்களிடமிருந்து வந்த கடிதங்களை படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, 'தஸ்... புஸ்...' என்று வியர்வையில் குளித்தவாறு வந்து அமர்ந்தார், குப்பண்ணா.
'வெயிலில் எங்கே போயிட்டு வர்றீங்க...' என்று கூறி, தண்ணீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்தினேன்.
'என்னமோ மணி... பத்திர பதிவு அலுவலகத்தில், ஒரு வேலை ஆகவேண்டியிருந்தது. போன முறை போன போது இருந்த அதிகாரி, இப்ப அங்க இல்லை. அவருக்கு பதிலாக, வேறொரு இளம் அதிகாரி உட்கார்ந்திருக்கிறார்.
'அவரிடம், ஆரம்பத்திலிருந்து, முழு விபரமும் சொல்ல வேண்டியதாகி விட்டது. 'நான் இப்பதான் புதிதாக இங்கு வந்திருக்கிறேன்.
10 நாட்களுக்கு பின் வாருங்கள்...' என்று கூறி, அனுப்பி விட்டார்.
'இவர் எப்ப பார்த்து, எப்போ முடிய போகுதோ தெரியவில்லை. இப்படி தான், புதிதாக பதவி
ஏற்க வந்தவருக்கு, பழைய அதிகாரி, மூன்று, 'அட்வைஸ்' செய்தாராம்...' என்று, ஏதோ சொல்ல வந்தார்.
அந்நேரம் பார்த்து, ஜாலியாக விசில் அடித்தபடி வந்தார், லென்ஸ் மாமா.
'மணி... ஊரடங்கெல்லாம் முடிந்து, 'பீச்'சுக்கு போக அனுமதி வழங்கிட்டாங்கப்பா... பீச்சுக்கு போய் ரொம்ப நாளாச்சுப்பா... சாயந்திரம் போலாமா...' என்றார்.
இவர் அலம்பலில், எங்கே எனக்கு மேட்டர் கிடைக்காமல் போய் விடுமோ என்று, 'வேலை முடித்து விட்டால் போகலாம்...' என்று, அவசரமாக கூறி, அவரை அனுப்பி வைத்து, குப்பண்ணா முகத்தை பார்த்தேன்.
குப்பண்ணா தொடர்ந்தார்:
நிறுவனம் ஒன்றில், உயர் அதிகாரி பதவியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், அன்று பொறுப்பேற்க வந்தார். ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்தவர், வேறொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்து செல்ல இருந்தார்.
அவரிடம், புதிதாக பொறுப்பேற்க இருந்தவர், திறமையான நிர்வாகம்
செய்திட ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பழைய அதிகாரியோ, மூன்று சீட்டுக்களை மடித்து, அவரிடம் கொடுத்து, பிரச்னை வரும்போது, வரிசைப்படி ஒவ்வொரு சீட்டாக பிரித்து பார்க்கச் சொன்னார்.
மகிழ்ச்சியுடன் அந்த சீட்டுக்களை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டார், புதிய அதிகாரி.
நிறுவனத்தின் உயர் அதிகாரியாக பொறுப்பேற்று, ஒரு சில மாதங்களே கடந்த நிலையில், ஊழியர்கள் மத்தியில் ஏதோ ஒரு பிரச்னை வெடித்தது; இவருக்கு, நெருக்கடி அதிகமானது. அப்போது, பழைய அதிகாரி கொடுத்திருந்த சீட்டு நினைவுக்கு வந்தது. அதில் முதல் சீட்டை எடுத்து பிரித்து பார்த்தார்.
'நான், இந்த நிறுவனத்திற்கு புதியவன். எனவே, சிறிது அவகாசம் கொடுக்கவும்...' என்று எழுதப்பட்டிருந்தது.
ஊழியர்களிடம் அப்படியே கூறினார், அதிகாரி.
அவர்களும், 'இவர் சொல்வதும் உண்மை தான். சில மாதங்கள் பொறுத்திருப்போம்...' என்று, கலைந்து சென்று விட்டனர்.
ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் ஊழியர்களின் பிரச்னை தலை துாக்கியது. இவருக்கு, அது பெரும் தலைவலியானது. எனவே, இரண்டாவது சீட்டை பிரித்து பார்த்தார்.
'முன்பு உயர் அதிகாரிகளாய் இருந்தவர்களை குறை சொல்லி, அவர்கள் மீது பழி போடு...' என்று எழுதப்பட்டிருந்தது.
இதைப் படித்ததும், ரொம்பவும் உற்சாகமடைந்தார். ஊழியர்களிடம், 'பழைய அதிகாரிகள் ஒழுங்காக நிர்வாகம் செய்யாமல் போனது தான், இவ்வளவுக்கும் காரணம். இன்னும் கால அவகாசம் தந்தால், அனைத்தையும் சீர் செய்து விடுவேன்...' என்று கூறினார்.
ஊழியர்களும், அவரது கூற்றை ஏற்றுக் கொண்டனர். எனவே, இன்னும் சிறிது கால அவகாசம் கொடுக்க இசைந்தனர்.
அப்படியே இன்னும் ஒரு ஆண்டு கடந்தது. இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஊழியர்கள் மீண்டும், 'வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை'யாக, பிரச்னைகளை கையில் எடுத்தனர்.
உடனே, பரபரப்பாக மூன்றாவது சீட்டை எடுத்து பிரித்து பார்த்தார். அதில், 'உனக்கு அடுத்து வருபவர்களுக்காக இதேபோல மூன்று சீட்டுக்களை தயார் செய்து வை...' என்று எழுதப்பட்டிருந்தது.
- இப்படி கூறி முடித்தார், குப்பண்ணா.
மனிதர்கள் ஒவ்வொருவரும், அதிலும் குறிப்பாக, உயர் அதிகாரிகளாக பதவி வகிப்பவர்கள், சுயமாக சிந்திக்கப் பழக வேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று, நினைத்துக் கொண்டேன்.
ப
கோயம்புத்துாரிலிருந்து வாசகி ஒருவர் எழுதியது:
எங்கள் வீட்டில், நான், என் மகன், மருமகள் மூவர் மட்டுமே. சூழ்நிலை காரணமாக, வேறு ஊரில் வசிக்கிறோம்.
சென்னையில் உள்ள, எங்கள் கம்ப்யூட்டர் சென்டரில், இரண்டு ஆள் போட்டு வேலை நடக்கிறது. வேலை செய்யும் பையன், விடுப்பு எடுத்ததால், கம்ப்யூட்டர் சென்டரை நாங்கள் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என் மகன், உடல்நலக் குறைவால் போக முடியாததால், கம்ப்யூட்டர் சென்டரை பார்த்துக் கொள்ள, சென்னை புறப்பட்டு சென்றாள், மருமகள். அவள், திரும்ப வருவதற்கு, ரயில் டிக்கெட்டும் வாங்கி ஆகிவிட்டது.
ஆனால், அவள் திரும்புவதற்கு முதல் நாள், 'கொரோனா' பிரச்னையால், ரயில்களை ரத்து செய்து விட்டனர். சொந்தக்காரர்கள் வீட்டில் மாட்டிக் கொண்டாள்.
ஊரடங்கு உத்தரவால், திரும்ப வரவும் வழியற்றுப் போயிற்று.
ஊரடங்கு முடிந்ததும், எல்லா கடைகளும் திறந்தவுடன், கடை பையன்கள் வேறு ஊரில் மாட்டிக்கொண்ட காரணத்தால், திரும்பவும், கம்ப்யூட்டர் சென்டரை பார்த்துக் கொண்டாள். திரும்பவும் ரயில் விட்டதும், 'இ பாஸ்' ஏற்பாடு செய்து புறப்பட்டு, கோவை வந்து சேர்ந்தாள். அவள் ஒரு தைரியமான பெண்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில், மருமகளுக்கு, 'கொரோனா டெஸ்ட்' எடுத்து, கையில், 'சீல்' வைத்து, 15 நாள் வீட்டிலேயே இருக்கச் சொல்லி அனுப்பி விட்டனர்.
'மனைவிக்கு ஏதும் பிரச்னை என்றால், எல்லாரையும் சோதனை செய்ய அழைத்துப் போவரே... அம்மா கஷ்டப்படக் கூடாது...' என்று, 75 வயதான என்னை, சொந்தக்காரரின் ஊருக்கு அனுப்பி விட்டான், மகன்.
மகனும், மருமகளும் மட்டுமே தனியாக இருந்தனர். அந்த, 15 நாட்களும், மருமகள் எந்த தொந்தரவும் இன்றி நலமாக இருந்தாள்.
ஆனால், அந்த, 15 நாட்களும், எந்த சொந்த பந்தமும், அக்கம் பக்கமும், போன் மூலமாகவோ, ஏதாவது வேண்டுமா என்றோ அல்லது தேவையானதை சொன்னால் வாங்கி வாசலில் வைத்துப் போகிறோம் என்றோ, கேட்கக் கூட ஆள் இல்லை.
பத்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் இருக்கிறோம். எல்லாரிடமும், நான் அன்புடனும், நட்புடனும் தான் பழகி வந்துள்ளேன். உண்மையான நட்புக்கும், பிரியத்திற்கும் பலனே இல்லையா... எங்கே போயிற்று மனித நேயம்...
நட்பு உள்ளங்களே, புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் ஒரு நேரம் வரலாம்; அன்று தேவைப்படலாம், உறவுகளின் ஆறுதல் வார்த்தைகள். இனியாவது புரிந்து கொள்வீர்களா?
- இப்படி எழுதியுள்ளார்.

