PUBLISHED ON : ஜூன் 05, 2011

*க.மகேந்திரன், காமயகவுண்டன்பட்டி: குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே, 'செக்ஸ்' அறிவை போதிக்க வேண்டும் என்று நினைத்தாலும், செயல்படுத்துவதற்கு மனம் தயங்குகிறதே...
அதை, 'அறிவாக' நினைக்காமல், இன்னும் உங்கள் மனம், 'ஆபாசமாக' நினைக்கிறது... இதுவே, தயக்கத்திற்குக் காரணம்!
***
** ஜி.ராமதாஸ், அருப்புக் கோட்டை: தின இதழ், வார, மாதம் இருமுறை, மாத இதழ் - இதில் எந்த பத்திரிகை துவங்குவது சுலபம்?
பணம் இருந்தால் எல்லா இதழ்களையுமே ஆரம்பிப்பது சுலபம்; ஆனால், தொடர்ந்து நடத்துவது...
***
*எஸ்.முரளி, குறிஞ்சிப்பாடி: அரசியல்வாதிகளின் செருப்பு வெள்ளையாக இருப்பது ஏன்?
உள்ளமும், நடவடிக்கைகளும் தான் கறுப்பாக உள்ளன; செருப்பாவது வெள்ளையாக இருந்துவிட்டுப் போகட்டுமே! ***
** பி.வேலு, மொடையூர்: 'கதர்' என்ற சொல் எப்படி வந்தது?
முகமது அலி ஜின்னா, ஒரு சமயம் காந்திஜியை கவுரவிக்கும் விதமாக கைத்தறி துண்டு ஒன்றை அணிவித்தார். அதை அணிவிக்கும் போது, அத்துண்டை, 'கவுரவமாக' ஏற்றுக் கொள்ள வேண்டினார். 'கதர்' என்பது அரபு மொழி சொல்; அதற்கு, கவுரவம் என்பது பொருள்.
***
*ஆர்.எஸ்.சந்திரசேகர், சென்னை: தற்கொலைகள் பெருகி விட்டனவே...
உண்மைதான்... தென் மாநிலங்களை பொறுத்த வரை பெண்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என, சமீபத்திய சர்வே ஒன்று கூறுகிறது. ஒரு லட்சம் பேரில், ஒரு ஆண்டில், 148 பெண்களும், 58 ஆண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனராம். இதுவே, உலக அரங்கில், 15 தான் என்கிறது அந்த சர்வே.
***
*ஜி.குப்புசாமி, புதுச்சேரி: இந்தியாவில், எந்த நகரத்தில் வீட்டு வாடகை அதிகம்?
மும்பையில்தான்... இந்த நகரில் வசிக்கும், 'அப்பர் மிடில் கிளாஸ்' மக்களின் வருமானத்தில், 40 சதவீதம் வாடகைக்கே சென்று விடுகிறது. காஸ்ட் ஆப் லிவ்விங்கும் இங்கு அதிகம்தான்! ஐதராபாத்தை விட, 60 சதவீதம் மும்பையில் செலவு அதிகம்!
***
** எஸ்.சின்னதுரை, நெய்வேலி: யாரை திருத்த முடியாது என்று நினைக்கிறீர்கள்?
மூடர்களைத் திருத்தவே முடியாது. அவர்களிடம் வண்டி, வண்டியாக புத்திமதி கூறினாலும் எடுபடாது; அவர்கள் மூளையில் ஏறாது! நாயின் வாலை என்றாவது நிமிர்த்த முடியுமோ? இப்படிப்பட்டவர் களின் சகவாசம் இல்லாமல் நாம் ஒதுங்கி இருப்பதே புத்திசாலித்தனம்!
***
