
எஸ். ராஜேஸ்வரி, மதுரை: நடிகர் கார்த்திக், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார்?
கார்த்திக்கே எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை; இதில் கூட்டணி அமைப்பு வேறா?
பி. சிவக்குமார், நாகமலை புதுக்கோட்டை: விவசாயிகள் போராட்டம் நியாயமானது தானா அல்லது எதிர்க்கட்சிகளின் துாண்டுதலா?
தரகர்களின் துாண்டுதலால் ஆரம்பமானது... பின்னர், எதிர்க்கட்சிகள் பின் நிற்கின்றன. இந்தியாவில் மொத்தம் மூன்று மாநிலத்தவர் தான் போராடுகின்றனர். தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் போராட்டம் கிடையாதே!
*எம்.எஸ்.பார்த்தசாரதி, கோவை: எத்தனை, 'சீட்'டுகள் தந்தாலும் சரி என்கிறாரே வைகோ...
இவர் கட்சி ஆரம்பித்ததே, தி.மு.க.,வை எதிர்த்துத் தான்! இப்போது தான் அவரின் பலமே புரிந்திருக்கிறது என்பதை, அவரது அறிக்கை விளக்குகிறது!
அப்துல், திருச்சி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5 ரூபாய்க்கு சாப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளாரே?
தேர்தல் நெருங்குகிறதே... அதன் பயம் தான், 5 ரூபாய் சாப்பாடு!
என். ஜெயன், திருப்பூர்: தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ந்து வருகிறதா; தேய்ந்து வருகிறதா?
காணாமல் போய் வருகிறது! ராகுல் வருகைக்குப் பின் கூட, தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை!
க.மு. கணேசன், சென்னை: பணக்காரர்களுக்கு எதிர்காலம் உண்டா?
இல்லை! அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் கறுப்பு பணத்தை தான், இந்த அரசு செல்லாது என்று அறிவித்து விடுகிறதே!
* க. ராஜேந்திரன், மதுரை: சசிகலா வரவால், அ.தி.மு.க., ஓட்டு வங்கி பாதிக்கப்படுமா?
நிச்சயமாக பாதிக்கப்படாது! வாக்காளர்கள் எல்லாம் இப்போது முட்டாள்கள் கிடையாது; ஊழல் செய்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவரை ஆதரிப்பதற்கு!
பி. பாரதி, பெங்களூரு: உங்கள் கார்ட்டூன் முகம் வரைந்தது யார்? எப்படி தேர்வு செய்தீர்கள்?
நமது முன்னாள் கார்டூனிஸ்ட், பீட்டர் தான்; 10 முகங்களை வரைந்து, பொறுப்பாசிரியரிடம் காட்டினார். அவர் தேர்வு செய்த முகம் தான், இது!
கவுசியா அஜீஸ், நெய்வேலி: 'நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, தமிழகம் வெற்றி நடை போடும்...' என்று, அக்கட்சியின் தலைவர், சீமான் சொல்லி இருக்கிறாரே...
வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது; வாய்ப்பு கிடைத்தால் அவர் இடத்தை, சீமான் நிறைவேற்ற வாய்ப்புள்ளது!

