
*ஆ. மோகன், அமராவதிபுதுார்: 'கழுதை தேய்ந்து கட்டெறும்பானது' என்ற பழமொழி, இன்று, எந்த தேசிய கட்சிக்கு பொருந்தும்?
இரு கட்சிகளுக்கு பொருந்தும். முதலாவது, காங்கிரஸ்; இரண்டாவது, கம்யூனிஸ்ட்டு கட்சி!
* பா. ஜனார்த்தனன், மதுரை: பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் நடிகையரை சேர்த்துக் கொள்கின்றனவே... எதனால்?
காசு கொடுக்காமல் கூட்டம் சேர்க்க வேண்டுமே... அதனால் தான்!
எஸ். பார்வதி, மதுரை: என் தோழி, 'நேரம் வரட்டும் காரியங்களை பார்த்துக் கொள்ளலாம்...' என, பேசாமல் இருக்கிறாளே... கடலில் அலை ஓயுமா?
அந்த கதை தான் இது என்பதை, தோழிக்கு புரிய வையுங்கள்... அலை பாட்டுக்கு அடிக்கட்டும், நாம் நீந்துவோம் என்று எண்ணச் சொல்லுங்கள்!
ஜெ. கீதா, திருவண்ணாமலை: இன்று, தமிழகத்தில் உள்ள கட்சிகளில், எது மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும்?
குண்டர்கள் இல்லாத கட்சிகளால் மட்டுமே! உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சிகள் மட்டுமே, மக்களிடம் எடுபடும்!
* எஸ். பாஸ்கர், நெல்லை: எனக்கு நண்பர்கள் வேண்டும் எனத் தோன்றுகிறது. எப்படிப்பட்டவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது?
நெருக்கடி நேரும்போது, நமக்காக செலவு செய்பவனா என்பதை, முதலில் அறிந்து கொள்ளுங்கள்; அடுத்து, அறிவுள்ளவனாக இருக்க வேண்டும்; மேலும், துணிவுள்ளவனாக இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்று கூட இல்லாதவர்களிடம் நட்பு வேண்டாம்!
கே. சேகர், வத்தலக்குண்டு: நான் என்னை கஞ்சன் என்று நினைத்துக் கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் அப்படிச் சொல்கின்றனரே...
போகட்டும் விடுங்கள். இந்தக் காலத்தில் சிக்கனமாக இருப்பதே நன்று. நண்பர்களுக்காக, செலவாளியாக மாறி விடாதீர்கள்!
வி. கோபாலன், சிவகாசி: தேர்தல் முடிந்து விட்டது; கரும்புக் கரம் எது; இரும்புக் கரம் எது?
ஓட்டு வாங்கி விட்டவர்களின் கரம், இரும்பு; ஓட்டு போட்டவர்களின் கரம், கரும்பு!
ஆ. ஜெயபாலன், சிதம்பரம்: எனக்கு, துன்பங்கள் தொடர்ந்து வருகிறது; இதை எப்படி சமாளிப்பது?
துவளாதீர்கள்; அலையற்ற அமைதியான கடல் உண்டா; அவை, திறமையான மாலுமியை உருவாக்குமா?

