PUBLISHED ON : ஏப் 10, 2022

ஜே. ஆர். ராஜாராம், பரமக்குடி: சாம்பார் மற்றும் மூன்று வகை சட்டினியுடன் இட்லி வியாபாரம் செய்கிறேன். வியாபாரம் பிய்த்துக் கொண்டு போகிறது. வேறு என்ன தொழில் செய்யலாம்?
ஹோட்டல் சரவண பவனின் முதலாளி, மறைந்த ராஜகோபாலன் என்ன செய்தார்... தன் ஹோட்டல் கிளைகளை அரபு நாடுகள் வரை வளர்த்துச் செல்லவில்லையா? அதுபோலவே, இட்லி வியாபாரத்தைப் பெருக்குங்கள்... இன்னொரு ராஜகோபால் உருவாவார்!
பா. ஜோதிமணி, திருப்பூர்: திருமணமாகப் போகும் என் தோழிக்கு, நல்லதா ஒரு நாலு வார்த்தை சொல்லுங்களேன்...
புகுந்த வீட்டை, தான் பிறந்த வீடாக நினைத்துக் கொள்ளட்டும்... அப்புறம் எல்லாமே நலமாக நடக்கும்!
எஸ். கணேசன், மதுரை: அன்பு என்பது என்ன?
உறுதியான நல்ல மனநிலை; சிறந்த சிந்தனையுடன் நல்ல செயல்பாடு... இவைகளே அன்பின் அடிப்படை!
* வி. தேவசகாயம், சென்னை: வைகோவின் மகன், துரை வைகோ, தன் தந்தையின் இடத்தை பிடிப்பாரா?
கண்டிப்பாக பிடிப்பார்... தி.மு.க.,விற்கோ, அ.தி.மு.க.,விற்கோ, 'ஜால்ரா' அடிக்கும் இடத்தை பிடிப்பார்!
சி. கோபால், கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி என்ன செய்து கொண்டுள்ளார்?
தமிழக அரசை எதிர்த்து தினசரி ஒரு அறிக்கையும், மத்திய அரசுக்கு சாதகமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுக் கொண்டுள்ளார்!
வித்யாவாசன், சென்னை: 'தினமலர்' போன்ற நடுநிலை ஏடுகளை அனைத்து நுாலகங்களிலும் அனுமதிக்காமல் இருப்பது பெருந் தவறல்லவா? அனைத்து நுாலகங்களிலும் அனுமதிக்கப்பட நிபந்தனைகள் என்ன?
தினமும் தலைப்பில், ஸ்டாலின் செய்தி வரவேண்டும்... அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் படங்களும் முதல் பக்கத்தில் நான்கு பத்திகளில் வரவேண்டும்... தி.மு.க.,விற்கு எதிரான செய்திகள் எதுவும் வெளியிடக் கூடாது... இதுதான் நிபந்தனைகள்!
* ஜி. குப்புசுவாமி, சென்னை: வெற்றியும், தோல்வியும் சகஜம்... எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம்...' என்று தே.மு.தி.க., கட்சியின், பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கிறாரே?
பயங்கரமான தீர்க்கதரிசி... அவர் கூறியுள்ள இரண்டாவது இடத்தைத் தான், தே.மு.தி.க., இனி பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
