
* த. சிவாஜிமூக்கையா, சென்னை: 'ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிட, வேட்பாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்...' என, மத்திய அரசிடம், தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளதே...
இதனால், பணம் வாங்கி ஓட்டுப் போடும் வாக்காளர்களுக்கு நஷ்டம் தான் என்றாலும், அரசின் பணம் வீணாவதை தடுக்க முடியும்!
இ. நாகராஜன், சாத்துார்: பிறருக்கு, 'குட்மார்னிங்' சொல்வதை, காலை எத்தனை மணி வரைக்கும் சொல்லலாம்?
மதியம், 12:00 மணிக்கு முன் வரை... அதன்பின், 'குட் அப்டர் நுான்' என்று சொல்ல வேண்டும்... மதியம், 3:00 மணி ஆன பின், 'குட் ஈவினிங்' சொல்ல வேண்டும்!
அ. குணசேகரன், நெல்லை: என் நண்பனுக்கு அறிவுரை ஒன்று கூற நினைக்கிறேன். என்ன சொல்வது?
நல்ல செய்தியாக, 'எதுவும் நிரந்தரமல்ல' என்று கூறுங்கள்... அதேபோல, 'கெட்ட செய்திகள் எதுவும் நிரந்தரமல்ல' என்பதை புரிய வையுங்கள்!
எஸ். நாதன், சென்னை: ஒரு மனிதனின் உயரிய குணம் எது... தாழ்ந்த கொடூரமான குணம் எது?
உயரிய குணம் என்பது, பிறரின் துயரங்களில் பங்கேற்பது... தாழ்ந்த குணம், பிறர் துயரை பரிகாசிப்பது!
ஆர். சுப்புத்தாய், விருதுநகர்: தமிழக அரசின் போக்குவரத்துத் துறை, 1,000 பஸ்களை தனியார் மயமாக்க போகிறதாமே...
வரவேற்கப்பட வேண்டிய முடிவு... அத்துடன், அரசு போக்குவரத்து முழுவதுமே, தனியார் மயம் ஆக்கிவிட்டால், பல ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்து, அரசு மீளலாம்!
* கே. ரகுபதி, கோவை: 'கல்லக்குடி' என்று, தமிழ் பெயர் மாற்றத்திற்கு போராடினார், கருணாநிதி. இன்று, அவரது பேரன் உதயநிதி, தன் சினிமா பட நிறுவனத்திற்கு, 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' என்று, ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளாரே...
இதுதான், 'திராவிட மாடல் ஆட்சி' - இதில், 'மாடல்' என்பதே தமிழ் கிடையாது... இதற்கு மேலும், ஸ்டாலின் என்பதும், தமிழ் பெயர் கிடையாது!
எம். ராமதாஸ், விழுப்புரம்: 'ஒன்றரை கோடி, அ.தி.மு.க., தொண்டர்களும், பொது மக்களும் என்னைத் தான் ஆதரிக்கின்றனர்...' என, சசிகலா கூறியிருக்கிறாரே...
தமாஷ் பேச்சு, பேட்டி, அறிக்கை விடுவதில் நிறைய தேறி விட்டார், சசிகலா... ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் ஜெயிலில் இருந்தவர்!

