
க. குணசேகரன், சென்னை: 'எல்லாரிடமும் நன்கு பழக வேண்டும்...' என்கிறானே, என் நண்பன்...
அவர் சொல்வது சரிதான்... எல்லாரிடமும் இனிமையாக பழகும் இயல்புடையவராக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்! நமக்கு அறிமுகம் இல்லாதவரிடம் வேறு ஒரு மாதிரியாக பழகக் கூடாது... எல்லாரிடமும் நாம் சமமாகவே பழக வேண்டும்!
ச. நாராயணன், நெல்லை: வருடா வருடம், பல லட்சம் கனஅடி மழை நீர், கடலில் கலப்பதை தடுக்க, எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காத அரசுகள் பற்றி...
கரிகாலன், காமராஜர் போல எவரும் சிந்திக்கவில்லை... காவிரிக்காக, கர்நாடகாவுடன் மோதுவதையே வாடிக்கையாக கொண்டு விட்டனர்!
சி. பிரகாஷ், நெல்லை: நம்மிடம், வெளி மனம், உள் மனம் என்று இரண்டு இருக்கிறதே... இதில் உள் மனதிடம் என்ன சொல்ல வேண்டும்?
உள் மனதிடம், எந்த பிரச்னையும் நல்லபடியாகவே முடிந்து விட்டதாக சொல்லவும். பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து, சாதனை செய்து விட்டேன் எனவும் சொல்லவும். உள் மனதிடம் உங்களது, மகிழ்ச்சியையும், திருப்தியையும் தெரிவியுங்கள்... மனம் அமைதி பெறும்!
* ஆர். ஆனந்தன், சென்னை: அக்டோபர் மாதம் வரவுள்ள பருவ மழை காலத்திற்கு, அரசு என்னென்ன முன்னேற்பாடுகள் செய்துள்ளது?
ஏதேதோ முன்னேற்பாடுகள் செய்து வருவதாக அரசு கூறுகிறது... வரும் பருவ மழை பெய்த பின் தான் அது தெரிய வரும்!
கோ. குப்புசுவாமி, சங்கராபுரம்: உ.பா.,வின் போது, லென்ஸ் மாமாவிற்கு பிடித்த, 'சைடிஷ்' என்னென்ன?
'என்னென்ன' என்பது இல்லை... அவருக்கு பிடித்தது, 'சைடிஷ்' ஒன்றே ஒன்று தான்... அதுவும், 'கிரவுன் பிளாசா' என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான்... அது, வேறு ஒன்றும் இல்லை... 'சிக்கன் 65' தான்!
பா. சச்சிதானந்தம், புதுச்சேரி: பகல் கனவு பலிக்காது என்று கூறுகின்றனர்... அப்படியானால், இரவு கனவு பலிக்குமா? உங்களுக்கு ஏதும் பலித்துள்ளதா?
எனக்கு நடு இரவிலும் கனவு வரும்... விடியற்காலையிலும் பல கனவுகள் வந்து கொண்டே இருக்கும்... காலை விழித்ததும் ஒன்றுமே நினைவுக்கு வராது!
* எம். சத்தியநாராயண மூர்த்தி, அந்தநல்லுார், திருச்சி: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
முழுமையான ஓய்விற்கு போய் விட்டார்... வயதும், 'பழக்க வழக்கங்களும்' காரணம்... அவரது மனைவியான பொருளாளரும், தலைவர் பதவி ஏற்றாலும், தமிழக ஆட்சியில் ஒரு மாற்றமும் நிகழாது!