PUBLISHED ON : ஜூன் 18, 2023

பி. கன்னியம்மாள், சாயல்குடி, ராமநாதபுரம்: 'வரும் லோக்சபா தேர்தல் முடிவுகள், மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்...' என்று, ராகுல் கூறுகிறாரே. அது, என்னவாக இருக்கும்?
எதிர்க்கட்சி அந்தஸ்து கூட, காங்., கட்சிக்கு கிடைக்கவில்லையே என்பதை நினைத்து, ஆச்சரியப்படுவர்!
க.சிவசங்கர், மதுரை: ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
ஒழுக்கமுள்ள மக்களை உருவாக்க, நல்ல அரசுகள் தான் வேண்டும். அதே மக்களை, ஒழுக்கமில்லாத, குடிகாரர்களாக மாற்ற, மாவட்டத்திற்கு, நான்கு கயவர்கள் இருந்தாலே போதும்!
* மு. நாகூர், சாத்தக்கோன் வலசை, ராமநாதபுரம்: 'அரசு ஊழியர்கள், லஞ்சம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடிபட்டால், அவர்களை, உடனடியாக பணியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்...' என்று, கேரள, லஞ்ச ஒழிப்புத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பற்றி...
அருமையான பரிந்துரை. இதை, எல்லா மாநில, லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசுக்கு சொல்ல வேண்டும். அப்போது தான், பாதி லஞ்சமாவது குறையும்!
பாரதி முருகன், மணலுார்பேட்டை: 'பின்புற கண்ணாடியை மட்டும் பார்த்து, இந்தியா எனும் காரை, பிரதமர் மோடி ஓட்டுவதால், அடுத்தடுத்து விபத்து நடக்கிறது...' என, அமெரிக்காவில், ராகுல் பேசியிருக்கிறாரே...
இரு புற கண்ணாடியைப் பார்த்து, நன்றாக, நிதானமாக ஓட்டிச் செல்வதால் தான், உலகத் தலைவர்கள் பாராட்டுகின்றனர். அவரை, 'பாஸ்' என்றும் அழைக்கின்றனர். இது, ராகுலுக்கு கடுப்பை ஏற்றி விட்டது போலும். அதனால் தான் இப்படி பேசுகிறார்!
* கே. அருணாசலம், தென்காசி: 'கோவில்களில், அரசியல்வாதிகளை, அறங்காவலர்களாக நியமிக்கக் கூடாது...' என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறைக்கு வருமா?
உயர்நீதிமன்ற தீர்ப்பில், 'அரசியல் தொடர்பு இருக்கிறது என்பதற்காக, ஒருவரது அறங்காவலர் நியமனம், செல்லாததாகி விடாது...' என்றும் கூறியுள்ளதே. திராவிட மாடல் ஆட்சியாளர்கள், இந்த தீர்ப்பை வைத்து பயன் பெறுவர் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை!
எஸ். ஜான், மதுரை: எனக்கு நிறைய பணிகள் இருக்கின்றன. என்னால், அனைத்தும் முடிக்க முடியவில்லை. யாரை நம்பி, பணிகளை கொடுக்க வேண்டும்?
இந்த பணியை, இந்த காரணத்தால், இவர் செய்து முடிப்பதில் வல்லவர் என்பதை நன்கு ஆராய்ந்த பின்னரே, அப்பணியை அவரிடம் ஒப்படையுங்கள்... வெற்றி பெறுவீர்கள்!
ஜெ. முகமது அலி, திருச்சி: வாழ்வில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறேனே...
இரண்டே வழிகள் தான் உண்டு. ஒன்று, விட்டுக் கொடுங்கள்; இரண்டாவது, விட்டு விடுங்கள்!
வி. பானுமதி, சென்னை: என் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்கிறேனே...
தேவைக்கு மேல் செலவு செய்வது ஆடம்பரம். தேவைக்கு கூட செலவு செய்யாதது கருமித்தனம். தேவையின் அளவுக்கு செலவு செய்வது சிக்கனம்!
