PUBLISHED ON : ஆக 13, 2023

மு. இசக்கி, சென்னை: வரும் பார்லிமென்ட் தேர்தலில், தனித்து போட்டி என்கிறாரே, சரத்குமார்...
இவர் கட்சியுடன் கூட்டுச் சேர, எந்த கட்சி முன் வந்திருக்கிறது! வேறு வழி தெரியாமல், தனித்து போட்டி என்கிறார். ஒரு தொகுதியில் கூட, 'டெபாசிட்' கிடைக்காது என்பது, நமக்கு தெரியாதா என்ன!
ஜி. சாந்தி, சென்னை: 'பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து இறக்குவோம்; ஜனநாயகத்தை காப்போம்...' என்றெல்லாம் முழங்கும், 26 கட்சிகளின், 'இந்தியா' கூட்டணி, 'ஊழலை ஒழிப்போம்...' என்று ஒரு தடவை கூட கூறவில்லையே...
மீண்டும், மீண்டும் ஊழல் செய்தே, சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும், 26 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சியினர், இப்படியொரு வாக்குறுதியை கொடுப்பர் என்று எப்படி எதிர்பார்க்கலாம்!
எம். செண்பகவல்லி, நெல்லை: உதயநிதி, முதல்வர் ஆக்கப்படுவாரா?
ஒருவேளை, 26 வென்று, ஸ்டாலின் துணை பிரதமர் ஆக்கப்பட்டால், உதயநிதி முதல்வர் ஆவார். ஆனால், அதுதான் நடக்கப் போவதில்லையே!
எம். ராமன், மதுரை: 'மாபெரும் குற்றம்' எது என, என் நண்பன் கேட்கிறானே... நான் என்ன சொல்வது?
செயலால் திருட்டைச் செய்யாவிட்டாலும், அதை மனதால் நினைப்பதே, மாபெரும் குற்றம் எனச் சொல்லி, உங்கள் நண்பருக்கு புரிய வையுங்கள்!
* எம். சண்முகசுந்தரம், நெல்லை: 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' பெற, வீடுதோறும் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், அரசின் பல நிபந்தனைகளால், அனைத்து மகளிருக்கும், இது கிடைக்கப் போவதில்லை. இதனால், அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடாதா?
கெட்ட பெயர் ஒரு பக்கம் இருக்கட்டும். இதன், 'ரிசல்ட்' அடுத்து வரும் லோக்சபா தேர்தல் முடிவுகளில் இருந்தே தெரிந்து விடும்!
* ஜி. குப்புசாமி, சங்கராபுரம்: 'லோக்சபா தேர்தலில் தோற்றால், பிரதமர் மோடி, வெளிநாட்டில் தஞ்சமடைவார்...' என்று, லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளாரே...
தமிழக தமாஷ் நடிகர், வடிவேலுவுக்கு சினிமா வாய்ப்பு குறைந்து விட்டது. அவருக்கு பதிலாக, லாலு பிரசாத் யாதவை, இங்கு கொண்டு வந்து விடலாம் போலுள்ளது, இவரது பேச்சு மற்றும் அறிக்கைகள்!
க. கதிரேசன், சென்னை: 'லாபம் தரும் தொழிலாக, வேளாண்மையை உயர்த்தணும்...' என்று சொல்லும், முதல்வர் ஸ்டாலின், நெய்வேலி, என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு, விளை நிலங்கள் அழிக்கப்படுவது பற்றி எதுவும் கூறவில்லையே... ஏன்?
அவை, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடும் கொடுக்கப்பட்ட நிலங்கள் தான் என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் எதுவும் கூறவில்லை!
