PUBLISHED ON : ஆக 27, 2023

ஆர். சுப்பு, திருத்தங்கல்: தமிழகத்தில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி, ஜனாதிபதிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளாரே... ரத்தாகுமா?
அந்துமணிக்கு, தினமும், 150 கார்டுகள், 15 இ - மெயில் கேள்விகள் வருகின்றன. ஒவ்வொரு கார்டு மற்றும் இ - மெயில் கடிதங்களில் குறைந்தது, நான்கு கேள்விகள் இடம்பெற்றிருக்கும். வாரத்துக்கு மொத்தம் ஏழு கேள்விகளுக்கு தான் பதில் எழுத முடியும். பதில் கிடைக்காத வாசகர்கள், எவ்வளவு வருத்தப்படுவர். அதே நிலை தான், முதல்வர், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திற்கும்!
* ஆர். ரதீஷ், சென்னை: தமிழகத்தில் அறிமுகமாகியுள்ள, மஞ்சள் வண்ண அரசு பேருந்து குறித்து...
மஞ்சள் வண்ணம், கருணாநிதிக்கு மட்டுமல்லாமல், ஸ்டாலினுக்கும் ராசியான நிறம் போலும். அதனால் தான் மஞ்சள் நிற கை பை துவங்கி, ஆவின் பால்,'பாக்கெட்'டை அடுத்து, மஞ்சள் வண்ண பஸ்களை கொண்டு வந்திருக்கிறார்!
எம். பிலோமினா, துாத்துக்குடி: ஜாதிக் கலவரங்களைப் பார்த்தால், அச்சமாக இருக்கிறதே... என்ன செய்ய வேண்டும்?
முதலில், ஜாதி உணர்வுகளைத் துாண்டும், ஜாதிக் கட்சிகளை தமிழகத்தில் ஒழித்துக் கட்ட வேண்டும். இரண்டாவதாக, ஜாதிகளை அடிப்படையாக வைத்து சினிமாக்களை எடுப்பவர்களுக்கு, 'சென்சார் போர்டு' அந்த சினிமாக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால், தமிழகத்தில் ஜாதி கலவரங்கள் ஓயும்!
ஆர். ரோசலின், சென்னை: 'மக்களை ஏமாற்றுகிறோமே...' என்ற குற்ற உணர்வு துளி கூட இல்லையே, இந்த தி.மு.க., அரசுக்கு...
அவர்கள் தான், கொஞ்சம் கூட ஏமாறாமல், விஞ்ஞானப் பூர்வ ஊழல் செய்து, தங்கள் கஜானாவை கோடிக் கணக்கில் நிரப்பி வருகிறார்களே... அவர்களுக்கு, மக்களின் மீது அக்கறை வருமா?
* பி.சி. ரகு, விழுப்புரம்: கவர்னர் தேநீர் விருந்தை, முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி புறக்கணிக்கிறாரே... ஏன்?
ஒருவேளை, உற்சாகபான விருந்து அளித்திருந்தால், கலந்து கொண்டிருப்பாரோ என்னவோ...
ப. ராகவன், மதுரை: நற்செயலில் ஈடுபடுவதில் என்ன நன்மை கிடைக்கும்?
ஒரே ஒரு நெல் விதை கதிராகும்போது என்ன நடக்கும்... 100 நெல் மணிகளைத் தரும். அதுபோல, நற்செயல்களில் ஈடுபடும்போது, அதில் ஈடுபடுபவர்களுக்கு, பன்மடங்கு நன்மை கிடைக்கும்!
க. விநாயகம், கோவில்பட்டி: என் வயது: 45. நான் நேர்மையற்றவனாக மாறிக் கொண்டே இருக்கிறேனே... என்ன செய்வது?
இதை மனதில் கொள்ளுங்கள்... நேர்மையான முறையில் கிடைக்காத எதுவும் நிற்காது, நிலைக்காது, நீடிக்காது, ஒரு நிறைவையும் தராது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். திருந்தி விடுவீர்கள்!
