PUBLISHED ON : செப் 10, 2023

வி. ஆனிமேரி, குழித்துறை: மணி... சேர்த்து வைத்த பணத்தை, வங்கியில் சேமிக்கலாமா? நிலமாக வாங்கலாமா அல்லது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
கடைசி இரண்டிலும் முதலீடு செய்யுங்கள்; அவற்றின் மதிப்பு தான் தினசரி கூடி வருகிறதே... எனவே, லாபம் அதில் தான்!
ஆர். ராஷ்மி, ஆஸ்திரேலியா: தி.மு.க., இளைஞரணியினருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட, 15 'சீட்' தரப் போகின்றனராமே... 'ஓல்டு'கெல்லாம், 'கல்தா' கொடுக்க திட்டமோ?
உண்மை தான்... 'ஓல்டு'கள் எல்லாம் விரட்டப்படுவர். ஆனால், நம் முதல்வர், 70 வயதாகியும் இதிலிருந்து தப்பி விடுவார் என்பதில், எந்த சந்தேகமும் வேண்டாம்!
ஜி. நாகராஜன், சிதம்பரம்: ஆண் அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்கி அகப்பட்டுக் கொள்ளும் நிலையில், இப்போது, பெண் அதிகாரிகளும் அதிக அளவில் லஞ்சம் வாங்கி அகப்பட்டுக் கொள்கின்றனரே...
அரசு அதிகாரிகளான, ஆண்களும், பெண்களும், ஆண்ட, ஆளுகிற திராவிட கட்சித் தலைவர்களிடம், 'டியூஷன்' எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் விஞ்ஞானப்பூர்வமாக, எப்படி லஞ்சம் வாங்குவது என்பதை கற்றுக்கொள்ள முடியும்; மாட்டிக்கொண்டாலும், 90 சதவீதத்தினர் தப்பி விடலாம்!
* எ. ரகு, கோவை: 'வீணாக வாதம் செய்யாதே...' என்கிறாரே, என் தாத்தா. இதன் அர்த்தம் என்ன?
மனிதர்கள் பலரிடமும், கெட்ட குணங்களான, கோபம், பொறாமை மற்றும் பேராசை உள்ளது. இவர்களிடம் வீணாக வாதம் செய்தால், நேரம் தான் வீணாகும். எனவே, ஒருவரது இயல்பைப் புரிந்து கொண்டு செயல்பட்டால், பிரச்னையே வராது. இதைத் தான், உங்கள் தாத்தா அறிவுறுத்துகிறார்!
ஆர். முருகன், தென்காசி: எனக்கு, அதிர்ஷ்டம் குவிந்து விட்டது. இதை யாரிடம் பகிர்ந்து கொள்ளலாம்?
வேண்டாத நபர்கள், உங்களை விட அதிர்ஷ்டம் குறைந்தவர்கள். அவர்களிடம் உங்கள் மகிழ்ச்சியைப் பற்றிப் பேச வேண்டாம்; பேசினால், அவரை துன்புறுத்துவதற்கு ஒப்பாகும். எனவே, வாயை மூடிக் கொள்ளுங்கள்!
* வீ. ராகவன், சென்னை: என் வயது: 68. நான், 'ரிட்டயர்ட்' ஆகி விட்டேன். அடுத்து என்ன செய்வது?
'ரிட்டயர்ட்' ஆன பிறகு, உங்கள் பேச்சுக்களை குறைத்து, பொறுப்புகளை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைத்து விடுங்கள்; எளிமையாக வாழுங்கள். இனிமேல், வீட்டுக்கும், சமுதாயத்துக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். மக்களிடமிருந்து, பாராட்டு கிடைக்கும்!
ஆர். பாலாஜி, திருச்சி: 'இது தான் உன் விதி...' என்கிறானே, என் நண்பன். விதி என்றால் என்ன?
நீங்கள், நல்லது செய்கிறீர்களா... நல்லதே வரும். கெட்டது செய்தால், கெட்டது வரும். இது தான் விதி என்பது! நீங்கள், நல்லது தானே செய்து கொண்டிருக்கிறீர்கள்!
