sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வேலை!

வேலை!

வேலை!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புறப்படும் போதே, மக்கர் செய்தது, பைக். பதினைந்து ஆண்டுகளாக உழைத்து ஓய்ந்து விட்டது. விற்று விட்டு புதுசு வாங்க முடியவில்லை.

மெக்கானிக் கடை வரை தள்ளிக் கொண்டு போய், கடை திறக்க காத்திருந்தேன். சரி செய்து புறப்பட, ஒருமணி நேர தாமதம் ஆனது. எக்கச்சக்க வாகன நெரிசலில் நத்தை போல் ஊர்ந்து சென்று, சிக்னலில் சிக்கிக் கொண்டேன்.

பக்கத்தில் உரசினார் போல் வந்து நின்றது, ஒரு கார்.

''ஏன் உரசர... ஒரேயடியா மேல ஏத்திடேன்,'' என்று கடுப்புடன் சொன்ன நேரம், டிரைவிங் சீட்டின் கண்ணாடியை இறக்கிப் பார்த்தவனை, ஆச்சரியத்துடன், ''ஏய் சுரேஷ்...'' என்றேன். அவனும், அதே மகிழ்ச்சியுடன், ''தினா...'' என்றான் ஆர்வத்துடன்.

சிக்னல் கிடைத்ததும், இருவரும் நெரிசலை விட்டு, வாகனங்களை ஒரு காபி கடை ஓரம் நிறுத்தினோம். நான், என் பழைய பைக்கை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்த, புத்தம் புது காரை விட்டு தோரணையுடன் இறங்கினான், சுரேஷ். எனக்குள் பொறாமை, 'பொசு பொசு'வென்று பொங்கியது.

கடை உள்ளே, அவன் தான் அழைத்து போனான். வசதியானவர்கள் மட்டுமே வந்து போகும் இடம் போலிருந்தது. இருக்கையில் அமர்ந்ததும் காபி, பிஸ்கெட்டுக்கு சொல்லி, என் கை பிடித்து, ''எப்படி இருக்க தினகர்... வீட்டுல எல்லாரும் சவுக்கியமா?'' என்றான்.

அவன் உரிமையோடு கையை பற்றியது பிடித்திருந்தது; அதில், பழைய நெருக்கம் தெரிந்தது.

''ம்... இருக்கேன்,'' என்றேன்.

என்னால் அப்படித்தான் சொல்ல முடிந்தது.

''நீ?'' என்று கேட்டேன்.

''உன் தயவால ரொம்ப நல்லாவே இருக்கேன்,'' என்றான்.

''என் தயவு என்ன?'' என்றேன் புரியாமல்.

''என்ன பார்க்குற தினகர்... வேலை இல்லாம இருந்த என்னை, நீ தானே முதல்ல அந்த வி.கே.டிரேடர்ஸ்ல சேர்த்து விட்ட,'' என்றான்.

எனக்கு ஆச்சரியம் பீறிட்டது.

''ஆமாம்... அது ஆறேழு வருஷம் இருக்கும். அதுக்கும், இப்ப நீ இருக்குற வசதிக்கும் என்ன சம்பந்தம்... நான் சேர்த்து விட்ட இடத்துல, அதிகபட்சம் ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ தான் தாக்கு பிடிச்சிருப்ப...

''என்னாலயே அங்க நாலு மாசத்துக்கு மேல இருக்க முடியல; அதான் வேற கம்பெனிக்கு மாறிட்டேன். இப்ப, நீ எந்த நிறுவனத்துல வேலை பார்க்குற... உன்ன பார்த்தா வசதியாக இருக்கேன்னு தெரியுது... உனக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என்னையும் எப்படியாவது அந்த கம்பெனியில சேர்த்து விடேன். ரொம்ப நொந்து நுாடுல்ஸ் ஆயிட்டேன்,'' என்று என்னையும் மீறி, வார்த்தைகளை கொட்டினேன்.

என்னை ஒரு தினுசாக பார்த்து, ''இப்பவும் நீ சேர்த்து விட்ட கம்பெனியில தான், மேனேஜரா வேலை பார்க்கிறேன். கார், வீடுன்னு ரொம்பவே வசதி செய்து தந்திருக்காரு, முதலாளி. நான் சொன்னா கேட்பாரு வந்து சேர்ந்துக்க,'' என்றான், சுரேஷ்.

வியப்பில் என் புருவங்கள் உயர்ந்தன.

''உனக்கு கார் கொடுக்குற அளவுக்கா, அந்த கம்பெனி வளர்ந்துடுச்சு?''

''நீ அங்கிருந்தா, என்ன விட நல்லாவே இருந்துருப்ப, தினா,'' என்றான், சுரேஷ்.

காபியும், பிஸ்கெட்டும் வந்தது; எனக்கு நினைவு பின்னோக்கியது.

நானும், சுரேஷும், பள்ளி மற்றும் கல்லுாரியிலும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். படித்து முடித்ததும், ஒரு ஆண்டு வேலை தேடல். திரும்பிய பக்கமெல்லாம், ஐ.டி., படித்தவர்களுக்கே வாய்ப்புகள் இருந்ததால், ஆர்ட்ஸ் காலேஜில் பி.காம்., முடித்த எங்களுக்கு, வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக எனக்கு முதலில் வேலை கிடைத்தது.

வீட்டு உபயோக பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, குடோனில் வைத்து, துண்டு துண்டாக வியாபாரம் செய்யும் நிறுவனம், வி.கே.டிரேடர்ஸ் கம்பெனி.

வேலைக்கு ஆள் எடுக்கும் போதே, 'பேருக்கு தான் கிளார்க் போஸ்ட்; எல்லா வேலையையும் எடுத்துச் செய்யணும். உன் சொந்த கடையை போல பொறுப்பா பார்த்துக்கணும்...' என்று, முதலாளி கந்தசாமி சொன்ன போது, அங்கே பெரிய உத்தியோகம் கிடைத்து விட்டது போல பிரமை தட்டியது; தலையாட்டினேன்.

முதல் இரண்டு வாரம், தேனிலவுக் காலம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கு நின்றாலும், என்ன செய்தாலும், யாரும் எதுவும் சொல்லவில்லை. அப்புறம் தானே ஆரம்பித்தது தலைவலி...

'இங்க என்ன செய்துகிட்டு இருக்க... அங்க ஏன் நிக்கிற, இதை எடு, அதை எடு, கணக்கு எழுது... குடோனுக்கு போ, 'கலெக் ஷனு'க்கு போ, 'ஸ்டாக்' எடு, வாடிக்கையாளரை கவனி, பொருட்களை சுத்தம் செய், அந்த ஆபிசுக்கு போய் இவரை பார்த்து வா...' என்று, ஓய்வில்லாமல் விரட்டினார், முதலாளி. கையில் இருக்க வேண்டிய சவுக்கை, மனிதர் நாக்கில் வைத்திருந்தார்.

'என்ன படிச்சிருக்க நீ... ஒருமுறை சொன்னா பிடிச்சுக்க வேணாமா... சும்மா நின்னுட்டு சம்பளம் வாங்கிட்டு போயிடலாம்ன்னு பார்க்குறியா... அதுக்கு இந்த கந்தசாமி என்ன இளிச்சவாயனா...

'நான் ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பார்த்துட்டு தான் இருக்கேன். வேலைன்னா மசமசன்னு முகம் சுளிக்கிற... சிரிச்ச முகமா இருக்கணும். இது, நாலு பேர் வந்து போற இடம். முகத்த துாக்கி வச்சுக்க இது ஒண்ணும் உன் மாமனார் வீடு இல்ல...' என்று, துவைத்தெடுத்தார்.

நாலு பேர் முன், நாக்கை பிடுங்கிக் கொள்வது போல் பேசியதில் குமைந்தேன். இந்த இம்சைக்கு, ரெண்டு மாடு மேய்க்கலாம் போலிருந்தது. சமயத்துக்காக காத்திருந்தேன். அப்போது தான், 'அமலா டிரேடர்ஸ்' என்ற ஒன்று, புதிதாக ஆரம்பித்திருந்தனர்.

'உங்கள் அனுபவம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்; எங்கள் இடம் உங்களுக்கு சுதந்திரமாக இருக்கும்...' என்று, 'ரைமிங்'காக அழைப்பு வைக்க, ஒப்புக் கொண்டேன்.

'அதெல்லாம் முடியாது...' என்று சட்டையை பிடித்துக் கொண்டார், கந்தசாமி.

'நாலு மாசம் நாயாய் கத்தி தொழில் சொல்லித் தருவேன்; நீ தொங்கல்ல விட்டுட்டுப் போவீயா... இதுவரைக்கும் வாங்கின சம்பளத்தை வச்சுட்டு போ... இல்லேன்னா, உன் இடத்துக்கு ஒரு ஆளை விட்டுட்டுப் போ...' என்றார்.

அந்த நேரம் வந்தான், சுரேஷ்.

'எங்கேயும் வேலை கிடைக்கல; அட்டெண்டர் வேலைக்கு போனாலும் ஓவர் தகுதின்னு அனுப்பிடுறாங்க; அதிகம் படிக்கிறது ஆபத்து போலிருக்கு...' என்றான்.

'அழாதே...' என்று சொல்லி, கந்தசாமியின் முன் நிறுத்தி, 'டிகிரி ஹோல்டர், எனக்கு வேண்டியவன்; வேலை செய்ய சலிக்காதவன்...' என்று தள்ளி விட்டு, 'எஸ்கேப்' ஆனவன் தான். அதன்பின் அவனை சந்திக்க முயற்சிக்கவே இல்லை. பயம் தான்.

ஆனால், இப்போது, நன்றி சொல்லி, 'ட்ரீட்' வேறு தருகிறானே என்று நினைத்து, ''எப்படி சுரேஷ்... நம்ப முடியலையே... அந்த மனுஷன் கரும்பா பிழிஞ்சு, சாறு எடுத்து, சக்கையாக்கி இருப்பானே,'' என்றேன்.

''கரும்ப பிழிஞ்சா தானே, இனிப்பான சர்க்கரை கிடைக்கும்.''

''தத்துவத்தை தள்ளு, விஷயத்தை சொல்லு... அந்த கிழத்துக்கு என்ன சொக்குப் பொடி போட்ட?''

''அவர் சொன்னதையெல்லாம் செய்தேன். அதை வேலையா நினைக்கல, பாடமா நெனச்சேன். மெல்ல மெல்ல தொழிலை கத்துக்கிட்டேன். அதனுடன் நன்றி, விசுவாசம். பொறுப்பை துாக்கி தலையில வச்சாரு. கூடவே, வசதியையும் செய்து கொடுத்தாரு.

''இப்ப, நீ அங்க வந்தாலும், எனக்கு சமமா உட்கார விட மாட்டாரு. ஆரம்பத்திலிருந்து வரணும். உனக்கு பின்னால சேர்ந்தவங்க எல்லாம், இப்ப சீனியர் ஆயிட்டாங்க... அவங்களுக்கு கீழே சங்கோஜமில்லாமல் வேலை பார்க்கணும்,'' என்றான்.

கண்களை மூடி யோசித்தேன். சரிப்படாது என்று தோன்றியது.

புது கம்பெனியில் சேர்ந்த போது, வேலை இல்லை. சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுத்தனர். பின், கொஞ்சம் கொஞ்சமாக ஆட்களை சேர்த்து, பொருட்களை சேர்த்து வியாபாரத்தை துவக்கி, அது சுமாரான நிலையை எட்டுவதற்குள், பல ஆண்டுகள் சுவாஹா.

ஆரம்பத்தில் இருந்த மதிப்பும், மரியாதையும் மட்டுமல்ல, சம்பளமும் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. இடையில் ஒரு முறை தான், சம்பள உயர்வு கிடைத்தது. ஆனால், அங்கு அளவிலா சுதந்திரமும், அதிகாரமும் இருந்தது.

இப்போது என்னை பார்த்து பரிகசிக்கிறது பழைய ஸ்கூட்டர் வடிவில்.

''என்ன சொல்ற?''

''என்னத்த சொல்ல... இனிமேல் ஆரம்பத்திலிருந்து சாப்பிட, இது ஒண்ணும் பரோட்டா இல்லையே... முயற்சி செய்கிறேன்,'' என்று, கை குலுக்கி விடை பெற்றேன்.

என் அலுவலகம் என்னிலும் சோம்பலாக இருந்தது. வியாபாரம் சுமாராக போய் கொண்டிருந்தது. நான் உள்ளே நுழைந்ததும், அநியாயத்துக்கு எல்லாரும் வணக்கம் கூறினர். இதெல்லாம் தான் என்னை மந்தமாக்கி விட்டது போலும்.

''சரக்கு எடுக்க பெரியமேடு குடோனுக்கு போகணும்... சாரை கூட்டிக்கிட்டு போகட்டுமா,'' என, என்னை சுட்டிக்காட்டி, முதலாளியிடம் கேட்டான், ஒருவன்.

''அந்த மாதிரி வேலைக்கெல்லாம் அவரை தொந்தரவு செய்யாதீங்க,'' என்றார், முதலாளி.

''பரவாயில்லீங்க... நானே போறேன்; எவ்ளோ நாள் தான் சும்மா வச்சு சோறு போடுவீங்க,'' என்று கிளம்பினேன்.

சு. பஞ்சாட்சரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us