
அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன் கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும். குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், எங்களது பகுதியைத் தாண்டி, தூரத்தில் ஒரு, 118 என்.இ., கார் நின்றிருந்தது.
கார் முழுவதும் அடிப்பட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது அறிமுகம் உள்ள ஒரு அன்பரின் கார் தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த அன்பர், அரசு துறைகளில் ரொம்ப இன்புளுயன்ஸ் உள்ள நபர்; எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், அவரது வேலை சுலபமாக நடக்கும்.
அரசின் டெண்டர்கள், 20 கோடி ரூபாயில் ஆரம்பித்து, 200 கோடி ரூபாய் வரை பெரிய, பெரிய கம்பெனிகளுக்காக பிடித்துக் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர். டெண்டரின் மதிப்புக்கு ஏற்ப, அதன் சிரமத்திற்கு ஏற்ப, ஒன்று முதல் மூன்று சதவீத கமிஷன் வாங்கிக் கொள்வார்.
வருடத்திற்கு இதுபோல மூன்று, நான்கு வேலைகள் முடித்துக் கொடுத்து, நான்கு, ஐந்து கோடி ரூபாய் சம்பாதித்து விடுவார். சம்பாத்தியத்தை எல்லாம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து விடுவார். தனக்கென, ஆடம்பரக் கார்கள் ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்.
செகண்ட் ஹாண்ட், தேர்ட் ஹாண்ட் கார்களை வாங்கி பயன்படுத்துவார். அப்படி வாங்கப்பட்ட கார்களில் ஒன்று தான் அந்த, 118 என்.இ., 'இந்தக் காரை, ஏ.சி.யுடன், 33 ஆயிரம் ரூபாய்க்குத் தான் வாங்கினேன்... கேஸ் கனெக்ஷனுக்கு, 12 ஆயிரம் செலவு செய்தேன். இப்போ இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு ஓட்டி விட்டேன்.
'இதுவே, 12-15 லட்சம் போட்டு புதுக் கார் வாங்கினால், எவனாவது சைடுல வந்து உரசி விடுவானோ, ஆட்டோ வந்து இடித்து விடுமோ என, டென்ஷனிலேயே கார் ஓட்ட வேண்டும்... குறுகிய தெருக்களில் தைரியமாக செலுத்த முடியாது...
'பழைய, விலை குறைந்த கார் என்றால், இந்த பயம் எல்லாம் தேவை இல்லை... உரசுறியா, உரசிக்கோ... இடிக்கிறியா, இடிச்சிக்கோ... மேடு, பள்ளமான ரோடா... நோ ஒர்ரி...' இப்படி ஒரு லாஜிக் சொல்வார்!
இந்த அன்பர், கொஞ்சம் ÷ஷாக்கு பேர்வழி... ஆள் அழகாக, டிரிம்மாக இருப்பார். பார்க்க, 43 வயது ஆசாமி போல இல்லாமல், 35 வயதுக்குள் தோற்றமளிப்பார். அதற்கு, அவர் எப்போதும் அணியும் டி - ஷர்ட்டும் ஒரு காரணம்.
கம்மிங் பேக் டு த பாயின்ட்...
அந்த கார் மேற்படி அன்பரின் கார் தானா என்பதை உறுதி செய்து கொள்ள, அருகே சென்ற போது, செல்போன் அழைத்தது. பேசியவர் மேற்படி அன்பரே தான்...
'மணி... நான் தான் பேசுறேன்... இங்கே, காருக்குள் ஒரு தோழியுடன் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் நானே அங்கு வருகிறேன்...' என்றார்.
மிகக் கருப்பான கார் கண்ணாடிக்குள் இருந்து, நான் அவர் காரை அணுகுவதைப் பார்த்து போன் செய்திருக்கிறார்.
'ஓ.கே.,' என்று என் இடத்திற்கு நான் திரும்பவும், நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த அன்பரை மறந்தே போனேன்.
அரை மணி நேரம் சென்று இருக்கும்... பத்து நண்பர்களுக்கும் மேல் வந்து விட்ட நிலையில், மேற்படி அன்பர், கும்பலில் கலந்து, என் புறங்கையை வெளியே தெரியாமல் சுரண்டி, தன்னுடன் தனியே வரும்படி சைகை செய்தார்.
நண்பர்களுக்கு சந்தேகம் வராத வகையில் நைசாகக் கழன்று, அந்த அன்பருடன் அவர் கார் நோக்கிச் சென்றேன். காரின் முன்பக்க இடது டோர் கண்ணாடி இறக்கப்பட்டு இருந்தது... காரினுள்ளே அழகான, 22-23 வயதுப் பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது!
அப்பெண்ணிடம், 'ஹி இஸ் மணி... மை பிரெண்ட்...' என, அன்பர் அறிமுகம் செய்யவுமே, அப்பெண், தன் வலது கரத்தை காரின் வெளியே நீட்டி, 'ஷேக் ஹேண்ட்' கொடுக்கும் விதமாக, 'அயம் ரேஷ்மா...' என்றாள்... நான் கை கூப்பி வணக்கம் சொன்னேன்.
ஒரே வினாடியில் அவளை அவதானித்தேன். கழுத்து வரை சுருள், சுருளான கேசம்... கண்ணில் பவர் கிளாஸ், மீடியமான தேகம்... களையான முகம்!
பின்னர், 'பீ சீட்டட்... ஐ வில் கம்...' என, அப்பெண்ணிடம் கூறிவிட்டு, என்னை தனியே அழைத்துச் சென்றார்.
'மணி... நம்பவே முடியாத சம்பவம்ப்பா... சாயங்காலம், 7:00 மணி அளவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் போய், என் தம்பி, அமெரிக்காவில் இருந்து, 'ஈ-மெயில்' ஏதும் அனுப்பி இருக்கிறானா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்...
'அதன் பின், 'சேட்' செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்போ திடு, திப்புன்னு யாரோ என்னை முறைச்சு பார்ப்பது போல ஒரு பீலிங் வரவே, மானிட்டரில் இருந்து கண்ணை எடுத்து திரும்பிப் பாத்தேன்...
'இந்தப் பெண்... ரேஷ்மா... வைத்த கண் எடுக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்! நான் திரும்பிப் பார்த்ததும், தன் பார்வையை மாற்ற, என் அருகே காலியாக இருந்த கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாள்.
'அது சரியாக வேலை செய்யவில்லை என்றதும், அந்த சென்டரின் அதிபர், எனக்கு நாலு சீட் தள்ளி அவளை அமர வைத்தார். இத்தனையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.
'இரண்டு நிமிடக் கரைசலில் அப்பெண் என்னிடம் வந்து, என் ஈ-மெயில் முகவரி கேட்டாள்... ஏன், எதற்கு என்று கேட்காமலேயே, என் மெயில் முகவரியைக் கொடுத்தேன்.
'அவள் கம்ப்யூட்டரில் இருந்து எனக்குத் தகவல் அனுப்பியுள்ளாள்... அது என்னை வந்து அடையவில்லை என்பதை, தன் கம்ப்யூட்டர் மூலமே அறிந்தவள், என்னிடம் திரும்ப வந்து, 'யாகூ ஐடி ஏதும் இருக்கா... அதைக் கொடுங்கள்...' என்றாள்... கொடுத்தேன்.
'பர்சனல் சாட்டுக்கு வரும்படி என்னை அழைத்தாள்... பர்சனல் சாட்டில் நுழைந்ததும், 'நீ ரொம்ப அழகாய் இருக்கே... உன்னுடன் நேரில், தனியா பேசணும் போல விருப்பம் இருக்கு... வெளியே போகலாமா... உன்னிடம் கார் இருக்கிறதா...?' எனக் கேட்டாள்.
'இவ்வளவு அழகான இளம்பெண், 'தனியே பேசணும், 'வா'ன்னு கூப்பிட்டா. எந்த ஆண் மறுத்தாலும், நான் மறுக்க மாட்டேன். இருந்தாலும் அவள், 'புரொபஷனலா?' நல்ல பெண்ணான்னு தெரிஞ்சுக்க விரும்பி, 'நீ யார்... என்ன செய்யுற? படிக்கிறியா? வேலை பார்க்கிறியா? சொந்த ஊர் எது?'ன்னு கேட்டு, கம்ப்யூட்டர் பட்டனைத் தட்டினேன்.
'உடனே அவளிடமிருந்து பதில் வந்தது. தன் பெயர் ரேஷ்மா என்றும், வயது 23, எம்.பி.ஏ., பட்டதாரி, இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் ஒன்றில் பணி, சம்பளம் விபரம், சொந்த ஊர் திருவனந்தபுரம், ஹாஸ்டலில் தங்கி இருப்பதாகவும் தகவல் அனுப்பினாள்.
'சரி... இவள் தொழில் முறை பெண் அல்ல என்பதை உறுதி செய்து, 'இந்த இன்டர்நெட் சென்டரின் அதிபர் எனக்கு நன்கு அறிமுகமானவர்... அதனால், சென்டரின் வாசலில் நின்று காரில் ஏற வேண்டாம்... அருகே உள்ள தெருவில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணு... என் கார் நம்பர் இது தான்...' எனத் தகவல் அனுப்பினேன்!
'அடுத்த, 15வது நிமிடத்தில் அப்பெண்ணை, பஸ் ஸ்டாப்பில் இருந்து, 'பிக்-அப்' செய்தேன். காரில் ஏறியது தான் தாமதம்... அப்படியே என் தோளில் சாய்ந்து, கட்டி அணைத்து விட்டாள்.
'பின்னர், பீச்சுக்குப் போகச் சொன்னாள்... இங்கே வந்து பழக்கமான இடத்தில் நிறுத்திக் கொண்டேன். 'மேஜர்' விஷயம் தவிர, மற்றவை அனைத்தும் முடிந்ததும்... 'அதற்கு' அனுமதி மறுக்கிறாள்...' என்று அவர் முடித்ததும், எனக்கு பயங்கர கல்சுரல் ஷாக் — பண்பாட்டு சீரழிவை நினைத்து, அந்தப் பெண்ணின் முகம் கண்ணில் வந்து போனது... இந்தப் பெண்ணா? இந்தப் பெண்ணா என நினைத்து மனம் குமைந்தது... நெஞ்சு பாரமானது...
அடுத்த அரைமணி நேரமும் இதையே நினைத்து மனபாரமாகி தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வுடனேயே இருந்தேன்.
கும்பலில் பெரியசாமி அண்ணாச்சி, 'ஜிஞ்சர்' சிக்கனை, 'டிஞ்சர்' சிக்கன் என்று சொல்ல, எல்லாரும் விழுந்து சிரித்து, அண்ணாச்சியைக் கிண்டலடிக்க, வலுக்கட்டாயமாக அதில் கலந்து, இதை அப்போதைக்கு மறந்தேன்!
இருந்தாலும், சமுதாயத்தின் பண்பாட்டுச் சீரழிவை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை! இதைப் படித்த உங்களுக்கு?
***

